ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2021

பதினெட்டாம் பெருக்கு

 

ஆற்றில் வெள்ளம் செல்கிறது என்றால் அந்த வெள்ள நீரை நாம் வயல்களிலே அப்படியே பாய்ச்சினால் பயிர் பச்சைகளை எல்லாம் அது அடித்துச் சென்றுவிடும்.

அதைப் போன்று இந்த வாழ்க்கையின் நிமித்தம்...
1.நாம் அதிக ஆசையின் உணர்வுகளைக் கொண்டு சென்றால்
2.வெள்ள நீர் செல்வது போல் மற்றது சிந்தனை இல்லாது ஒருநிலைப்படுத்திக் கொண்டு போகும்.
3.வேறு செயல்களைச் சீராகச் செயல்படுத்தவிடாது

ஆனால் அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் கொண்டு வரப்படும் போது நமக்குள் இருக்கும் தீமைகளை எல்லாம் அது அடித்துச் செல்லும்.

ஓர் வெளிச்சத்தைப் போட்டோம் என்றால் அங்கிருக்கும் இருளைப் போக்கிப் பொருள்களை எல்லாம் காணச் செய்யும்.

இதைப் போன்று தான் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் இணைப்போம் என்றால் அது நமக்குள் அது பெருகி நம்மை அறியாது சேர்ந்த இருளைப் போக்கிவிடும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் வெள்ளத்தை நமக்குள் பாய்ச்சி நம்மை அறியாது வந்த தீமையான வினைகளைப் போக்கி மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பெருகச் செய்வதே “பதினெட்டாம் பெருக்கு...”

பதினெட்டு என்றால்...
1.உலகை அறியும் தன்மை பெற்றவன் மனிதன்... அந்த உயிரின் தன்மை பத்தாவது நிலை அடையும் தருணம் பெற்றது.
2.எட்டு என்பது அஷ்டதிக்கும் “எட்டி” அதை எல்லாம் உணரும் நிலையைத் தெரிந்தவன் மனிதன்.

அனைத்தையும் அறியச் செய்யும் மனிதனின் ஆறாவது அறிவால் மகரிஷிகளின் அருள் ஒளியைத் தனக்குள் பெருக்கி
1.அஷ்டதிக்கிலேயும் தன் ஒளியின் சுடரைப் பாய்ச்சி
2.எந்தத் திக்கில் எது வந்தாலும் அந்த இருளை மாய்க்கும் நிலைகள் பெற்றது.

அஷ்டதிக்கிலும் தீமை என்ற நிலையில் இருள் சூழ்ந்தாலும் சப்தரிஷி மண்டலம் ஒளியாகப் பெருக்கிக் காட்டுகிறது. துருவ நட்சத்திரமும் தன் அருகிலே வரும் இருளை எத்தகைய நஞ்சாக இருந்தாலும் அதை அடக்கி ஒளியாகத் தனக்குள் வீசுகின்றது.

இது தான் அந்த மகரிஷிகள் காட்டிய நிலைகள்.