ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2021

ஆதிசக்தியின் குழந்தைதான் மனித உடலாக உருப்பெற்ற ஆதிமுதல்வன் என்ற விநாயகர் - ஈஸ்வரபட்டர்

 

உணர்வின் எண்ணத்தை “வழி அமைத்து… வழி செல்லுங்கள்…” என்று உணர்த்திய பின் நிலை என்ன…?

உணர்வுடன் கூடிய எண்ணத்தின் சுவாசத்தால் மனித எண்ணத்திற்குத் தன் உணர்வின் எண்ண நிலையை அறிந்து செயல்படுத்தக்கூடிய ஆற்றலும் திறமையும் உண்டு.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப குண நிலையில் மாற்றமுண்டு.
1.தன் உணர்வின் எண்ணத்தைத் தன்னிச்சையில் செயல்படுத்தும்
2.தனக்குகந்த உணர்வு எண்ணத்தின் நிலையில் செல்ல மனிதனுக்கு முடியும்.

ஆனால் சில மிருகங்களின் நிலைக்கு உணர்வுடன் கூடிய எண்ணத்தைச் செயல்படுத்தி வழி கொள்ளும் திறமையில்லை.

அதனுடைய “ஒலி ஈர்ப்பு ஒன்றி…” சுவாசத்துடன் மோதுண்டவுடன் ஒன்றின் குண உணர்வுகொப்பத்தான் அதன் எண்ணத்தின் செயலைக் கொண்டு அதன் இன வர்க்கங்களும் ஒரே உணர்வு எண்ண ஓட்டமாக… ஒன்றுடன் சார்ந்தே… அதன் இன மிருகங்களின் நிலையும் ஒத்துச் செல்லும்.

1.பறவைகள் யானைகள் ஆடு மாடுகள் நீரில் வாழும் சில உயிரினங்கள் இவை எல்லாம்
2.ஒன்றின் ஈர்ப்பின் ஒலி அலை மோதுண்டு
3.அதன் உணர்வின் எண்ணத்தைக் கொள்ளும் நிலை கொண்டு
4.ஒன்றெடுத்த அலைத் தொடர்பு கொண்டே
5.அதன் இனக்கூட்ட வர்க்கங்களும் அதன் பின்னேயே செல்லும்.
6.தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும்… தன் உணவை நாடிச் செல்லும் ஒன்றின் தொடரிலேயே
7.ஒவ்வொன்றின் நிலையும் தொடர்ந்து செல்லும் “கூட்டமாக…!”

மனிதனிலிருந்து மாறு கொண்டு ஒரே நிலையான எண்ண வேட்கைக்குகந்த அமில குண இன ஈர்ப்பின் வளர்ப்புத்தான் மற்ற இனங்கள்.

ஆனால் மனிதன்…
1.ஞான சக்தியால் செயலாக்கும் செயல் திறன் உணர்வின் எண்ணம் கொண்டு
2.மனித குண அமிலத்தையே அசுர குணம் நீக்கி
3.முருகக் குணக் கலவை உணர்வுடன் கூடிய எண்ணத்தை எடுக்க முறைப்படுத்திக் கொண்டால்
4.மனித மகசூலின் வித்தாக நம் நிலை உயருமப்பா…!

இவ்வுணர்வின் எண்ணத்தை உணர்ந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன் உடல் பிம்ப ஜீவ சக்தியின் உயிருடனே உணர்வின் எண்ணத்தை ஞானத்தின் ஈர்ப்புக் குணமுடன் ஒன்றிய அலைத் தொடரின் செயல் நிலை இருந்தால்தான் “செயல்படுத்தும் செயலான ஆதிசக்தியின் செயலுக்கே…” செயல் கூடுகின்றது.

ஆதிசக்தியின் சக்தி தான் அகிலத்தின் சக்தி. அண்டத்தையும் ஆதியையும் படைப்பவளும்… வளர்ப்பவளும்… மாற்றுபவளும்… அவளே…!

அப்படியிருக்க ஆதிமுதல்வன்… முதலாமவனே விநாயகனே… என்று விநாயகரை மூல முதல்வன் என்று “முதல் தெய்வம் விநாயகன்” என்று வணங்குகின்றோம்.

மூல முதல்வன் என்று சித்தர்கள் மூலமாகக் காட்டிய விநாயகனின் நாமத்தின் தெய்வ சக்தியென்ன...?

ஆதிசக்தியின் அமில சக்தியின் உருவாக… மூலவனாக… விநாயகனை
1.மனிதனின் உரு கரு வளரும் அமிலப் படைப்பின் உரு நிலையின் உருவிற்குத்தான் (மனித உடலை)
2.அந்த விநாயகரின் நாமத்தைச் சூட்டினார்கள்.

சித்தர்கள் உணர்த்திய ஒவ்வொரு செயலுக்கும் பொருள் உண்டு. ஆனால் காலப் போக்கில் உணர்ந்து வழிபடும் நிலை மாறிவிட்டது.

இன்றுள்ள கால நிலையில் உருண்டோடிய காலங்களுடன் நம் உணர்வின் எண்ணத்தை உருள விட்டு நம் சக்தியை அச்சுழற்சியிலேயே சுழன்று கொண்டுள்ளோம்.

ஆக… உண்மை எது என்று அறியும் நிலையை மாற்றி அறிந்துணரும் ஆக்கத்தின் வளர்ப்பு குணமுடன் இன்றுள்ள இக்கால நிலையில்
1.சமுதாயச் சுழற்சியில் சிக்குண்டு அதன் ஈர்ப்புடன் நம் சக்தியையும் கலக்க விட்டு
2.மிருக நிலையில் ஒன்றின் உணர்வின் எண்ணம் கொண்டு ஒன்றிச் செல்வதைப் போன்ற உணர்வுடன் நாம் சிக்காமல்
3.நம் உணர்வின் எண்ணத்தை உயர் ஞான அமிலமான
4.நற்குணங்களை வளர்த்துக் கொள்ளும் செயல் குண உணர்வாக நாம் உயர வேண்டும்.

உடல் என்ற பிம்பத்தை அழகுபடுத்த ஆடை தேவை. உயிர் என்ற ஆத்மாவை ஞானப்படுத்த வாழ்க்கை என்ற சமுதாய எண்ணம் தேவை. சமுதயாச் சுழற்சி எண்ணத்தால் ஆத்ம ஞானத்தை அழகுபடுத்துங்கள்…!