ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 15, 2018

ஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் இரகசியம் - முழுமையான பயிற்சி


குடும்பங்களில் அடிக்கடி குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் நாமல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது. உடனே ஆத்ம சுத்தி செய்து நம் குடும்பத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று அதைத் தடுக்க வேண்டும்.

ஏனென்றால் இன்றைக்கு வந்த நிலை அல்ல. தாய்க் கருவில் நாம் சிசுவாக இருக்கும் போதே எத்தனையோ நிலை வந்திருக்கிறது.

நாம் ரோட்டில் போகின்றோம். அங்கே ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு சாபமிட்டிருப்பார்கள். அந்த அலைகள் அங்கே இருக்கும். நாம் அதை உற்றுப் பார்க்கும் பொழுது நமக்குள் பதிவாகின்றது.

ஆனால் நாம் எந்தத் தப்பும் செய்யவில்லை. இந்த மாதிரிச் சாப அலைகள் நம் உடலில் “எத்தனையோ விதமாக... எத்தனையோ வகையில்...!” பதிவாகி இருக்கும். அதெல்லாம் மிகச் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக நீங்கள் கேமராவில் படம் எடுக்கின்றீர்கள். அப்பொழுது ஊடே குறுக்கே யாராவது வந்தால்... படத்தில் சேர்ந்து பதிவாகின்றது அல்லவா...!

அதே மாதிரி ஒரு ஒலிப் பதிவைப் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அங்கே ஊடே யாராவது சத்தம் போட்டார்கள்... என்றால் அதுவும் சேர்ந்து தான் பதிவாகும்.

இதே மாதிரித் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது அனைத்தும் ஊழ்வினை என்ற வித்தாக நம் எண்ணமுடன் சேர்த்துப் பதிவாகும்.
1.அந்த நேரத்தில் வேறு எண்ணத்தில் நாம் இருந்தாலும்
2.இந்த உணர்வு நமக்குள் ஊடுருவுவது தெரிய வரும்.

உதாரணமாக அது சாப அலையாக இருந்தாலும் நம் காரியங்களைத் தடைபடுத்தும் உணர்வாக வரும். ஒரு நல்ல காரியத்திற்காகச் சென்றாலும் மற்றவர்கள் சண்டையிட்டுச் சாபமிடும் உணர்வுகளை நாம் செவி கொண்டு கேட்டவுடனே அதுவும் நம் நல்ல குணத்துடன் இணைந்து கொள்ளும். (JOINT)

எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணி ரோட்டிலே பேசினார்களோ அது எல்லாமே இணைந்து வரும். ஏனென்றால் அந்த உணர்வின் ஒலி அலைகள் வரும் போது
1.சுவாசத்தின் வழியாக அது நம் உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு
2.நம் உடலிலிருந்து மணமாக வெளிப்பட்டு நமக்கே எதிரியாக  வரும்.
3.இப்போது இதைத் துடைப்பது யார்...?

இவ்வாறு இயற்கையின் நிலைகளில் வளர்ச்சி அடைந்தது தான் பல எண்ணங்கள். அதைத்தான் பலராமன் (ராமன் என்றால் எண்ணங்கள்) என்று காவியங்களில் காட்டப்பட்டுள்ளது.
1.ஆகவே பலருடைய எண்ணங்களை அறியும் சக்தியாக
2.அந்த எண்ணங்களின் இயக்கங்களை நமக்குள் உணர்த்துகின்றது.

உணர்த்தினாலும் எப்போது தீமை என்று உணர்கின்றமோ அதை நம் உடலுக்குள் போகாதபடி இங்கேயே பிளக்க வேண்டும். அது தான் நரசிம்மா...!

தீமைகளை நம் ஆன்மாவிலிருந்து பிளக்க வேண்டும் என்றால் உயிர் வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துச் சுவாசித்து உள்ளுக்குள் கொண்டு போக வேண்டும்.

அப்பொழுது தீமையான உணர்வுகள் உள்ளுக்குள் போகாதபடி பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும். இதுதான் ஆத்ம சுத்தி என்பது. நம் காவியத் தொகுப்புகளில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழி நாம் செய்து பழக வேண்டும். கொஞ்ச நாளைக்குச் செய்து பழகி விட்டோம் என்றால் தன்னிச்சையாக வரும்.

ஆனால் முந்தைய பழக்கத்தில் எடுத்துப் பழகிய மற்ற உணர்வுகள் நமக்குள் வலுவாக இருக்கும். ஏதாவது சொல்லிட்டாலும் சரி அதிலேயே தான் நம் எண்ணத்தைச் செலுத்துவோம்.

அப்படிப்பட்ட நேரத்தில் அதாவது அது வலுவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு வந்தாலும் கூட
1.அது இடைவேளியில் வந்து தடுக்கும்.
2.(ஆத்ம சுத்தி செய்யவிடாமல் எண்ணங்களை மாற்றும்)
3.அதையும் நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்.

அப்பொழுது சுதாரித்து மீண்டும் “ஈஸ்வரா... என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி...!” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த உணர்வை வலுவாக எடுத்து அந்தத் தீமையைப் பிளக்க வேண்டும். அப்போது அந்த உணர்வுகள் நமக்குத் தோன்றும்.

காரணம் என்ன என்று கேட்டீர்கள் என்றால் ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறையும். ஆனால் முதலில் நல்ல தண்ணீரை ஊற்றினால் அழுக்கு தண்ணீருடன் கலந்து அழுக்குத் தண்ணீராகத் தான் தெரியும். நல்லதை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் முழுவதும் குறைந்து விடும்.

அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்க இது பெருகும். இது முழுமை அடைந்துவிட்டது என்றால் அது தன்னிலை அடைந்து விட்டது என்று அர்த்தம்.

இந்தத் தியானம் செய்வதற்கு முன்னாடி நம் வாழ்க்கையில் எத்தனையோ தீமைகளைப் பார்த்துப் பதிவாக்கி இருக்கிறோம். ஆனால் இப்பொழுது துடைக்கிறோம். மீண்டும் அது வருகிறது.
1.அது வந்து கொண்டே தான் இருக்கும்.
2.நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
3.இன்றைக்கு வீட்டைச் சுத்தம் செய்து விடுகிறோம் என்றால் மறு நாள் மீண்டும் சுத்தப்படுத்தாமல் இருக்கின்றோமா...?
4.சுத்தமான பாத்திரங்களை வைத்துச் சமைத்தாலும் மீண்டும் சமைக்கும் பொழுது அந்தப் பாத்திரங்களைச் சுத்தப்படுத்தாமல் இருக்கின்றோமா...?

அதற்காக வேண்டித்தான் வாழ்க்கையில் எது வந்தாலும் அதைத் தூய்மையாக்கும் கடுமையான ஆயுதமாக ஆத்ம சுத்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
1.அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திச் செய்யும் பொழுது
2.உங்கள் வாழ்க்கையின் பற்று அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றுகிறது.
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகிறது.
4.பற்று அங்கே வரப்போகும் போது இங்கே பூமியில் பற்றற்றுப் போகும்.

இதை நாம் செய்து பழக வேண்டும். அப்படிச் சென்றவர்கள் தான் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக ஏகாந்தமாக வாழ்கின்றார்கள்.

ஏனென்றால் இந்த உடல் நமக்கு நீடித்த நாள் சொந்தம் அல்ல.

1.இன்று நமக்குச் சொந்தமாக இருக்கிறது.
2.இந்த உடலை வைத்து நிரந்தரமான சொந்தத்தை அந்த ஒளி உடலை நாம் உருவாக்க வேண்டும்.
3.பிறவியில்லா நிலை என்ற அந்தச் சொந்தத்தைக் கொண்டாட வேண்டும்.

விண்ணில் வரக்கூடிய நஞ்சினையும் ஒடுக்கி ஒளியாக மாற்றும் திறன் இந்த உடலை வைத்துத்தான் பெற வேண்டும். இன்றைய செயல் நாளைய ஒளிச் சரீரம்.

ஆனால் முந்தைய செயல் இன்றைய சரீரம். கடவுளின் அவதாரத்தில் வராகன் தீமைகளை அகற்றி நல்ல உணர்வுகளைத் தனக்குள் எடுத்தது.

தீமைகளை அடக்கும் கூர்மையான எண்ணம் கொண்டு கடுமையான சாக்கடையைப் பிளந்து அதற்குள் இருக்கும் நல்லதை நுகர்ந்தது.  தீமையைப் பிளந்த உணர்வுகள் விளைந்து தீமையை நீக்கும் உடலாக மனித உருப் பெற்றது.

இதைப் போல தான் நமக்கு முன்னாடி இன்று இருக்கும் இந்த காற்று மண்டலம் ஒரு சாக்கடை. அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளும் சப்தரிஷி மண்டல உணர்வுகளும் மிதந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கையில் வரும் தீமைகளை எண்ணாது அதைப் பிளந்து அருள் ஞானிகளின் உணர்வை நாம் வலுக் கொண்டு எடுக்க வேண்டும். உடலை விட்டுச் சென்றால் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.
1.இந்த நிலையை ஒவ்வொருவரும் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்.
2.எல்லா நலமும் எல்லா வளமும் பெறுவீர்கள்.