ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 16, 2017

கல்வி அறிவு - மெய்ஞான அறிவு – கல்வியில் நாட்டமில்லாதவர்கள் பெற்ற "மெய்ஞானம்"

பள்ளியிலே படிக்கும் பொழுது விஞ்ஞான அறிவைக் கற்றுக் கொண்டால் அதன் அறிவின் துணை கொண்டு தான் வாழ வயிற்றுக்காக எத்தனையோ பொருள்களைச் செய்கின்றார்கள்.

விஞ்ஞான அறிவினால் எத்தனையோ பல இயந்திரங்களையும் கருவிகளையும் உருவாக்குகின்றோம். ஒருவர் பேசுவதை உலகம் முழுவதுமே பல ஆயிரம் பேர் எளிதில் கேட்கும் அளவிற்கு வைத்திருக்கின்றோம். ஆனால் மெய்ஞானிகளோ
1.பலருடைய உணர்வுகளைப் பதிவு செய்து
2பல கோடிக்கணக்கோரின் நிலைகளையும் அறியக்கூடிய அந்த ஆற்றலால் அந்த உணர்வின் தன்மை இயக்கப்படும் பொழுது
3.”தீமைகளை அகற்றும்” வலிமை பெற்றவர்கள் மெய்ஞானிகள்.

அதை நாம் அனைவரும் பெற முடியும். “உங்களை நம்ப வேண்டும்”. என்னால்…, எப்படி முடியும்…! என்று சோர்வடைய வேண்டியதில்லை.

ஏனென்றால் நான் பள்ளிக்குச் சென்று அந்த அளவிற்குப் படிக்கவேயில்லை…. அறியாதவனாக இருக்கின்றேன்... உங்களுக்கு என்ன தெரியப் போகின்றது என்று நீங்கள் எண்ண வேண்டியதில்லை.

நான் (ஞானகுரு) சுத்தமாக மூன்றாவது வகுப்பு தான். “ஜீரோ கணக்குத்தான்..,” எழுத்தே இன்னும் எழுதத் தெரியாது. இப்படி இருக்கும் பொழுது குரு அருளின் தன்மை தான் எனக்குள் அது இயக்குகின்றது.

1.இராமலிங்க அடிகளோ படித்தவரல்ல ஞானத்தை எழுதினார்.
2.இராமகிருஷ்ண பரமகம்சரோ அதிகமாகப் படித்தவரல்ல. அவர் எழுதினார்.
3.வான்மீகியோ படித்தவரல்ல. ஆக, உலக எண்ணத்தின் நிலைகளை உருவாக்கிக் கொடுத்தவர். எண்ணங்கள் எப்படி உருவாகின்றது என்று உணர்த்தியவர்.
4.வியாசகரோ படித்தவரல்ல. மிகவும் முரடன். கடலிலே மீன் பிடித்து வாழ்பவன். அவனுடைய சந்தர்ப்பமே மெய் உணர்வை ஊட்டி மெய் உலகின் தன்மையில் வேத சாஸ்திரங்களை எது என்று (இன்று இவர்கள் சொல்லும் வேதம் அல்ல) மெய் உணர்வின் உணர்வுகள் எண்ணங்களாக அது எப்படி இயக்குகின்றது என்ற நிலைகளை உணர்த்தினார்.

பொதுவாகப் பார்க்கும்போது இராமகிருஷ்ண பரமஹம்சரோ வான்மீகியோ வியாசகரோ இவர்கள் அனைவரும் கல்வியில் நாட்டம் இல்லாதவர்கள்.

இதைப் போன்றுதான் வரிசைப் படுத்திப் பார்க்கும்போது நம் குருநாதருக்கும் கல்வி அறிவில்லை. குருநாதர் கற்று வந்தவர் அல்ல. எழுதவும் தெரியாது.

எந்தப் பாறையில் எழுதினாலும் சும்மா இரண்டு கோடு போட்டுவிட்டுப் போய்விடுவார். இதில் நான் என்ன எழுதி இருக்கின்றேன்..? என்று கேட்பார்.

ஏதும் சொன்னால் கோபித்துக் கொள்வார். கோபத்திற்குள், அவர் கண்ணுக்குள் இருந்து.., ஒரு விதமான ஒளி வரும். அந்த ஒளிகள் வரும்போது என்னை அறியாமலே உடலை இயக்கும். அந்த இயக்க உணர்வுகள் வரும்.

இன்றிருக்கும் பாட நிலைகளில் உள்ளது போன்று புத்தகத்தில் எழுதி வைத்து விட்டுப் படித்தால் முடியுமோ? மனப்பாடம் செய்தவர்கள் புத்தகத்தையே மனப்பாடம் செய்திடுவார்கள்.

திருப்பி மூலக்கூறுகளைக் கேட்டால்.., தெரியாது.

இந்த மகரிஷியின் உணர்வைப் பதிவு செய்ததை மீண்டும் அந்த உணர்வு வரப்படும்போது அந்த உணர்வின் ஞானமாக வளர்வதும் வளர்த்துக் கொள்வதும் கல்வி ஞானம் இல்லாதவர்கள் அதிகமாகப் பெறுகின்றார்கள்.

அவர்கள் அந்த உணர்வோடு ஒன்றி வளர்க்கும்போது அது வளர்கின்றது.

1.மெய்ஞானிகள் கண்ட உணர்வினைக் கவரும்போது
2.மெய்வழி எடுத்து நமக்குள் தீமைகளைப் பிளந்து
3.அந்த மெய்ப்பொருளுடன் ஒன்றச் செய்கின்றது.

ஆகவே தான் யாம் உங்களுக்குப் பாட நிலையாகக் கொடுக்காமல் குருநாதர் எமக்கு அனுபவபூர்வமாகக் கொடுத்த நிலைகளை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் தீமைகள் வரும் நேரம் இந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கினால் அதைக் கவரும் திறன் உங்களுக்கு வருகின்றது. அப்பொழுது அந்த மூலக்கூறை அறியும் திறன் உங்களுக்கு வரும்.

படித்ததை வைத்து குற்றங்களையும் குறைகளை அறியலாம். ஆனால், அறிந்தது நமக்குள் வளராமல் தடுக்கவில்லை என்றால் நமக்குள் அது விளைந்து விடும்.

ஆகவே, அந்த மெய்ஞானிகள் காட்டிய வழியில் நாம் சென்றால் விண் செல்லலாம். பிறவா நிலை என்ற நிலையை மற்றவர்களையும் அடையச் செய்யலாம்.