ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 5, 2017

“வெளியிலிருந்துதான் நமக்குள் தீமை வருகின்றது” அதைத் தடுத்துப் பழகும் ஆற்றலை நாம் செயலாக்கத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும்

நான் உலக அனுபவம் பெறுவதற்காக குருநாதர் என்னைக் காட்டிற்குள் செல்லச் செய்தார்.

பல தொல்லைகளான இடங்களுக்குப் போனவுடனே என் உடலில் பதட்டம் வருகின்றது பயம் வருகின்றது.

அப்பொழுது குருநாதர் அதை உன்னால் அடக்க முடியவில்லை என்றால் “அது தானே உன்னை இயக்குகின்றது.., அது தானே உன்னை ஆட்சி புரிகின்றது.., நீ அல்லவா அதை அடக்க வேண்டும்…,” என்பார்.

அது உள்ளே சென்று உன்னை இயக்குகின்றது. உன்னை வேதனைப்படச் செய்வது யார்?

1.”வெளியில் இருந்து தான்” உன் உடலுக்குள் போகின்றது.
2.அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
3.நான் தீமையைத் தடுக்கும் ஆயுதம் கொடுத்திருக்கின்றேன்.
4.நீ ஏன் அதைப் பயன்படுத்தித் தடுக்கவில்லை?
5.தடுக்கவில்லை என்றால் அது அந்த வேலையைச் செய்யும்
என்று என்னைத் தெளிவாக்கினார்.

சில பேர் தியானம் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு அந்தத் தியானம் ஒன்றைத்தான் சொல்கின்றார்களே தீமையைத் தடுத்துப் பழகும் ஆற்றலைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று உணரவில்லை.

1.என்னை இப்படிப் பேசுகின்றான்.., நான் எத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருப்பது…?

2.கடன் கொடுத்தவன் பணம் திரும்பத் தர மறுக்கின்றான்.., நான் எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…?

என்று இப்படி மாற்றிக் கொள்கின்றார்கள்.

ஆக, நாம் எண்ணியதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது. கண்கள் அந்த வழியைக் காட்டுகின்றது.

குருநாதர் எமக்கு உபதேசித்தது ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாகவும் ஒவ்வொரு உடலையும் கோவிலாகவும் மதித்து நீ செயல்பட வேண்டும் என்றார்.

அப்பொழுது “அவர்களிடமிருந்து பகைமை மறைந்து.., அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்” என்ற எண்ணம் எனக்கு வருகின்றது.

அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று எண்ணும் பொழுது “என் உடலான.., இந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துகின்றேன்”.

“நீங்கள் நன்றாக ஆக வேண்டும்” என்று நான் எண்ணினால் எனக்குள் நல்ல நிலை ஆகின்றது.

இப்பொழுது யார் நமக்குத் தீமைகள் செய்தார்களோ அவருக்கும் “நல்லது செய்யக்கூடிய எண்ணம் வரவேண்டும்” என்று சொன்னால் அந்தத் “தீமையின் உணர்வுகள்” நமக்குள் வருவதில்லை.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று சொன்னால் அவரைப் பற்றிய “வெறுப்பான உணர்வுகள்” நம் உடலுக்குள் வருவதில்லை.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டுமே தவிர அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவர் கெட்டதைத்தான் நல்லதாக்கும். அவர் செய்யும் தவறுக்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகிவிடும்.

1.அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும்.
2.எல்லோரிடமும் பண்பும் பரிவும் காட்டும் எண்ணங்கள் வரவேண்டும்
3.அந்த அருள் ஞானம் அங்கே வர வேண்டும் என்று சொன்னால்
இந்த உணர்வுகள் அவர்களைத் தவறு செய்ய விடுவதில்லை. அப்பொழுது இதை நாம் வெறுமனே சொல்ல முடியாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று இதைக் கலந்து நம் எண்ணங்களுக்கு “முதலில்” வலிமை கொடுக்க வேண்டும்.

இப்படி நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தில் “எத்தகையை சங்கடங்கள் வந்தாலும்” மாற்றி அமைக்கலாம்.

ஒரு விபத்தையோ மற்ற அதிர்ச்சி தரக்கூடிய நிலைகளை உற்றுப் பார்த்தால் உடனடியாக ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விபத்தில் உடலை விட்டு ஆன்மா பிரிந்திருந்தால் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடிபட்டிருந்தால் அவர்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும். அவர்கள் பூரண குணம் அடைந்து சீக்கிரம் எழுந்து நடக்க வேண்டும்.

அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் நாம் நினைக்க வேண்டும்.

உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் போகின்றோம். ஆனால், தீமைகளை நமக்குள் புகாது தடுக்கும் நிலையை எண்ணாதபடி நாம் செய்தோம் என்றால் அங்கே நடந்த விபத்தின் வேதனைகள் நமக்குள் வந்து நடுங்கச் செய்துவிடும்.

அதைப் பார்த்ததும்.., உடனே “கிடு.., கிடு.., என்று உடல் நடுக்கமாகிவிடும். நம்முடைய அடுத்த நல்ல செயல்கள் அனைத்துமே தடையாகி “இரண்யன்” ஆகிவிடும்.

அதவாது நம் நல்ல குணங்களைக் கொன்றுவிடும். அதனால் தான் இரண்யன் என்று பெயர் வைக்கின்றார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் மனிதன் நாம் எப்படி வாழ வேண்டும் என்ற நிலையாகக் காவியங்களாக படைத்துள்ளார்கள் ஞானிகள். ஏனென்றால் இயற்கையை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படிக் கருத்தினைத் தெளிவாக்கிக் காட்டினார்கள்.


அந்த மெய்ஞானிகள் உணர்த்தியதைத்தான் உங்களுக்குள் சிறுகச் சிறுகச் சொல்லி வருகின்றோம்.