ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 8, 2018

“குரு பலம்…” பெறுவது எப்படி…?


நான் தியானமிருந்து விட்டேன். ஆகையினால் குருநாதரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று எண்ணக் கூடாது.
1.என் நினைவு புருவ மத்தியிலிருக்கும் உயிரின் பால் சென்றது.
2.உயிரான ஈசனிடம் வேண்டினேன்.
3.குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை உயிரின் துணையால் நான் சுவாசிக்க நேர்ந்தது.
4.அந்தச் சக்திகளை என் உடலுக்குள் பாய்ச்சி என் தீமைகளை நீக்கினேன் என்று இப்படி வர வேண்டும்.

அதே போல் மற்றவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பாய்ச்சினேன். அவர்கள் தீமை அகன்றது... நோய் நீங்கியது...! என்பது சிறப்பாகும். இப்படிப்பட்ட தொடர்பு… வரிசையாக… சரியான முறையில் இருந்தால் தான் நம் காரியங்கள் எல்லாம் சித்தியாகும்.

மகரிஷிகள் உணர்வை குருநாதர் மூலமாகப் பெற்று நம் உயிர் வழியாகக் கவர்ந்தால் குரு உபதேசித்த உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று இயங்கும்.

குருவே பார்த்துக் கொள்வார் என்று பொதுவாகச் சொல்லி விட்டால்  அவர் என்ன சொல்கிறார்…?
1.நான் எல்லோருக்கும் தான் கொடுக்கின்றேன்.
2.அவர்கள் உயிர் வழியாகக் கவர்ந்து எடுக்க வேண்டும் அல்லவா.
3.அவர்கள் எடுக்கவில்லை என்றால் நான் எப்படிப் பார்க்க முடியும்…?

ஆகவே குருநாதர் சக்திகளைக் கொடுத்தாலும் நாம் நுகர்ந்து அதை எடுக்க வேண்டும். இந்த எண்ணம் நமக்கு வலுவாக இருக்க வேண்டும்.
1.உங்களை நீங்கள் நம்புங்கள் என்று தான் சொல்கிறார்.
2.என்னை நீங்கள் நம்புங்கள் நான் காப்பாற்றித் தருவேன்…! என்று சொல்லவில்லை.

அவர் செய்வார்…! என்றால் நம் உயிருக்குள் நாம் இணைப்புக் கொடுத்தால் தான் அவரும் நமக்குள் அபிஷேகம் செய்ய முடியும்.

நம்முடைய எண்ணம் குருநாதர் கொடுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்வதில் அழுத்தமாக இருக்க வேண்டும்.
1.அது தான் குரு பலம் என்பது.
2.அந்தப் "பிடிப்பு.." இருக்க வேண்டும்.
3.அந்தப் பிடிப்புக்குப் பேர் தான் பற்று…!
4.அதில் நமக்குப் பற்றுதல் வேண்டும்.

குருநாதர் பார்த்துக் கொள்வார் என்றால் அவர் வேலையை அவர் சரியாகச் செய்கிறார். அவர் கொடுக்கும் சத்தை நாம் சரியாக எடுக்க வேண்டுமா இல்லையா…?

இது மிகவும் முக்கியம்…!