ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 26, 2017

ஆயிரம் நல்லது செய்து… என்ன பலன்? “தெய்வம் என்னைச் சோதிக்கின்றது” என்கிறோம் – விநாயகர் தத்துவம் என்ன சொல்கிறது?

வாழ்க்கையில் மனிதர்கள் யாரும் தவறு செய்யவில்லை. பக்தி மார்க்கத்தில் இருப்போர் எவரும் குறைகளைச் செய்யவில்லை.

1.நல்லவைகளைச் செய்ய வேண்டும்.
2.நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
3.பிறரைக் காக்க வேண்டும் என்ற உணர்வுகள் கொண்டிருந்தாலும்
4.”பிறர் படும் துயரங்களைக் கேட்டுணர்ந்த உணர்வுகள் பதிவான பின்.., என்ன ஆகின்றது?”

நாம் பலகாரங்களைச் சுவையாகச் செய்து வைத்த பின்பு அதிலே சிறிதளவு உப்பு அதிகமாகிவிட்டால் அதனின் சுவை கெட்டுவிடுகின்றது.

இதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் நல்லவைகளைச் செய்தாலும் பிறர் படும் வேதனைகளை நாம் கேட்கும் பொழுது அவர்கள் கஷ்டமெல்லாம் நமக்குள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே இந்தத் தீமையான உணர்ச்சிகள் வளர்ச்சி அடைகின்றது.

பல பொருள்கள் தனித்தனியாக இருக்கின்றது. பலகாரமாகச் செய்யும் பொழுது எல்லாவற்றையும் ஒருக்கிணைந்து அந்த உப்பையும் இணைத்தால் தான் பலகாரம் சுவையாக இருக்கின்றது.

ஆனால் அந்த உப்பு கூடிவிட்டாலோ சுவையின் தன்மையை மாற்றிவிடுகின்றது.

இதைப் போல நம் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் செயல்கள் அதிகமாக இருப்பினும் மற்றவர்களையும் நாம் மகிழ்வடையச் செய்கின்றோம்.

சில பேர் மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் அவர்களை மகிழச் செய்வார்கள். 100க்கு 99 பேர் அந்தக் கொள்கையில் உள்ளவர்கள் என்று கூடச் சொல்லலாம்.

பிறருக்கு உதவி செய்யும் நிலைகளில் அதை மெச்சிச் செய்வார்கள். ஆனால் பின்னாடி “என்ன செய்து, என்ன பலன்?” என்று வெறுப்பார்கள்.

பிறர் படும் துயரங்களைக் கேட்டறிந்து கேட்டறிந்து ஒருவருக்கு உதவி செய்தால் அவர் மகிழ்கின்றார். மற்றவர்களுக்கு உதவி செய்தால் அவர் மகிழ்கின்றார்.

1.இதைப் போல ஆயிரக் கணக்கோருக்கு உதவி செய்கின்றார்.
2.அவர்கள் எல்லாம் மகிழ்கின்றார்கள்.
3.ஆயிரம் பேரிடம் கேட்டுணர்ந்த கஷ்டத்தின் உணர்வுகள் இவருக்குள் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து
4.இவரின் சுவையைக் கெடுத்துவிடுகின்றது.

இதைத் “தெளிவாகக் காட்டுகின்றார்…” நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

கோவிலினுடைய தத்துவமே “உதவி செய் என்று தான் சொல்கிறது. ஆனால் உதவி “எப்படிச் செய்யவேண்டும்?” என்று  நாம் அறிந்துள்ளோமா?

பக்தி மார்க்கத்தில் இருப்போர் “ஆயிரம் பேருக்கு நன்மை செய்தேன் என்ற நிலைகளில் பின்னாட்களில் தெய்வத்தை எப்படி எண்ணுகின்றோம்?

1.நான் உன் வழியிலே தான் அனைவருக்கும் உதவி செய்தேன் என்னை ஏன் இவ்வாறு சோதிக்கின்றாய்?
2.உனக்காக நான் எத்தனை காலம் நான் விரதம் இருந்தேன்?
3.எத்தனை யாகச் சாலைகளைச் செய்தேன்? எத்தனை ஆலயங்களை நான் கட்டினேன்.., உதவி செய்தேன்?
4.எத்தனை பக்தர்களை உனக்காக வரவழைத்தேன்? எத்தனை பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்தேன்?
5.உன்னை நாடி வருவோருக்கெல்லாம் எத்தனை உணவைக் கொடுத்தேன்?
என்னே ஏன் இவ்வாறு சோதிக்கின்றாய்.? என்று கேட்கும் நிலை வருகின்றது. இப்படித்தான் பக்தி மார்க்கத்தில் உள்ளோர் நாம் இருக்கின்றோம்.

பக்தி என்றால் நல்ல ஒழுக்கமாக இருந்தாலும் அதைக் காத்திடும் நிலையாக விநாயகர் தத்துவத்தைக் காட்டினார்கள் ஞானிகள்.

உன் வாழ்க்கையில் “நீ.., எதனை உனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும்?” என்று கேள்விக்குறி போட்டு திரும்பும் பக்கமெல்லாம் விநாயகரை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

நல்லதை எண்ணிப் பிறருக்கு உதவி செய்கின்றோம். ஆனால், அவர்கள் கஷ்டங்களையும் துயரங்களையும் கேட்டறிந்த பின்பு தானே நாம் உதவி செய்கின்றோம்.

நாம் கேட்டறிந்த கஷ்டங்களையும் துயரங்களையும் நாம் யாராவது தூய்மைப்படுத்துகின்றோமா? அதைக் கடவுள் வந்து சுத்தப்படுத்துவாரா..?

செடிக்குள் விளைந்தால் வித்து. மனிதனுக்குள் விளைந்தால் வினை. வினைக்கு நாயகனாக விநாயகனாக நாம் மனிதனாக இன்று உருவாகியுள்ளோம்.

மனிதனான பின் கஷ்டங்களையும் துயரங்களையும் நாம் வினையாகச் சேர்த்தால் அந்த வினை நமக்குள் விளைந்தால் நம்மை எங்கே கொண்டு சேர்க்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அதை உணர்த்துவதுதான் விநாயகர் தத்துவமே. மண்ணுலகில் நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி விண்ணுலகில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி வாழ்ந்து கொண்டுள்ளான்.

அதை (துருவ நட்சத்திரத்தை) அரசாகக் காட்டினார்கள். வாழ்க்கையில் நமக்கு முன்னாடி வரும் கசந்த நிலைகளை வேப்பமரமாகக் காட்டினார்கள்.

அன்றாட வாழ்க்கையில் வரும் கசந்த நிலைகளிலிருந்து விடுபட அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி அதை வினையாகச் சேர்த்து அந்த வினைக்கு நாயகனாக ஒளி சரீரம் பெறு என்பது தான் விநாயகர் தத்துவம்.

ஒவ்வொரு மனிதரும் இதைப் பெற அன்று செய்து வைத்தான் ஞானி.

ஆகவே,
1.மறுபடியும் இன்னொரு உடலுக்கு வித்திடும் வினைகளைச் சேர்க்கின்றாயா..
2.அல்லது பிறவியில்லா நிலை அடையும் ஒளிச் சரீரம் பெறும் ஒளியான வினைகளைச் சேர்க்கப் போகின்றாயா..? என்று
3.கேள்விக்குறி போட்டு “நீ யார்.., இந்தப் பிள்ளை.., யார்? என்று
4.நாம் போக வேண்டிய மார்க்கங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.