ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2018

அதர்மத்திற்குத் துணையாகப் போனால் அதனின் பின் விளைவுகள் எப்படி இருக்கும்...? என்று தெரிந்து கொள்ளுங்கள்...!


சட்டம் படித்தவர்கள் தங்களுக்குள் உயர்ந்த பண்புகளை வளர்த்திட வேண்டும் என்ற நிலை இல்லாதபடி தீமைகளுக்குத் துணை போகின்றார்கள்.

“படித்துக் கொண்டேன்...!” என்ற நிலைகள் இருந்தாலும் தர்மத்திற்காக வாதிடவில்லை. அதர்மத்திற்காக வாதிடுகின்றார்கள். இது போன்ற நிலைகளில் எந்த அதர்மத்திற்காக வாதிடுகின்றோமோ
1.நியாயத்தை அழித்து வாதிடும் உணர்வுகளை நாம் சுவாசித்தால்
2.அந்தத் தீமையின் விளைவாக சாபமிடுவோரின் உணர்வுகள் நம்மைச் சாடும்.
3.தீமை செய்வோனை நியாயப்படுத்தியும்
4.தீமை செய்யாதவனை தர்மமற்றவன் என்று காட்டப்படும் பொழுது
5.அதிலே பாதிப்படுவோரின் ஆன்மாக்கள் (அவர்கள் இறந்தபின்)  உடலுக்குள் வரத்தான் செய்யும்.

இந்தப் பாவி தான்... எனக்குத் துரோகம் செய்தான்...! இவனால் தான் நான் எல்லாமே அநியாயமானது...! என்ற எண்ணங்கள் கொண்டு குறி வைக்கின்றது கூர்மையாக...! வாதிட்டவரின் உருவைத் தன் உடலுக்குள் எடுத்து வளர்த்துக் கொண்ட பின் அவர்கள் மடிந்த பின்
1.வாதிட்டவர் எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும் சரி
2.அவருக்குள் புகுந்து அவரையும் துன்பத்திற்குள்ளாக்கும்.
3.தான் அனுபவித்த அதே வேதனையை அங்கே உருவாக்கி அந்த உடலையும் நிச்சயம் வீழ்த்தும்.

இப்படி அவனால் வேதனைப்பட்ட வேதனை அணுக்கள் வளர்ந்து இந்த உடலை விட்டு வெளி வந்த பின் இது பாம்பாகவும் தேளாகவும் தான் பிறக்கும்.

இன்று அதர்மத்திற்காக வாதிடலாம். பொருளும் சம்பாரிக்கலாம். புகழும் அடையலாம். ஆனால் சாப அலைகளின் பின் விளைவால் மறு பிறவியின் தன்மை விஷ ஜெந்துக்களாகத்தான் அமையும். இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்..!

வக்கீலுக்குப் படித்த காந்திஜி இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டவர்.
1.ஒவ்வொருவரும் உயர வேண்டும் என்று நீ எண்ணு
2.உனக்குள் அந்த உயர்வின் தன்மை வரும்.

குடும்பத்தில் குறைகள் வந்தால் குறையை நீக்கும் மெய்  ஞானிகளின் உணர்வை அந்த மகரிஷிகளின் உணர்வை நீ சுவாசி...
1.உனக்குள் ஞானங்கள் தோன்றும்.
2.பாசத்தின் நிலைகள் வளரும்.
3.உனக்குள் பண்பை வளர்க்கச் செய்யும்.
4.பகைமையை அகற்றச் செய்யும்...! என்ற பேருண்மையினுடைய நிலைகளைத் தெளிவாக்கினார் நம் காலத்தில் வாழ்ந்த காந்திஜி.

அவர் அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு அருள் ஞானி. உலக மக்கள் அனைவரும் ஒன்றே...! என்ற நிலையைப் பறை சாற்றியவர்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து இந்த வாழ்க்கையில் அருள் உணர்வுகளை வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அருள் வாழ்க்கை வாழுங்கள். அருளானந்தம் பெறுங்கள். அதுவே அழியாத செல்வம்.

உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைந்து அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அழியாத நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழுங்கள்.