ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 5, 2017

தீமையான பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்களை.., “உலகம் போற்றும் மகான்களாக” உருவாக்குங்கள் – உங்களால் முடியும்

பெண்கள் உங்கள் வீட்டில் “கணவர் இப்படி இருக்கிறார்.., அப்படி இருக்கின்றார்..,” என்று எண்ண வேண்டாம்.

காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணி அந்தச் சக்தியை எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவர் பெறவேண்டும் என்று எண்ணுங்கள். சாப்பாடு போடும் பொழுதெல்லாம் அந்த அருள் சக்தி அவர் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏனென்றால், அவர் தீமையான பழக்கங்களைக் “கட்டுப்படுத்த வேண்டும்” என்று விரும்புகின்றார்.

சிகெரெட் குடிப்பவர்களைப் பாருங்கள். குடித்துக் கொண்டே இருப்பார்கள். நீங்கள் என்ன தான் சொன்னாலும் “வெறுப்பு” வந்துவிடும்.

அதே மாதிரி தண்ணி (மது) போடுபவர்களைப் பாருங்கள். வீட்டில் மிகவும் தரித்திரமாக இருக்கும். பெண்கள் நகையை அடமானம் வைத்துக் குடிப்பார்கள்.

நண்பரைப் பார்த்தால்.., “நீ வாப்பா.., நாம் தண்ணி போடப் போகலாம்” என்பார்கள்.

“தண்ணி போடும் ஆள்கள்” தண்ணியை வாங்கிக் கொடுத்து சிநேகம் ஆன பிற்பாடு.., “அடச் சாப்பிடு..,” என்று சொன்னால் போதும்.

“அண்ணே நீ சொல்வது தான் சரி..,” என்று சொல்லிக் கொண்டு உடனே அங்கே இருந்து வந்து இவன் வாங்கிக் கொடுப்பான்.

அந்தத் தண்ணி போடுபவன் தண்ணி ஒருவனுக்கு வாங்கிக் கொடுத்தான் என்றால் “அண்ணனைப் போல.., யாருமே உலகில் இல்லை..,” என்று புகழ் பாடிக் கொண்டிருப்பான்.

இங்கே வீட்டிலோ மிகவும் தரித்திரமாக இருக்கும். அவன் வந்தவுடன் “அண்ணே..! “ என்று சொன்னால் போதும்.

குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பான்.

அங்கே வந்து மனைவி “என்னங்க.., இப்படி இருக்கின்றீர்கள்..,? என்று கேட்டால் போதும்.

“உனக்கு அறிவு இருக்கின்றதா..?” என்று சண்டை போட்டு மனைவியை அடிப்பார்கள். “எதையாவது கொடு.., ஒரு சிறு பாத்திரத்தையாவது கொடு. நான் விற்றுத் தண்ணி சாப்பிடனும்..,” என்று மனைவியிடம் வம்பு செய்வார்கள்.

குடும்பத்திலோ பணமில்லை. ஆனால், இப்படி விற்றாவது அடுத்தவருக்குத் தண்ணியை வாங்கிக் கொடுத்து அதன் வழியில் அங்கே “அவர்களிடம் மயங்கிக் கிடப்பார்கள்”.

“இதற்கெல்லாம்.., காரணம் எது?”

மந்திரங்களிலேயும் மாயங்களிலேயும் “சோமபானம்” என்று அதர்வண வேதத்தில் கலக்கப்பட்டு இந்த உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டித்தான் அதிலே மந்திரங்கள் ஓதப்பட்டு அதற்குள் “வசியபடுத்தப்பட்ட நிலைகள்” தான் இது.

நாம் நினைக்கின்றோம் “போதை..,” எங்கிருந்து வந்தது? என்று.

இந்தத் தீயிலே கருக்கப்பட்டு உணர்வின் தன்மை இந்த யாக வேள்விகள் நடத்தப்படும் பொழுது சோமபானம் என்ற நிலையை ஊற்றுவார்கள்.

அதை.., “புகையுடன் கலந்து வரும் பொழுது நுகர்ந்துவிட்டால்” நுகர்ந்த உணர்வு அந்தக் கருவின் தன்மை அடைகின்றது.

இந்தப் போதையின் நிலைகள் தான் “வசியம்..,” என்று “இந்தச் சாமி செய்யும்.., அந்தச் சாமி செய்யும்..,” என்ற நிலைகளில் இன்று போய்க் கொண்டிருக்கின்றோம்.

இதெல்லாம் ராஜ தந்திரத்தில் ராஜ தந்திரம்.

ஏனென்றால், குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய விளக்க உரைகளைச் சொல்கின்றோம். மக்கள் எத்தனையோ நிலைகளில் ஏமாற்றப்பட்டுக் கொண்டுள்ளார்கள். அதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்று உணர்த்தியதை இங்கே வெளிப்படுத்துகின்றோம்.

குடும்பங்களில் இதைப் போன்ற எத்தனையோ சிக்கல்கள் வருகின்றது. ஆகவே, வீட்டில் கணவரைக் குறை கூறும் உணர்வுகளை எடுக்க வேண்டாம். அவர் அறியாத நிலைகளில் செய்கின்றார்.

ஒருவர் சாக்கடையில் விழுந்துவிட்டால் என்ன செய்கின்றோம்? அவரை மீட்டுத் தூய்மைப்படுத்துகின்றோம்.

இதைப் போன்று குறைபாடுகள் வந்தால் நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தப் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணி அது என் கணவர் உடல் முழுவதும் படர வேண்டும் அவர் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்.

நாங்கள் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ வேண்டும். நளாயினியைப் போன்று நாங்கள் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். சாவித்திரி போன்று எங்கள் இரு உயிரும் ஒன்றிடல் வேண்டும் எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும் இரு உணர்வும் ஒன்றாக வேண்டும் என்ற “இந்த வலுவான உணர்வை” நீங்கள் எடுத்துக் கொண்டே வாருங்கள்.

இந்த அருள் உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் கருவாக உருவாகிக் கொண்டே இருக்கும். கருவாகும் பொழுது அவருடைய உணர்வைச் சேர்த்து…, அருள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால், அவருடைய உணர்வுகள் உங்கள் உடலுக்குள் உண்டு அவர் “தவறுகள் பல செய்தார், செய்து கொண்டேயிருக்கின்றார்.,” என்ற உணர்வுகள் உங்களுக்குள் உண்டு.

அவரைப் பார்த்தவுடனே.., “இப்படிச் செய்கின்றாரே..,” என்ற வேதனை வரும்.

அந்த வேதனையை மாற்றுவதற்கு நீங்கள் இந்த முறைப்படி நீங்கள் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து இதைக் கருவாக்கிக் கொள்ளுங்கள்.

அதைத் திரும்பத் திரும்ப இதே மாதிரி நீங்கள் எண்ணினால் உங்கள் உடலுக்குள் அணுக்களாக விளைந்துவிடும்.

கணவருக்கு உணவு மற்ற நிலைகள் கொடுக்கும் பொழுது “அவர்.., உயர்ந்த ஞானியாக வேண்டும் மகானாக வளர வேண்டும்”. என் கணவரின் செயல்கள் எல்லாம் அனைவரும் போற்றக்கூடிய சக்தி அவர் பெறவேண்டும் என்று இதை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

இந்த உணர்வின் தன்மை (அவர்) உற்றுக் கேட்கும் பொழுது சந்தர்ப்பத்தில் அவருக்குள் பதிவாக்கிவிடுங்கள். இது பதிவாகும் நிலைகளில் அவருக்குள் நிச்சயம் உருவாகும்.

எப்படியும் நீங்கள் சமையல் செய்யும் பொழுது அந்த மிளகாயை அளவுடன் சேர்த்து ருசியாக உருவாக்குகின்றீர்களோ அதைப் போல அவருடைய நிலையை நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.

தவறு செய்பவர்களை மாற்றலாம். உங்களால் நிச்சயம் முடியும்.

பெண்களுக்குள் அதிகமான அளவில் வளர்க்கும் சக்தி உண்டு. அதிகாலை 4 – 6க்குள் ஒரு பாலை வைத்து அல்லது தண்ணீரை வைத்து அல்லது இரண்டு வில்வம் தழையாவது எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

யாருக்காவது நோய் இருந்தது என்றால் அந்த வில்வம் தழையை துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்துக் கொடுங்கள். பல நோய்களையும் போக்க உதவும்.

ஏனென்றால், உங்களுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் கூடும் பொழுது உங்கள் உணர்வின் ஆற்றல் நோய்களைப் போக்கும்.

சக்தி உங்களுக்குள் அதிகமாகக் கொடுக்கின்றோம். நீங்கள் எடுத்துப் பாருங்கள்.