ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 18, 2017

அமாவாசை அன்று “இருண்ட நாளில்” முன்னோர்களை அழைக்கின்றோம் – ஞானிகள் சொன்னது என்ன?

அந்த மெய்ஞானிகள் காட்டிய மெய்வழியில் விண்ணின் ஆற்றலை நாம் பெறவேண்டும். அதன் துணை கொண்டு நம்முடைய குலதெய்வங்களை விண் செலுத்த முடியும். பிறவா நிலை அடையச் செய்யலாம்.

கங்கையில் கொண்டு போய் சுட்ட சாம்பலைக் கரைத்தாலோ அல்லது புதைத்து விட்டால் பிண்டம் செய்து வைத்துக் கரைத்து விட்டால் அவர்கள் செய்த பாவங்கள் போகாது.

பாவங்களை மீண்டும் “நாம் சுமந்து கொள்கிறோம் என்று தான் அர்த்தம்.

அமாவாசை அன்று அவர்களுக்குப் பல உணவுகளைப் படைத்து எங்கள் முன்னோர்களை அழைக்கின்றோம் என்பார்கள்.

அமாவாசை அன்று இருண்ட நிலைகள் கொண்டது. உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை இருண்ட நிலைகளில் திருடர்களைப் போன்று அழைக்கின்றோம்.

அவ்வாறு அழைத்து அந்த ஆன்மாக்களை மீண்டும் இருள் கடலில்.., நமக்குள்.., “பிறவிக் கடனுக்கு அழைக்கின்றோமே தவிர அமாவாசை விரதங்கள் என்பது தவறான முறைகள்.

ஞானிகள் சொன்னது அதுவல்ல.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியைக் கூட்டமைப்பாகக் கவர்ந்து அந்த மெய் உணர்வின் தன்மைகளை வலுவான எண்ணம் கொண்டு தியானிக்க வேண்டும்.

பின், உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விட்டு “உந்திச் செலுத்த வேண்டும்.

எல்லோரும் ஒன்று சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை “விண்ணிலே வீசி அங்கே சப்தரிஷி மண்டலத்திற்குள் இணையச் செய்து (இருள் சூழ்ந்த) உடலில் கலந்த நஞ்சினை “அங்கே.., கரைக்க வேண்டும்.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டு அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் ஒளியின் சுடராக நிலைக்கச் செய்யும்  நிலையே “பௌர்ணமி நாள்.

இது தான் ஞானிகள் சொன்னது.

இன்று அமாவாசை நாள். இன்றைக்கு நான் “கறி சாப்பிட மாட்டேன் அதை சாப்பிட மாட்டேன்.., இதைச் சாப்பிட மாட்டேன் என்று சொல்வார்கள்.

எங்கள் அம்மா அப்பாவிற்குப் படைத்துவிட்டு அவர்களின் நினைவாகவே நான் இருந்தேன் என்றால் அது இருள் சூழ்ந்த நிலைகளுக்கே நாம் அவர்களை அழைக்கும் முறை.

ஏனென்றால்,
1.மந்திர ஒலியால் சுவாசிக்கப்பட்ட உணர்வுகள்
2.மீண்டும் ஒலி கொண்டு எழுப்பும் பொழுது அதற்குள் சிக்கப்பட்டு
3.அதை ஆவி வேலைகளுக்கு தன் பசியைப் போக்குவதற்காக மந்திரவாதிகள் வேண்டிய வேலைகளுக்குத்தான் ஆகும்.
4.ஆக, மந்திர ஒலிகளைக் கூட்டி அந்த ஆன்மாக்களைக் கவர்ந்து கொள்ளும் நிலைதான்.., “அமாவாசை.., இருளுக்குள் செய்யும் நிலை.
5.மறைந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும் முறை இது.., ஆகவே இது பிழை கொண்டது.
6.எந்தச் சாஸ்திரியாக இருந்தாலும் சரி.., இது இல்லை என்று எவராலும் மறுக்கவும் முடியாது.
7.உறுதியாகவே உங்களிடம் சொல்கின்றேன்.

காரணம்..,” மக்களின் நிலைகள் பக்தி என்ற நிலைகளில் “உண்மைகள் மறைக்கப்பட்டு,” தீமையின் செயல்களிலேயே நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால், அன்றைய அரசர்கள் “தான் சுகமாக வாழ உடலுக்குள் விளைந்ததைத் பிரித்தெடுத்து அதன் வழிகளில் மற்றவர்களைச் செயலிழக்கச் செய்வதற்காகச் செய்யப்பட்டவைகள் தான் அது.

அரசர்கள் இன்று இல்லை என்றாலும் “அதன் தொடர் வரிசையில் வந்தவர்கள் இன்றும் அந்த வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

நம் முன்னோர்களை நாம் இன்னொரு உடலுக்குள் மீண்டும் உடல் பெறும் நிலைகளுக்குச் செல்லவிடாது  தடுக்க வேண்டும். அருள் ஒளியின் சுடரை ஏற்றி அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்தல் வேண்டும்.

இது நமது தலையாயக் கடமையாகும்.

முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணுவது தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் “ஆகாரம்.

அந்த அருள் ஒளியை அவர்கள் எடுத்து அங்கே வளரத் தொடங்குவார்கள்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து எங்கள் முன்னோர்கள் என்றென்றும் எங்களுக்கு நல்லாசி வழங்கிட வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

நம் முன்னோர்களை நாம் சப்தரிஷிகளாக ஆக்க வேண்டும். இதுதான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய “அழியா ஒளிச் சரீரம் பெறும்.., விண் செல்லும் மார்க்கம்.