ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2021

வைகுண்ட ஏகாதசி அன்று உடலை விட்டுச் செல்லும் பொழுது குருநாதர் எம்மிடம் சொன்னது என்ன…?

 

பல அற்புதங்களை நான் செய்து காட்டினேன். அந்த அற்புதங்களிடத்தில் மயங்கியிருந்தோர் உண்டு. அதன் வழியில் என்னை அணுகியவர்கள் பலர்.

என்னிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ள எப்படி எல்லாம் வந்தார்கள் என்பதைத் தெரிந்து கொள் என்றார் குருநாதர்.

என்னிடம் எதை நாடி வந்தார்கள்...?

எனக்குச் சொத்து வேண்டும். சுகம் வேண்டும்…. உடல் நலம் வேண்டும் என்றும் எனக்கு “அந்த அருள் வேண்டும்… இந்த அருள் வேண்டும்…” என்று தான் கேட்டார்கள்.

1.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும்
3.உலக மக்கள் அவர்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும்.
4.பிறருடைய குடும்பங்களை நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.எங்கள் பேச்சால் மூச்சால் அனைவரின் துன்பங்கள் அகல வேண்டும். 6.நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் நலம் பெற வேண்டும் என்று “இதைப் பற்றிக் கேட்பார்... யாரும் இல்லை”.

அத்தகைய மனம் உள்ளோர் என்னை அணுகி வந்தார்கள்.
1.“தனக்காகத்தான்… கேட்டார்களே தவிர…
2.எல்லோரும் நலம் பெறவேண்டும்...” என்ற கேள்வியே அங்கே எழவில்லை.

ஆனால் அத்தகைய தன்மை பெற்றோர்களும் மற்ற எல்லோரும் அருள் ஞான சக்தி பெறவேண்டும் என்று நான் எண்ணினேன். நான் அதைப் பெற்றேன்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு வைகுண்ட ஏகாதசி அன்று நான் உடலை விட்டுச் செல்லப் போகின்றேன்.

ஆனால் நீ எதை எண்ணப் போகின்றாய்…? நீ எதைப் பெறப் போகின்றாய்…? நீ பெறவேண்டிய தகுதிகள் எது…? அதைப் பெறுவது எப்படி…? என்று பல வினாக்களளை எழுப்பி இதையெல்லாம் எமக்குள் தெளிவாக்கிக் காட்டினார்.

இந்த உடலை விட்டுச் சென்றபின் நீ என்னுடன் இணைந்து வர வேண்டும் என்றால் “நீ எதை எண்ண வேண்டும்…?” என்றும் சொன்னார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி குரு பெறவேண்டும். அவர் அழியாத ஒளியின் சரீரம் பெற வேண்டும். அவர் பேரின்பப் பெரு வாழ்வு வாழ வேண்டும். பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.

இவ்வாறு அந்த அருள் வழி குரு பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அந்த குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார்.

ஆகவே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அவ்வாறு ஆகின்றாய்…! என்று உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.