ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 10, 2017

தீமையை நீக்கும் உணர்வை “முன்னனியில்” வைத்துக் கொள்ளுங்கள் மிகப் பெரிய பாதுகாப்புக் கவசம் அது

ஒவ்வொரு நேரத்திலும் யாம் உபதேசித்த உணர்வு கொண்டு ஒரு கம்ப்யூட்டரில் செயல்படுத்துவது போல் நீங்கள் வரிசைப்படுத்திக் (PROGRAMS AND COMMANDS) கொள்ளலாம்.

அதன் துணை கொண்டு வாழ்க்கையில் ஒருவருடைய தீமைகள் உங்களுக்குள் வந்தாலும் அல்லது அந்தத் தீமையைக் கேட்டாலும் அடுத்த நிமிடம் தீமைகள் உங்களுக்குள் வளராது தடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணினால் இது (உங்களுக்கு) முன்னாடி வலிமை பெறுகின்றது.

அதே சமயத்தில் எதிரே திடீரென்று ஒரு வாகனம் வந்தாலும் நம்மை ஒதுங்கச் செய்யும்.

1. வீட்டில் தன் பையன் இப்படிச் செய்துவிட்டான்
2. அவன் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்
என்று காலையில் எழுந்தவுடன் இந்த எண்ணத்தில் சோர்வடைந்து விட்டால் இந்த உணர்வுகள் முன்னனியில் வந்துவிடுகின்றது.

அது முன்னாடி வந்துவிட்டால் நாம் போகும் பாதையில் ஒரு சைக்கிள் வருவது கூடத் தெரியாது. ஒரு பெரிய வாகனம் வருவதும் தெரியாது.

அப்பொழுது நம்மை அறியாமலே விபத்துக்கள் நடந்துவிடும்.

எதன் உணர்வு நம்மைச் சிந்தனையைக் குறைக்கச் செய்ததோ இதைப் போல் நம் வாழ்க்கையில் நடந்துவிடுகின்றது.

ஆனால், நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அது முன்னனியில் வந்துவிடுகின்றது. அது நம்மை இயக்கிவிடுகின்றது.

இதையெல்லாம் மாற்றி உங்கள் வாழ்க்கையில் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி இந்த வலிமையான உணர்வுகளைச் செலுத்திக் கொள்ளுங்கள்.

அப்பொழுது அதை முன்னிலைப்படுத்திச் செல்லும் போது
1. தீமை என்றால் விலகி வரும் உணர்வுகளையும்
2. தீமை வந்தால் விலகிச் செல்லும் உணர்வுகளையும்
3. சிந்தித்துச் செயல்படும் ஆற்றல்களையும்
4. வாழ்க்கையில் தெளிந்து வாழக்கூடிய உணர்வுகளையும்
நமக்கு அது ஊட்டிக் கொண்டேயிருக்கும்.

அதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்பதற்குத்தான் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றேன். நீங்கள் கூர்ந்து இதைப் பதிவாக்கிக் கொண்டால் நிச்சயம் உங்கள் நல்ல குணங்களைக் காக்க முடியும்.

ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுங்கள். குரு அருள் உறுதுணையாக இருக்கும்.

என்றும் தெளிந்த நிலையும் நீங்கள் பெற முடியும்.., “பெறுவீர்கள்..,” “பெற்றுவிடுவீர்கள்..,” என்ற தன்னம்பிக்கையில் தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.


என் குருநாதர் நம்பிக்கையில் தான் எனக்குள் சொன்னார். அதே வழியில் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகிறோம்.