ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 14, 2017

“தியானம் செய்ய நேரம் இல்லை..,” என்று எண்ண வேண்டியதில்லை உங்கள் வாழ்க்கையையே தியானமாக்கிக் கொள்ள முடியும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் என்றுமே பெறவேண்டும் என்று எண்ணுங்கள். உங்கள் வாழ்க்கையே தியானமாக்குங்கள்.

ஏனென்றல், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் தீமை என்று வந்தால் அந்தத் தீமை புகாது தடுக்க அருளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள இது உதவும்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உங்கள் நினைவு முழுவதையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதனின்று வரும் பேரருள் பேரொளியை ஏங்கிப் பெறுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் உங்களுக்குள் ஏங்க வைத்து அதை நுகரச் செய்து அந்த வலிமையை ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வலிமையின் துணை கொண்டு உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியை ஊட்ட முடியும்.

உங்கள் கண்ணின் நினைவினை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரம் எப்படி இருக்கும் அது எங்கே இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை.

உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் எங்கேயோ இருக்கின்றார். அவர் இந்த மாதிரி எல்லாம் அவஸ்தைப்படுகின்றார் என்று கேள்விப்பட்டவுடன் உங்களுக்குள் பதிவாகின்றது.

அது நினைவாகும் பொழுது என்ன செய்கின்றது? அவர் அங்கே “எப்படிச் சிரமப்படுகின்றாரோ..! என்ன செய்கின்றாரோ..?” என்று அந்த உணர்ச்சிகள் உங்களுக்குள்ளும் இயங்குகின்றது.

இதைப் போல துருவ நட்சத்திரம் எங்கேயோ இருக்கின்றது. உங்கள் கண்களால் பார்க்க முடியவில்லை. குருநாதர் எனக்குக் காட்டினார். பார்த்தேன்.

அவர் காட்டிய நிலைகள் கொண்டு அதனின் ஆற்றலைப் பெற்றேன். அந்த உணர்வினை இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றேன்.

பதிவானதை நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து உங்கள் கண்களாலேயும் பார்க்க முடியும். இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது
1.அந்த அருள் ஒளிகள் இங்கே படர்ந்து வருவதையும் உங்களால் பார்க்க முடியும்.
2.நீல நிற ஒளி அலைகள் சுழன்று வருவதைப் பார்க்கலாம்.
3.ஒரு வெல்டிங்கைத் (WELDING) தட்டினால் “பளீர்..,” என்று வெளிச்சமாவது போல் தெரியும்.
4.ஏனென்றால், பழக்கப்பட்டோர் உணர்வுகளில் இதைப் பெற முடியும்.

பேசுவது நான் அல்ல. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வே இங்கே பேசுகின்றது.

அவர் ஒளி என்ற உணர்வைப் பெற்றார். அது உங்களுக்குள் வந்து அதைப் பெறும் தகுதி பெறக் கூடிய சந்தர்ப்பம் தான் இப்பொழுது சொல்லும் இந்தத் தியானம்.

ஏனென்றால் அவர் ஒளியான உணர்வை நீங்களும் பெற முடியும்  பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குள் பதிவாக்குவது.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள்.
2.உங்கள் உடலிலுள்ள எல்லா நினைவுகளையும் ஒன்றாக இணைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
3.அதனின்று வரும் பேரொளியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.
4.மெதுவாகக் கண்களை மூடுங்கள்.
5.உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நீங்கள் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு இங்கே வரும் பொழுது உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமையான அணுக்களுக்குத் தீமையின் உணர்வுகள் போகாதபடி இப்பொழுது எடுக்கும் தியானத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நினைவினைச் செலுத்துங்கள். இப்பொழுது
1.புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் அந்த “ஈர்க்கும் சக்தி” பெருகும்.
2.சிலருக்கு வெளிச்சமும் தெரியும்.
3.சிலருக்கு அந்தப் புருவ மத்தியில் “உறுத்தல்” இருக்கும்.
“இதுதான் துருவ நட்சத்திரத்தைத் தியானிக்க வேண்டிய முறை”.

தினசரி காலையில் “படுக்கையில் எழுந்தவுடன்” ஒரு 10 நிமிடமும் இரவு “படுக்கும் முன்பு” ஒரு 10 நிமிடமும் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உடலுக்குள் உள்ள சஞ்சலம் சலிப்பு வெறுப்பு கோபம் போன்ற உணர்வுகளால் விஷத்தின் தன்மையால் ஏற்பட்ட விஷத்தின் தன்மையால் உருவாக்கப்பட்ட அணுக்களுக்கு ஆகாரம் போகாது இப்படித் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

உங்கள் உயிர் என்ற உணர்வுகளில் நமது குருநாதர் காட்டிய அருள் உணர்வுகளை (மேலே சொல்லப்பட்டவைகளை) இதை ஏற்றி வைத்துக் கொண்டு வெளியிலே செல்லுங்கள்

விபத்துக்களிலிருந்து தப்பலாம். தீமைகளிலிருந்து நோய்களிலிருந்து விடுபடலாம். எதிரி என்று இருந்தால் அவர் உணர்வுகள் நமக்குள் இயக்காது தடைப்படுத்திக் கொள்ளலாம். நமது உணர்வுகள் அவரை மாற்றவும் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமையான சந்தர்ப்பமாக இருந்தாலும் அந்த நேரத்திலும் அதை மாற்றிட இதைப் போன்று தியானத்தைச் செய்யுங்கள்.

உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக மாறும்.