ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2021

கூடுதுறை…. சங்கமம்… பற்றிய விளக்கம்

 

நீர் ஓடும் இடங்களில் பார்க்கலாம். ஒரு பக்கம் செம்மண்ணாக இருக்கும். இன்னொரு பக்கம் வண்டல் மண்ணாக இருக்கும். இன்னொரு பக்கம் எந்த நிறமும் இல்லாது நன்னீராக இருக்கும்.

1.இந்த மூன்று நீரும் கூடுதுறை என்ற நிலையில் கலக்கப்படும் பொழுது
2.சிறிது தூரமே இதன் கலர்கள் அங்கே தெரியும்.
3.பின் அந்த மூன்றும் ஒன்றாகக் கலந்து சங்கமமாகி வேறு ஒரு நிலையாக மாறும்.

இதைப் போன்றுதான் நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் “நமக்குள் கூடுதுறை போன்று ஆகி… உடலுக்குள் சங்கமம் ஆகின்றது…!
1.அதிலே எதனின் குண நிலை அதிகரிக்கின்றதோ
2.அதன் வழி கொண்டு தனக்குள் பெருகுகின்றது.

இதனை நாம் தெளிவாக்கிக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

காரணம் நாம் அனறாடம் பலருடன் பழகுகிறோம். அவர்கள் தீமைகளையும் கஷ்ட நஷ்டங்களையும் பார்க்க நேர்கின்றது... நுகர நேர்கிறது. நுகர்ந்த பின் அவர்களுக்குப் பண்புடன் உதவி செய்கின்றோம்… பரிவுடன் அவர்களைக் கவனிக்கிறோம்.

ஆக அந்தப் பரிவும் பண்பும்
1.அவர் உடலிலிருந்து வரும் கஷ்டங்களையும் சங்கடங்களையும் நுகரச் செய்து
2.அவர் வேதனைப்படுகிறார் என்று உணர்த்துகின்றது
3.இருந்தாலும் அது நமக்குள் சங்கமம் ஆகி விடுகின்றது.

அவர்கள் மேல் உள்ள பற்று நமக்குள் சங்கமமாகி அவர்களைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அதே உணர்வு நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

அப்போது அவர்களைப் பாதுகாக்க நாம் முற்படுகிறோம். ஆனால் அந்த மனித உடலில் விஷத்தன்மையான உணர்வுகள் பட்டுத் தான் அவரைத் துடிக்கச் செய்கின்றது. அதனை நாம் நுகரப்படும் பொழுது அந்த வலிமை நமக்குள் வந்து நம் நல்ல அணுக்களைச் சீர்கெடச் செய்கின்றது.

அவர் எப்படி அம்மா... அப்பா... என்று அலறினாரோ அதே உணர்வு நமக்குள் சங்கமமான நிலைகள் கொண்டு அதன் வழியில் அதைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது.

இப்படித்தான் மனித வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே தீமைகள் வந்து சேர்கிறது.

1.பரிவுடன் பண்புடன் ஒருவரை நாம் காக்க வேண்டும் என்று செயல்படும் பொழுது
2.நுகர்ந்ததை உயிர் இயக்கி நம் உடலுக்குள் சங்கமமாக்கி விடுகின்றது
3.அதன் உணர்வின் அணுக்களாக நமக்குள் அதை வளர்க்கச் செய்கின்றது.

அது வளரும் பருவத்தில் அந்த உணர்ச்சிகளை உந்தப்படும் போது எந்த மனித உடலில் இருந்து அது வெளி வந்ததோ
1.நம் உடலில் வந்து அணுக்களாக உருவாகி அதற்கு இதை உணவாகக் கொடுக்கின்றது.
2.அது தன் இனத்தைப் பெருக்குகின்றது… அதன் உணர்வாக நம்மை இயக்குகின்றது.

இதனை நினைவுபடுத்துவது தான் ஆடிப்பெருக்கு. ஆகவே ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் எதைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றோம் என்று சற்று சிந்திக்க வேண்டும்.

தீமையை வென்ற ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கினால் அது கூடுதுறையாகி நமக்குள் அருள் ஒளியின் உணர்வுகள் சங்கமமாகும். தீமையை நீக்கும் சக்தியாக இப்படிப் பெருக்க வேண்டும்.

அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.