ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2021

விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இன்று பூமி உள்ளது - ஈஸ்வரபட்டர்

 

இன்று இந்தப் பூமியில் மனிதனின் “தேவையின் வேகம்” விஞ்ஞானத்தின் அலையால் விஞ்ஞானத்துடனே ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் எண்ணச் சுழற்சியே விஞ்ஞானத்துடன் ஒன்றிய நிலையில்
1.தன் ஞானத்தை வளர்க்கக்கூடிய உணர்வு குண சித்து நிலையின் செயலுக்கு
2.நம் பூமியின் மனித ஆத்மாக்களின் ஈர்ப்பை எடுக்கக்கூடிய நிலையும்
3.சப்தரிஷிகளும் சித்தர்களும் அவர்கள் பெற்ற சக்திகளை மெய் ஞான விளைச்சலாக
4.இப்பூமியில் விளைய வைத்து அதன் மகசூலைப் பெருக்கச் செயல் கொள்கிறது.

ஆனால் இன்று இப்பூமியில் விஞ்ஞானத்தால் வாழ்ந்திட்ட செயற்கையின் செயல் குண உணர்வுடன் உள்ள நிலைகளை மெய் ஞானம் கொண்டு
1.எண்ணத்தால் மனித குணங்களைப் பக்தி ஞானம் என்ற உயர் குண உணர்வு எண்ண சுவாசம் எடுத்து
2.நல்ல உணர்வில் தான் (சப்தரிஷிகள்) பெற்ற சக்தி அலையைப் பயிர் செய்ய
3.அவ்வுணர்விற்கே மனித எண்ணங்களைத் திருப்ப முடியாமல் உள்ளது
4.விதியின் பயன்… விதியின் பயன்… என்று முன்னோர்கள் உணர்த்திய விதிச் செயலாகவே இந்தப் பூமி உள்ளது.

காந்த மின் அலையைப் பலவாகப் பல ரூபங்களில் பிரித்தெடுத்து விட்டான்… இன்னும் பிரித்து எடுக்கின்றான். உலகையே நிலை தடுமாற நிகழப் போகும் மாற்றத்தின் வித்தையும் ஊன்றிவிட்டான்.

இன்று இப்பூமியில் நடக்கும் சில இடங்களின் மாற்ற நிலைகளும்… போர்களும்…
1.இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே முழுமையாக விஷமாக்கி விட்டது.
2.அதனால் உணவாக உட்கொள்ளும் பல பொருள்கள் விஷத் தன்மையில் கூடப் போகின்றன.

வரப் போகும் எதிர்கால முறை எல்லாமே விஞ்ஞான வளர்ச்சியில் பூமியின் இயற்கைச் சக்தியை உறிஞ்சி எடுத்ததனால் பூமியின் வலுக் குன்றி “தன் வலுவைத் தான் பெருக்க…” நிகழப் போகும் மாற்ற குணம் நெருங்கிவிட்டது.

சப்தரிஷிகளும் பல கோடிச் சித்தர்களும் தன் சக்தி உணர்வின் செயலைக் குன்றவிடாமல் வளர்த்துக் கொண்டிருந்தால் தான்
1.ஞானக் கரு உரு மனிதனை உண்டாக்கி
2.ஞானத்தால் வளரக்கூடிய சக்திகளின் வளர்ச்சிக்கே சக்தி கூடும்.

ஊரே உலகமே மாறு கொண்டு அழியும் தருவாயில் நம் உயிராத்மா மேலா…? நாம் மட்டும் இருந்தென்ன பயன்…? எல்லாமே விஷமாக உள்ள பொழுது ஜெப முறையில் எப்படித் தான் நாம் இருந்தாலும் விஷத்தின் சுழற்சியில் சிக்க்த்தானே வேண்டும்…! என்ற வினா எழும்பலாம்.

இம்மனித ஜீவ உடலில் உணர்வின் எண்ண அலையை நல்ல உரமான சக்தி உரத்தை இட்டு ஆத்ம பலம் என்னும் ஞான பலத்தைக் கூட்டி
1.ஒவ்வொரு அணுவையும் உணர்வின் எண்ணத்தால் ஒளியின் அணுவாக உணர்வாக்கி விட்டால்
2.விஷமுடன் நாம் இருந்தாலும் அந்த விஷம் நம் உடலில் பாயாது.

அதற்குகந்த பக்குவத்தைத்தான் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் இங்கே வெளிப்படுத்தும் தன்மையில் பக்குவப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

1.ஓர் ஆத்மா சக்தி கொண்டு வந்தால்
2.அச்சக்தியைக் கொண்டு பல சக்தியை வளரச் செய்யத்தான்
3.இந்தத் தியானத்தின் மூலம் என்ற ஆத்ம பலம் கொள்ளுங்கள் என்று உணர்த்துகின்றோம்.

எல்லாம் போகும் பொழுது நாமிருந்து என்ன பயன்…? என்று எண்ணாமல் ஓர் ஏக்கர் நிலத்தில் பத்து மூடை நெல் வந்தால் எல்லாமே உணவாகி விட்டால் விதை நெல் வேண்டுமல்லவா…!

விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மீண்டும் பயிர் செய்ய முடியும். குண வம்சமே அழிந்து விட்டால் அதன் குண வளர்ச்சியின் விதை வேண்டாமா…?

அதைப் போல் உணர்வால் எடுக்கும் தியானம் கொண்டு ஆத்ம பலம் என்ற ஞான வளர்ச்சியின் வழிக்கு வாருங்கள்.

1.உற்றார் உறவினர் என்ற சுழற்சியில் உணர்வின் எண்ணத்தைப் பதியச் செய்து
2.அதே சுழற்சி வலையில் சிக்குண்டு சிதறாமல்
3.உணர்வின் எண்ணத்தை உயர் தியானத்தால் ஞானம் கொண்டு
2.ஒவ்வொரு ஜீவ பிம்ப உடல்களையும் உம் எண்ண உணர்வால்
3.நல் உணர்வின் அலையைப் பாய்ச்சி உம் உணர்விற்குப் பலம் கூட்டுங்கள்.

இந்தப் பூமியில் பயிராகியுள்ள “மனித மகசூலின் விதையாக நீங்கள் இருக்க…” உணர்வின் எண்ணத்தை ஒவ்வொருவரும் நற்குணத் தியானமாக வழியமைத்துக் கொள்வீர்களாக..!