ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2021

ஞானிகளுக்கும் நமக்கும் இடையில் உள்ள திரையை அகற்றுவது எப்படி…? - ஈஸ்வரபட்டர்

 

படைப்பின் படைப்பனைத்திற்குமே ஒவ்வொன்றிற்கும் அதன் படைப்புக் குணம்… மணம் உண்டு. கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மணமுண்டு.

மணமில்லா உரு நிலை எதுவுமே பெறுவதில்லை.

நம் பூமிக்கு மட்டுமல்ல… பால்வெளி மண்டலத்திலும்… நட்சத்திர மண்டலங்களிலும்… வளர்ந்த பெரிய மண்டலங்கள் எதுவானாலும்… அதன் ஆரம்ப நிலை அமில ஈர்ப்பு ஜீவத் துடிப்பு மணமுடன் ஒலியாகி ஒளியாகி நீராகும் செயல் தான் கொள்கின்றது.

மணம் கொண்ட வழியிலேயே உணர்வும் பெறுகின்றது. மணத்துடன் கூடிய உணர்வால் தான் உணவையே உட்கொள்ள முடிகின்றது.

இந்நிலையை எதற்காக இங்கே உணர்த்துகின்றேன்…?

1.உன் ஜெப நிலையால் உன் உணர்வின் எண்ணத்தை
2.என் பால் (ஈஸ்வரபட்டர்) செலுத்தி எம் அலையின் தொடரை நீ பெற்றால்
3.உன் உணர்வின் உணவாக எம் அலை பாயும்.

ஒரு பருப்பில் பல பருப்புகள் விளைகின்றன. அதைப் போல்
1.எம் உணர்வை நீ எடுத்து
2.உன் உணர்விற்கு உணவாக ஊட்டம் கொடுத்து உன் வளர்ச்சியை நீ பெற்றால்
3.உனக்கும் எனக்கும் மத்தியில் உள்ள திரை விலகி
4.அனைத்தையும் காணும் “அபூர்வ சக்தியாக” ஞான சக்தியின் சித்து நிலை பெற முடியும்.

பருப்பு பருப்பாகவே இருந்தால் பல பருப்பைக் காண முடியுமா…? பயிர் செய்து பலன் பெற்று பலனின் பயிர் வளர் தொடர்பில்தான்… பருப்பென்ற பருப்பு குணப் பயிர் வளர்ப்பே வளர்ந்து கொண்டேயிருக்குமேயன்றி பயிர் செய்யாமல் பயிர் வளர் தொடர் எதுவும் காண முடியாது.

1.ஒன்றின் தொடர் ஒன்று வளர்கின்றது
2.ஒன்று என்றென்றும் வளர தன் வளர்ப்பிற்கு உணவு தேவை.
3.அதைப் போன்று நாங்கள் (மகரிஷிகள்) வளர உன்னை வளர்க்கின்றோம்.
4.நீ வளர நீயும் வளர்க்க வேண்டும் பிறரை…!

வளர்ப்பின் தொடர் வளர்ப்பு வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் எந்த ஒரு வளர்ச்சியும் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1.பயிர் வளர்ப்பு மட்டுமல்ல….
2.ஜீவித வளர்ப்பு மட்டுமல்ல…
3.மண்டலங்களின் வளர்ப்பு மட்டுமல்ல…
4.ஞானிகளின் வளர்ப்பு மட்டுமல்ல…
5.அவ்வாதி சக்தியின் படைப்பின் சக்திக்கே… படைப்பின் படைப்பாகி...
6.பலவற்றின் படைப்பின் தொடர் படைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

வழித் தொடர் வெள்ளாமை ஒவ்வொன்றிலும் வளர்ந்து கொண்டேயிருந்தால் தான் அவ்வளர்ச்சியின் செயல் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

1.முற்றுப் பெற்று… முக்தி பெற்று… முடிவடையும் சக்தி எதுவுமே இல்லை.
2.முழு முதலாக வளர்வது தான் ஆதியின் அந்தச் சக்தி.

உடல் வளர உணவு தேவை. உணர்வின் எண்ணம் வளர ஞானத்தின் உணவு தேவை. உணர்வின் எண்ணத்தை ஞானம் என்ற உணவை உட்கொண்டு இவ்வுடல் என்ற பிம்ப ஜீவ சக்தி கொண்ட வடிவின் அணுவின் உயிரணுக்களுக்கு ஞானத்தை உணவாகக் கொடுத்து
1.ஞானத்தால் வளர்த்த உடல் அணுக்களைச் சித்து நிலை பெற்றிடவே
2.ஞானம் என்ற உணர்வெடுத்துச் “சித்தன்” என்று உருவாகுங்கள்.

இப்பொழுது புரிகிறதா போகன் அமைத்த முருகனின் சிலை எதற்கு என்று…?

தன் நிலை உயர தன் உணர்வு வளர முருகனைப் படைத்தான் போகன். முருகன் சிலையைப் படைத்து முருகா… என்ற நாத உணர்வு ஜீவ சக்தியை உணவாக உட்கொள்கின்றான் இன்றும் போகன்.

1.ஒவ்வொரு சித்தனும் இந்த ஞான பூமியில் தன் ஞானத்தை வளர்த்துக் கொள்ள
2.தன் வளர்ப்பின் வளர்ப்பு வளர வழிப்படுத்திய உண்மைகள் பல உண்டு.

போகரின் வழித் தொடர் முருகன் முருகனின் உருவத்தை காட்டி உணர்வின் எண்ண ஜீவ உணவை உட்கொள்கின்றான் போகன்.

முருகன் ஆலயம் செல்லும் பக்தர்களில் உணர்வால் உண்மை பக்தி பூண்ட ஆயிரம் பக்தர்கள் சென்றால்…
1.ஆயிரத்தில் ஒன்றிரண்டு பக்திமான்களாவது
2.ஞானத்தின் சக்தி பெறச் செல்வதுண்டல்லவா…!

தன் உணவாக நல் மணிகளைத் தான் உண்டு பல மணிகளைத் தருகின்றான் போகன்.