ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 27, 2017

விஷ்ணு தத்துவம் - 9

கடவுளின் அவதாரம் பத்து - 7. பரசுராம் அவதாரம்
1.சமப்படுத்தும் நிலை
பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தை நீக்கி அதனுள் உள்ள நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் நுகர்ந்து, சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக அடுத்து மனிதனாக, “பரசுராம்” அவதாரமாக உருப்பெறும் நிலை பெறுகின்றது.

மனிதனானபின் நமது உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள நஞ்சினை மாற்றிவிட்டு “நல்ல உணர்வைச் சமப்படுத்துகின்றது” என்ற நிலையே பரசுராம் அவதாரம்.

கடவுளின் அவதாரத்தில் ஒரு பொருளைத் தன்னுள் இணைத்து.., “நன்மை என்றும்.., தீமை என்றும்.., அறிந்து சமப்படுத்தும் நிலைக்குப் பரசுராம்” என்று காரணப் பெயர் சூட்டினார்கள் ஞானிகள்.

தீமைகளை ஒடுக்கிடும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கணவன் மனைவி இரண்டு பேரும் கவர்ந்து தமக்குள் உருப்பெறச் செய்யப்படும் பொழுதுதான் சமப்படுத்த முடியும். இது பரசுராம்.

பரசுராமன் கையில் இருப்பது சிவ தனுசு.

சிவ தனுசு" எனும் பொழுது உடல் என்ற நிலைகளில் உருவான உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலில் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து காக்கவே உடலின் உணர்வுகள் வருகின்றது,

நமக்குள் சமப்படுத்தும் உணர்வுகள் இருப்பினும்எந்தெந்த குணங்களை" நமக்குள் பெற்றோமோ அதைத்தான் நமக்குள் சமப்படுத்திக் கொண்டிருக்கும்.

பரசுராம்", நாம் சுவாசித்த உணர்வுகள் எந்த குணமோ அதைச் சமப்படுத்தும் எண்ணங்கள்தான் வருகின்றது.
2.வாழ்க்கையில் நாம் சமப்படுத்துவது எதுவாக இருக்க வேண்டும்?
உதாரணமாக நாம் மிக மிக நல்லவர்களாக இருப்போம். பலருக்குப் பக்குவம் சொல்லக் கூடியவர்களாக இருப்போம்.

ஆனால், நல்ல அறிவுரையுடன் கூடிய யோசனைகளைக் கூறுபவர்கள் அனைவருமே பிறருடைய குறைகளை வேதனைகளை துன்பங்களைக் கேட்டறிய வேண்டியிருக்கிறது.

உங்களிடத்திலும், பலர் வந்து.., “என்னைப் பிறர் ஏமாற்றிவிட்டார்கள்.., நான் மோசம் போனேன்..,” என்று கூறுவதைக் கேட்டுக் கொண்டேயிருங்கள்.

அப்பொழுது இதனின் உணர்வுகள் எல்லாம் உங்களிடத்தில் விளைந்து உங்களிடத்தில் உள்ள “நல்ல குணங்களைக் காணாமல் போகச் செய்துவிடும்”.

இதெல்லாம் உங்களிடம் விளைந்தவுடனே, நீங்களும் பொய் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். மற்றவர்களைப் பார்த்து, “பித்தலாட்டம் பண்ணுகிறார் என்று கூற ஆரம்பித்து விடுவீர்கள்.

இவ்வாறு நீங்கள் நல்லதே செய்து வந்தாலும் பிறர்படும் வேதனையின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கும் பொழுது அது நோயாகவும் கவலையாகவும், சோர்வடைந்த நிலையாகவும் உங்களிடத்தில் விளையும்.

பலரின் குறைகளைக் கேட்டு உங்களுடைய நியாயத்தை எடுத்துச் சொல்லும் பொழுது உங்களுடைய உணர்வு வேகமாக இருக்கும்.

இதே உணர்வுடன் வீட்டிற்கு வந்தால் மகன் ஏதாவது காரியத்திற்காக வெளியே சென்றால், உடனே அவனை, “அறிவுகெட்டதனமாகப் போகிறான்” என்று திட்ட ஆரம்பித்து விடுவீர்கள்.

ஏதாவது ஒரு வேலையாக மனைவியைக் கூப்பிடுவோம். கூப்பிடும் பொழுதே, “வா இங்கே..,” என்று வேகம் காட்டுவோம்.

“இதோ வருகிறேன்…” என்று அவரும் குரல் கொடுப்பார்.

இதனின் உணர்வு என்ன செய்யும்? பாத்திரம் ஒன்று கை நழுவி விழுந்துவிடும்.

உடனே நாம் மனைவியிடம்…, “கொஞ்சமாவது அடக்கம் இருக்கிறதா…, பார்…!” என்று சத்தம் போடுவோம். வெறுப்பின் உணர்வுகள் நம்மிடம் அதிகரித்துவிடும்.

அப்பொழுது இந்த உணர்வின் தன்மை வேதனையாகும் பொழுது மனைவி பொறுமையாகத்தான் இருப்பார்.

ஆனால் “ஊருக்கெல்லாம் பஞ்சாயத்துப் பண்ணுகிறார்.., என்னிடம் எரிந்து விழுகின்றார்...,” என்று மனைவிக்கு வேதனையாகும் பொழுது அவருக்குக் கை கால் குடைச்சல் வருகின்றது.

இதே உணர்வின் தன்மையுடன் சமையல் செய்தால் என்னாகும்? சாப்பாடு நன்றாக இருக்காது. ஆக, சாப்பாடு பரிமாறும் பொழுதும் வம்பு.

இந்த நிலையைத் தொடர்ந்து, கணவன் மனைவி பிரிந்து விட்டார்கள் என்றால், “நீ… நான்…” என்று சண்டை வருகின்றது.

அப்பொழுது அடுத்தவருடைய வேதனையின் உணர்வுகள் நமக்குள் புகுந்தபின் யாராவது உதவி செய்கிறார்கள் என்றால் “அவர்களுடைய எண்ணம் இங்கே வளரும்”.

என் வீட்டுக்காரர் “இப்படித்தான்” என்று வேதனைப்படும் பொழுது.., அவர்களைச் சார்ந்தவர்கள்.., “அந்த மனுசன் அப்படித்தான்.., நீ வாம்மா கண்ணு…” என்று அனுசரித்தால் போதும்,

இவர்கள் செத்தால் உயிரான்மா அவர் உடலில் புகுந்து கொள்ளும்.

அப்பொழுது வேதனையின் உணர்வுகளை மேலும் வளர்த்துக் கொண்ட பின், “நான் உதவி செய்தேன் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றானே” என்ற நிலையில் வீட்டில் கலவரம் உருவாகும்.

ஆக இங்கே எண்ணங்கள் எமனாகி விடுகின்றன.

இப்படி, பகைமை உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது அது இணை சேர்த்து வாழும் தன்மையைப் பிரித்து விடுகின்றது. ஆகவே, இதை மாற்றுவதற்கு என்ன செய்யவேண்டும்?

ஆக, கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து துருவ மகரிஷிகளின் அருள் சக்தியைத் தம்முள் இணைத்து, வாழ்வில் சந்தர்ப்பங்களால் வரும் நஞ்சினை ஒடுக்கி தம்முள் நல் உணர்வைச் சமப்படுத்தும் நிலை பெற வேண்டும்.

கணவன் தனது மனைவியை உயர்த்தி நினைப்பதும் மனைவி தனது கணவனை உயர்த்தி நினைவுகளை வளர்த்திடல் வேண்டும். கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து இதே உணர்வுடன் செயல்பட வேண்டும்.

“வசிஷ்டரும் அருந்ததியும்” போன்று நாங்கள் இருவரும் ஒன்றி வாழ வேண்டும். அவர்கள் வாழ்ந்த உணர்வின் தன்மை என்றும் எங்களுக்குள் நிலை கொள்ள வேண்டும் என்று எண்ணி ஏங்கி தியானித்தல் வேண்டும்.

“எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்” எனும் நிலையாக, எப்பொழுது ஒன்றிய நிலைகள் வந்தாலும் இன்னொரு பிறப்புக்குப் போகாதபடி பிறர் செய்த ஏவல் நோய்கள் தனக்குள் வராதபடித் தடுக்க இது உதவும்.

இரண்டு மனமும் ஒன்றாகி, திருமணமானபின் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இவை.