ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 13, 2017

சிவ தத்துவம் - 12

ஈசனுக்கு மணம் சிவனுக்கு அமுது
வெப்பம், காந்தம், விஷம் என்ற இந்த மூன்று நிலைகள்தான் ஒன்றைத் தனக்குள் கவர்ந்து, மற்றொன்றோடு இணைக்கப்படும் பொழுது உணர்வுகள் மாற்றமடைகின்றது.

மெய்ஞானிகள் கண்டுணர்ந்த இந்த மெய் உணர்வை நாமும் தெரிந்து கொள்தல் வேண்டும்.

உணர்வின் தன்மை எதனுள் கவர்ந்து கொண்டதோ, வெப்பம், காந்தம், விஷம் இவை மூன்றும் ஒன்றுக்குள் இணைத்து மற்றொன்றை எதிர்க்கும் நிலையில்தான் மோதலில் வெப்பமாகி இரண்டறக் கலந்து ஒரு இயக்கச் சக்தியாக மாறுகின்றது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

நம்முள் இருக்கும்.., “உயிரை ஈசனென்றும்.., இயக்கத்தைக் கடவுள்..,” என்றும் ஞானிகள் உரைத்தார்கள்.

அதே சமயத்தில், நுகர்ந்து உணர்ந்த உணர்வின் அணுக்கள் நம் உடலுக்குள் உயிரைப் போன்று ஜீவ அணுவாக மாறினால் அக்குணத்தின் தன்மை நமக்குள் உள் நின்று கடவுளாக இயக்குகின்றது.

உணர்வின் தன்மை இறையாகும் பொழுது இறைவன் என்றும் இறையின் உணர்வு செயலாகும் பொழுது தெய்வம் என்றும் எக்குணத்தின் தன்மை மீண்டும் செயல்படுகின்றதோ அக்குணத்தின் செயலாக உயிர் நம்மை வழிநடத்தும் என்பதற்காக “குரு” என்றும் காரணப்பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

1. வெளிச்சத்தைக் காட்டும் பொழுதுதான் பொருள் தெரிகின்றது. ஆகவே, தெரிந்து உணர்வது வெளிச்சம். அதுதான் “தீபாரதனை”.

2. அந்த மணத்தை நுகரவேண்டும் என்பது “துவைதம்”.

3. சுவாசிப்பது “அத்வைதம்”.

4. பார்ப்பது “சிவம்”.

5. நாம் அதிலிருந்து எடுப்பது “சக்தி”.

6. சுவாசிக்கும் பொழுது சக்தியின் “இயக்கம்”.

7. என் உடலுடன் சேர்க்கும் பொழுது “சிவம்”.

8. இதுதான் “ஓம் நம சிவாய.., சிவாய நம் ஓம்…,”

9. “ஓம்” என்பது சக்தி சக்தியின் உணர்வின் வேகம் எதுவோ, அந்த உணர்வின் தன்மை எனக்குள் ஆகும் பொழுது, அந்த சக்தியின் நிலைகள் எனக்குள் உடலாக மாறுகின்றது – சிவம், “ஓம் நமச் சிவாய” நமதாக மாறுகின்றது.

10. நாம் எந்த குணத்தை எண்ணுகின்றோமோ அது உயிரிலே பட்டவுடன் “ஓங்காரம்” இயக்கம்.

11. அந்த உணர்வின் அலைகள் நமக்குள் சேர்ந்து அது உமிழ்நீராக மாறி, நம் உடலுடன் சேர்க்கப்படும் பொழுது.., “ஐக்கிய சிவம்” என்று இவ்வாறு பொருள்பட அன்று சிவ சக்தியின் தன்மையை மெய்ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

12. துவைதம் என்பது, பொருள் எதுவோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் கூட்ட வேண்டும். கோவிலிலே, அந்த மலரின் மணத்தை நாம் நுகரும் பொழுது.., அந்த மலரின் உணர்வின் மணம் “ஈசன்”.

13. அந்த மலரின் உணர்வின் சத்து உடலுடன் சேர்க்கப்படும் பொழுது சிவனுக்கு “அமுது”. ஆக, ஈசனுக்கு மணம் இங்கே “சிவனுக்கு அமுது”.

கண் புலனறிவுக்கு உடல் மற்றவைகளுக்கும் அந்த உணர்வின் இயக்கமே நாம் அறிந்துணர்ந்து செயல்படும் தன்மைகள்.

இதைத்தான்.., ஒவ்வொரு பாகமாகப் பிரிக்கப்பட்டு உடலின் உறுப்பின் தன்மை செயலாக்கும் பொழுது அதற்கு தெய்வ வடிவைக் கொடுத்து ஆற்றல்மிக்க பெயரைக் கொடுத்து வைத்தான் ஞானி.