ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2018

நம்முடைய உணர்வுகள் பிறரை இயக்குவது பற்றியும் பிறரின் உணர்வுகள் நம்மை இயக்குவது பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்...! (“டெலிபதி – TELEPATHY”)


ரேடியோ டிவி அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்யும் போது வீட்டிலிருந்தே அந்தந்த ஸ்டேசனை நாம் திருப்பி வைத்து அதைப் பார்த்து கேட்டு மகிழ்கின்றோம்.

இதைப் போல் தான் மனிதர்கள் நமக்குள்ளும்
1.எத்தனை பேரைப் பதிவு செய்து வைத்திருக்கின்றோமோ அந்த எண்ணங்களை எண்ணினால்
2.மீண்டும் அது நமக்குள் நினைவலைகளாக வந்து இயக்கிக் கொண்டே இருக்கும்.

உதாரணமாக வியாபார நிமித்தமாக எத்தனையோ பேரிடம் பழகுகின்றோம். அவர்களைப் பற்றி நமக்குள் பதிவாக்கிக் கொள்கிறோம். அப்படி வியாபாரம் செய்யும் பொழுது கொடுக்கல் வாங்கலில் யாராவது பணத்தைத் தராமல் கொஞ்சம் இழுத்தடிக்கின்றார்கள் என்றால் என்ன நினைப்போம்...?

பாவிப்பயல்...! இப்படிச் செய்கிறானே..! எப்பொழுது தரப் போகின்றானோ...? இவனை எல்லாம் என்ன செய்யலாம்...? என்று மீண்டும் மீண்டும் இந்த ஸ்டேஷனைத் திறந்து (OPEN) பார்த்துக் கொண்டிருப்போம்.
அந்தச் சமயத்தில்
1.நம்மிடம் சரியான முறையில் வியாபாரம் செய்து பணத்தைச் சீராகக் கொடுப்பவர்களைப் பற்றிய நினைப்பே வாராது.
2.அந்த ஸ்டேஷனைத் திறந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் வராது.
3.பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடிப்பவர்கள் மீது தான் எண்ணம் வரும்.

அடுத்தாற்போல இது என்ன செய்யும்...?  பக்கத்து வீட்டுக்காரன் ஏதாவது இடைஞ்சல் செய்து கொண்டிருந்தான் என்றால் அவர்கள் மேல் எண்ணம் வேகமாக வரும்.

இதே மாதிரி சொந்த பந்தங்களில் ஏதாவது செய்தாலும் செ...! இவர்களும் இப்படித்தான் ஏதாவது இடைஞ்சல் செய்து கொண்டிருக்கின்றார்கள்...! என்று இதன் வரிசையிலையே தொடர்ந்து அந்த எண்ணங்கள் வரும்... பார்க்கலாம் நீங்கள்...!

உதாரணமாக குறைகளைப் பற்றி அடுத்தவரிடம் கொஞ்ச நேரம் பேசிப் பாருங்கள்.
1.அப்புறம் அந்தக் குறை... இந்தக் குறை... என்று எல்லாக் குறை உணர்வுகளும் வரிசையில் வந்து கொண்டு இருக்கும்.
2.நல்லது நினைக்கவே வராது.
3.குறைகளை எல்லாம் பேசிய பின் சருக்...! என்று “என்ன உலகம் போங்கள்...?!” என்று
4.குறையைப் பேசியவரும் சரி... குறையைக் கேட்டவரும் சரி... இரண்டு பேருக்குமே இந்த மாதிரி உணர்வுகளின் இயக்க ஓட்டங்கள் தான் வரும்.

நன்றாகப் பேசி கொண்டு இருக்கும் போதே பாருங்கள். ஐயோ... இந்த ஆள் ரொம்பவும் மோசமானர்...! என்று சொல்லுங்கள். அப்புறம் அவரும் அடுத்து “இன்னொருவரை மோசம்...!” என்று சொல்ல ஆரம்பிப்பார்.

கடைசியில் “எல்லோரையும் மோசம்...!” என்று சொல்லும் நிலைக்கு  வரிசையில் வந்துவிடும். ஏனென்றால் அந்த உணர்வுகளின் தொடர் வரிசை அப்படித்தான் வரும்.

இந்த மாதிரி நம் வாழ்க்கையில் வர ஆரம்பிக்கும் போதே உடனடியாக நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு போய் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொல்ளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று அவனிடம் (உயிரிடம்) சொல்லிப் பழக வேண்டும்.

ஏனென்றால் உங்களை  உருவாக்கியது யார்..? உயிர் தான். கண் என்ன செய்கிறது..? உற்றுப் பார்ப்பதை எடுத்துக் கொடுக்கிறது. உயிரில் படுகின்றது. தப்பு செய்கிறார்கள் என்று சொல்கின்றது.

கண்ணின் கருவிழியோ (ருக்மணி) உடலில் எலும்புக்குள் ஊனாகப் பதிவாக்கி விடுகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ (சத்தியபாமா) அந்த மனித உடலில் இருந்து வந்த தவறு செய்யும் உணர்வை இழுத்து நம்மிடம் கொடுக்கிறது. உயிரான காந்தம் என்ன செய்கின்றது..? இழுக்கிறது.

உதாரணமாக ஒரு நாடாவில் (CD) பதிவு செய்கிறோம். பதிவு செய்ததை இயந்திரத்தில் போட்டதும் அந்தக் காந்த ஊசிப் பக்கம் (LASER) போனவுடனே என்ன செய்கிறது? அந்த ஒலி அதிர்வுகளை எடுத்து ஒலியையும் ஒளியையும் நம்மிடம் எடுத்துக் காட்டுகின்றது. இதே மாதிரித் தான்
1.நம் உயிர் ஒரு லேசர் (LASER).
2.நாம் சுவாசித்தது உயிரிலே பட்டவுடன் அதனதன் உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றது.
3.பின் உடல் முழுவதற்கும் அந்த அலைகள் சுழலத் தொடங்குகிறது. (CIRCULATION)

உதாரணமாக அப்போது தீமையான குணத்திற்குப் போனோம் என்றால் அது வீரியம் அடைகிறது. அந்தந்த அணுக்கள் உணவுகளை எடுத்துச் சாப்பிடும். அந்த வழிகளில் தெம்பாகின்றது.

அப்போது நல்லதை எண்ணினாலும் நம்மால் எடுக்க முடிவதில்லை. நமக்குள் நல்ல அணுக்கள் இருக்கிறது. இருந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த தீமை அடைபட்டவுடன் நல்லதை இழுக்கும் சக்தியோ பேசும் சக்தியோ இழந்து விடுகின்றது.

ஆகவே நல்ல அணுக்களுக்கு நாம் எப்படிச் சாப்பாடு கொடுப்பது...?

அத்தகைய தீமையைப் பிளந்து உங்களுக்கு நல்லதைக் கொடுக்கக்கூடிய சக்தியாகத் தான் அந்த ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

அந்த ஞானிகளின் உணர்வலைகள் இப்பொழுது உங்களுக்குள் பாய்கிறது. இந்த அலைகள் பாயும் பொழுது நீங்கள்  கொஞ்சம் அந்த நினைவைக் கொடுத்தவுடனே தீமையான அலைகளைப் பிளந்து ஞானிகளின் ஸ்டேசனைத் திறந்து (OPEN) விட்டுவிடும்.

ஞானிகளின் உணர்வலைகள் உங்கள் உடலுக்குள் சுழலத் தொடங்கும் பொழுது (CIRCULATION) தீமைகளைத் துடைத்து விடும். உங்களுக்குள் நல்ல நினைவாற்றல் வரும். நீங்கள் வேண்டும் என்றால் பாருங்கள்.

யாம் (ஞானகுரு) சொன்னதை இப்படிச் சரியான முறையில் செய்தீர்கள் என்றால்
1.மறந்து போனதையோ அல்லது காணாமல் போன பணப் பையையோ எங்கே வைத்தோம்...? என்று நினைவிற்கு வரும்.
2.இல்லை என்றால் இங்கே இருக்கிறது பாருங்கள் என்று அந்த ஞானிகள் உணர்வுகள் அதை எடுத்துக் காட்டும்.
3.உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.  

முதலில் தெரியவில்லை. சீராக எடுத்துக் கொண்டால் இந்த உணர்வு தன்னிச்சையாக (AUTOMATIC) அந்த இடத்திற்கு உங்களை இழுத்துக் கொண்டு போகும்.

உதாரணமாக ஒரு நண்பரை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றீர்க்ள். அந்த நண்பரை உங்களிடம் இழுத்துக் கொண்டு வரும். நான் நினைத்தேன்... அவர் வந்துவிட்டார்...! என்று சொல்வீர்கள். இது எல்லாம் இந்த இயற்கையின் உணர்வின் இயக்கங்கள்.

ஏனென்றால் நண்பர் மேல் பற்று உள்ளவராக இருக்கின்றீர்கள். அடுத்த தெருப் பக்கம் போய்க் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நண்பரைப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் திடீரென்று எண்ணம் வந்தது என்றால்
1.எங்கேயோ போக வேண்டும் என்று எண்ணிய நண்பரைக் குறுக்காட்டி
2.நீங்கள் இருக்கும் இந்தப் பக்கமாக அழைத்துக் கொண்டு வரும்.

அட...! நான் இப்பொழுது தான் நினைத்தேன்... உடனே நீ வந்துவிட்டாயே...! என்று அவரிடம் சொல்வோம். நண்பன் மேல் இருக்கக்கூடிய பற்றின் உணர்வுகள் இப்படி இயக்குகிறது. இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக்கூடிய நிலைகள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொண்டு மற்றவர்களுக்குள்ளும் அதைப் பாய்ச்சினீர்கள் என்றால் பல அற்புதங்களைப் பார்க்கலாம்.

யாராவது உங்களுக்குத் தீமை செய்ய நினைத்தார்கள் என்றால், அவர்கள் உணர்வில் என்ன செய்யும்...? அந்தத் தீமை அவர்கள் உடலில் தான் வளரும். அது நம்மை ஒன்றும் நம்மைப் பாதிக்காது.

எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நமக்குத் தீங்கு செய்ய நினைத்தார்கள் என்றால் அவர்கள் உடலில் பாதிக்கும்.
1.பாதிக்கும் போது தான் நினைப்பார்கள்.
2.அடடா...! இந்த மனிதனை நாம் என்னவெல்லாம் பேசினோம் பார்...! என்று நிச்சயம் அவர்களுக்குள் உணர்த்தும்.

நாம் பாய்ச்சும் அருள் உணர்வுகள் முன்னாடி போனவுடனே அந்த நினைவலைகள் இயக்கி நம் நினைவு அங்கே வரும்.
1.இந்த மனிதனை நாம் தொந்தரவு படுத்தினோம் பார்...! என்று
2.அப்புறம் நிச்சயம் இந்தத் திருத்தம் வரும்.

மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்துச் சீராக வளர்த்துக் கொள்பவர்கள் இதையெல்லாம் நிச்சயம் அனுபவபூர்வமாக உணர முடியும். அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.