ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2017

விஷ்ணு தத்துவம் – 5

கடவுளின் அவதாரம் பத்து – 3. இராமன்
கடவுளின் அவதாரத்தில் மூன்றாவது அவதாரம் இராமன்.

உயிரணு பெறும் சரீரத்தின் தோற்றமான விதத்தையும் “எண்ணங்களின் தோற்றத்தையும்” அதனின் இயக்கங்களை நமக்கு உணர்த்துவதற்காக அன்று ஞானிகள் இராமன் என்னும் கதாபாத்திரத்தைப் படைத்து இதிகாசம் மற்றும் புராணங்களை உருவாக்கினார்கள்.
1.  இராமன் – எண்ணம்
சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் விஷம் காந்தம் புவியின் ஈர்ப்புக்குள் வரப்படும் பொழுது ஒரு செடியிலிருந்து வெளிப்படக்கூடிய சுவையான சத்தினைக் கவரப்படும்பொழுது அது “சீதாலக்ஷ்மியாக” மாறுகின்றது.

சீதா என்றால் சுவை. அதே உணர்வை ஒரு உயிரணு நுகர்ந்தால் அந்த உணர்வின் சத்து உடலாக மாறுகின்றது.

“சீதா” என்ற இந்தச் சுவை உயிருடன் ஒன்றி அதன் உணர்வின் உடலாக சிவமாக மாறுகின்றது. சிவத்துக்குள் சக்தியாக இயங்குகின்றது.

இதைத்தான், “திரேதாயுகத்தில்” நாராயணன் சீதாராமனாக அவதரித்தார் என்று தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டது.

அதில் “திரேதா.., என்பது சரீரம்.., உயிரணு உடல் பெறும் நிலை”. இதற்குள் “சீதாராமன்” தான் எடுத்துக் கொண்ட சுவை எதுவோ.., “அந்த எண்ணமாக” இயக்குகின்றது.

ஒரு உயிரணு கடலைச் செடியின் மணத்தை நுகர்ந்து புழுவின் உடலைப் பெற்றபின் “கடலைச் செடியைச் சாப்பிடவேண்டும்” என்ற “எண்ணம்” அந்தப் புழுவிற்கு வருகின்றது.

அதாவது எந்தச் செடியின் சத்தைப் புழு நுகர்ந்ததோ அந்தச் சத்தின் தன்மைக்கொப்பத்தான் எண்ணம் வருகின்றது.

உயிரணு ஒரு செடியிலிருந்து சத்தினை நுகர்ந்து தன்னுள் இணைத்து உடலாக மாறும் பொழுது “சீதாராமா” எண்ணங்கள் தோன்றி.., இதைச் சாப்பிட வேண்டும்.., என்ற எண்ணம் உண்டாகின்றது.

“உணர்ச்சியை வைத்து.., உணர்வை இயக்கி” அதற்கு வேண்டிய உறுப்புகளை இயக்கத் தொடங்குகின்றது.

“எண்ணம்” இல்லை என்றால் “இயங்காமல்தான்” இருக்கும்.

எந்த நினைவினை எண்ணுகின்றோமோ அது இராமனின் “அம்பு போன்று பாய்ந்து..,” உணர்வின் அணுக்கள் ஒவ்வொன்றையும் இயக்கி அதன் தொடர் கொண்டு நமது உடலை இயக்கும்.

எண்ணம் உருவாகவில்லை என்றால் உடலை இயக்காது.

இதைத்தான் நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் என்று தெளிவாக அன்று காவியங்களில் கூறப்பட்டுள்ளது.
2. கல்யாணராமன்
மனிதரிடத்திலும், உணர்வின் எண்ணங்களின் இயக்கத்தை உணர்ந்த இராமாயணத்தில், “கல்யாணராமா” என்று பாடினார்கள்.

கல்யாணராமனாக எப்பொழுது ஆகின்றான்?

சீதையை மணக்க வேண்டுமென்றால் அரசன் வைத்திருக்கும் வில்லைத் தூக்கி நிறுத்தி வளைத்து முறிக்க வேண்டும்.

அவ்வாறு வில்லை வளைத்து முறிப்பவர் எவரோ அவரே சீதையை மணக்கும் தகுதியுடையவர் என்ற நிலையைக் காண்பித்தனர்.

ஏனெனில், வில்லிலே பொருத்தி எய்யப்படும் அம்பு “பிறரைத் துன்புறுத்தும்” தன்மை கொண்டது.

துன்புறுத்தும் உணர்வை வென்றவர் எவரோ அவரே சீதாவைத் திருமணம் செய்து கொள்ளும் தகுதி உடையவர் எனும் நிலையைக் காண்பித்தனர்.

வீர தீரம் காட்டிய பலரும் வில்லின் வலிமையை உணர்ந்தனரே தவிர வில்லைத் தூக்கக்கூட அவர்களால் முடியவில்லை.

ஆனால் இராமனோ.., “தீமை விளைவிக்கும் நிலைகளிலிருந்து.., தீமையில்லாத நிலையை உருவாக்குகின்றான்” என்பதை உணர்த்தும் பொருட்டு இராமன் வில்லைத் தூக்கி நிறுத்தி வளைத்து முறித்துவிடுகின்றான்.

அதன்பின் சீதையை மணந்து கொள்கின்றான் என்று காண்பித்து “தீமையை அடக்கும் சக்தியினை” தன்னுடன் இணைத்துக் கொண்ட நிலையைத்தான் “கல்யாணராமன்” என்று எடுத்துரைத்தனர்.

மனித வாழ்க்கையில் தீமையை அகற்றி அந்தத் தீமையைச் செயல்படவிடாது தம்முடன் அரவணைத்து ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவர்கள் தான் “மகரிஷிகள்”
.
துருவ மகரிஷியைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள் என்னும் நிலையை அடைந்தார்கள்.

பல கோடித் தீமைகளைக் கேட்டுப் பார்த்து உணர்ந்தாலும் மகரிஷிகள் அதனைத் தமது அரவணைப்பாக தமக்குள் சுவையாக ஒளியாக மாற்றிக்கொண்டவர்கள்.

துருவ மகரிஷியும் சப்தரிஷிகளும் தங்களுடைய உயர்ந்த எண்ணங்களின் துணை கொண்டு மற்றவர்களுடைய எண்ணங்களை தம்முள் வளர்த்திடாது ஒளி பெறும் உணர்வினை தம்முடன் இணைத்து “ஒளியின் சரீரமாக மாறியவர்கள்”.

இதுதான் ‘’கல்யாணராமா” என்பது.