ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 15, 2018

தியானத்தில் எடுக்கும் அருள் சக்திகளை நான் பெறவேண்டும் என்று தனித்து எடுத்தால் வளர்ச்சி இருக்காது...! ஏன்...?


யாம் சொல்லும் வழியில் இந்தத் தியானம் செய்பவர்கள் அனைவருமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும்... மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று இணைத்துப் பழக வேண்டும்.
1.உடலுடன் இருந்தாலும் சரி.. அல்லது
2.உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் சரி இந்த மாதிரி எண்ணித்தான் ஆக வேண்டும்.

திருமணம் ஆகாதவர்கள் தன் தாய் தந்தையருக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும். அந்த அருள் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

(கணவன் இந்த வழியில் இல்லை அல்லது மனைவி இந்த வழியில் இல்லை. என் தாய் தந்தையர் இந்தத் தியான வழியில் இல்லை. அதனால் தான் மட்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணக் கூடாது.)

கூட்டுத் தியானமாக இல்லாமல் தனியாக வெளியூரிலோ அல்லது வேறு இடத்தில் இருக்கும் பொழுது தியானம் செய்தாலும் இதைப் போன்று கணவன்.. மனைவி... தாய்... தந்தையர்... என்று எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று அவசியம் தியானிக்க வேண்டும்.

அந்த அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும். அந்த அருள் ஞானம் எனக்கும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து இணைக்க வேண்டும்.

எங்கே இருந்தாலும் இதைப் போன்று எண்ணி அந்த இணைந்த நிலைகளில் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்கும் இதைப் பழக்கிக் கொடுக்க வேண்டும்.

பக்கத்தில் இருந்தாலும் பக்கத்தில் இல்லாவிட்டாலும் தியானம் இருக்கும் நேரத்தில் அவர்களையும் இந்த மாதிரி எண்ணிப் பழக வேண்டும்.

ஏனென்றால் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இதை இச்சைப்பட வேண்டும். நமக்குள் அதைக் கிரியை ஆக்க வேண்டும்.

1.கணவன் மனைவி இருவரும் “எப்பொழுதும் இணைந்த நிலைகளில்... சிவ சக்தியாக
2.சப்தரிஷி மண்டலத்தில் குடும்பங்களாக வாழ்ந்திடும் மகரிஷிகள் போல்
3.ஒன்றிய நிலைகளில் எல்லோரும் வாழ வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.