ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2017

“இருந்த இடத்திலிருந்தே” நீங்கள் நல்ல சக்திகளைப் பெறமுடியும்

“சாமியைப் பார்த்தோம்.., சாமியாரைப் பார்த்தோம்”. ஆகவே, எல்லாம் நமக்குக் கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.

நாம் எதை நுகர்கின்றோமோ.., “அதைத்தான்” நம் உயிர் அந்த வழிப்படி செயல்படுத்துகின்றது என்று நான் அடிக்கடி சொல்லி வருகின்றேன்.

நீங்கள் “இருந்த இடத்திலிருந்தே.., நல்ல சக்திகளைப் பெற முடியும்”. அந்தத் தன்னம்பிக்கை வேண்டும்.

உதாரணமாக, ஒருவர் திட்டும்பொழுது அவர் உணர்வை பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். பின் என்ன நினைக்கின்றீர்கள்?

என்னைத் திட்டினார் என்னைத் திட்டினார் என்று எண்ணுகின்றீர்கள். அடுத்து என்னைத் திட்டினால் அவன் உருப்படுவானா.., உருப்படுவானா..,?” என்று எண்ணுகின்றீர்கள்.

இந்த உணர்வு என்ன செய்யும்? அங்கேயும் இயக்குகின்றது. இங்கேயும் இயக்குகின்றது.

அதே மாதிரி உங்கள் குழந்தை மேல் பாசமாக இருக்கின்றீர்கள். வெளி ஊரில் படிக்கின்றது. சமயத்தில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் “என்ன ஆனதோ…? ஏதாச்சோ…?” என்று வேதனைப்படுகின்றீர்கள்.

வேதனைப்படும் பொழுது அந்த வேதனை உங்களுக்குள்ளும் விளைகின்றது. அந்த குழந்தைக்கும் வேதனை வரப்படும்பொழுது.., “சிந்திக்கும் தன்மை குறைந்து படிப்பில் கெடுகின்றது”.

குழந்தை.., “இதற்கு முன்னாடி நன்றாகப் படித்துக் கொண்டிருந்ததே…!” என்று எண்ணுவீர்கள். இதைப் போன்று ஏதாவது வேதனை உணர்வுடன் உங்கள் குழந்தையை எண்ணினீர்கள் என்றால் குழந்தைக்கு என்ன செய்யும்?

சிந்திக்க முடியாதபடி படிப்பிலே அது ஓரளவிற்கு நினைவை இழக்கச் செய்கின்றது. “முக்கியமான பாடங்கள் இருக்கும்போது” நீங்கள் குழந்தையை வேதனைப்பட்டு எண்ணினால் “அது (படித்தது) நினைவிழந்து போகின்றது”.

நினைவில்லை என்கிறபொழுது “நான் நன்றாகப் படித்து வந்தேனே.., இப்படி ஆகிவிட்டதே…!” என்று அதுவும் வேதனைப்படும்.

இதுவெல்லாம்.., “நம்மையறியாமல் செயல்படக் கூடிய நிலைகள்” என்பதை அடிக்கடி நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றேன்.

“நீங்கள் எல்லோருமே.., அருள் ஞானம் பெறவேண்டும்” என்று தான்
1. உங்கள் உயிரைக் கடவுளாக நான் வணங்குகின்றேன்.
2. உங்கள் உயிரை ஈசனாக மதிக்கின்றேன்.
3. ஈசனால் உருவாக்கப்பட்ட உடல் தான் உங்கள் உடல் சிவம் என்று மதிக்கின்றேன்.

“எண்ணத்தால் உருவானது தான் கண்” என்றும்.., “கண்ணால் தான் உருவாகி.., எண்ணத்தைக் கொடுக்கின்றது” என்றும் எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களை நான் மதிக்கின்றேன்.

எண்ணத்தால் தான் நாம் எல்லாம் இயக்குகின்றோம். 
1. நம் சொல்லே இராமனாகின்றது
2. கண்ணே கண்ணன் ஆகின்றது.
3. உடலே சிவம் ஆகின்றது
என்ற நிலைகளை வைத்து ஒவ்வொருவரும் நாம் இதைப் போல நினைக்க நேர்ந்தால் நாம் ஒவ்வொரு உயிரையும் ஒவ்வொரு உடலையும் கோவிலாகவும் ஈசனாகவும் சிவனாகவும் விநாயகனாகவும் சொல்லை இராமனாகவும் கண்களைக் கண்ணனாகவும் நாம் மதிக்க முடியும்.

இவ்வாறு மதித்துவிட்டால்.., “நம்மை அறியாமல் வரும் தீமைகளை” அகற்றும் சக்தி “நாமே பெறுகின்றோம்”.

தீமையான உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம் உயிரிலே பட்டுத் தீமையை விளைவிக்கும் உணர்ச்சிகள் நம் உடலிலே சுழல்கின்றது.

உயிருக்கு “விஷ்ணு” என்று காரணப் பெயர் வைத்து அழைக்கின்றனர்.
1. இயக்கத்தின் நிலையை ஈசன் என்றும்
2. இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்
3. வெப்பத்தால் ஈர்க்கும் காந்தத்தை இலட்சுமி என்றும் தெளிவாக நம் ஞானிகள் எடுத்துரைத்துள்ளார்கள்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உயிரிலே மோதும் பொழுதுதான் அந்த உணர்ச்சிகள் நம் உடலில் இயக்கத் தொடங்குகின்றது.

அதனால் தான் அவனைச் “சங்கு சக்கரதாரி” என்று தெளிவாகக் கூறுகின்றது நம் சாஸ்திரங்கள். இதைப் பல முறை உங்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளேன்.

பிறரின் வேதனைப்படும் நிலைகளை நுகர்ந்தோம் என்றால் அந்த வேதனையின் உணர்ச்சிகளே நம்மை இயக்குகின்றது. நம் உடலான ஆலயத்தில்.., “அசுத்தத்தைச் சேர்க்கின்றோம்”. நம் உயிரான ஈசனுக்கும்.., “துயரத்தைக் கொடுக்கின்றோம்”.

நம் கண்ணின் “கருவிழியால்” கண்ணுற்றுப் பார்க்கும் உணர்வின் தன்மை தெளிவாக்கும் நம் கண்ணுக்கே வேதனை என்ற உணர்வு வரும் பொழுது “கண் மங்கும் நிலையும்” சிந்திக்கும் தன்மையும் சீரான உணர்வைக் கவரும் தன்மையும் “இழக்கின்றது” என்பதையும் தெளிவாகக் கூறுகின்றோம்.

இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

1. ஒரு மனிதனை மதிக்கும் தன்மை வந்தால் நம்மை நாம் மதிக்கின்றோம் என்று பொருள்.
2. மற்றவர் உயிரை ஈசனாக மதித்தால் நம் உயிரை ஈசனாக மதிக்கின்றோம் என்று பொருள்.
3. பிறருடைய உடலைச் சிவமாக மதித்தால் நம் உடலைச் சிவமாக மதிக்கின்றோம் என்று பொருள்.

குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு நான் உங்களை உயர்வாக மதிக்கின்றேன். உங்களைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன். உங்கள் உடலைச் சிவமாக மதிக்கின்றேன்.

எனக்கு.., “குருநாதர் அதைத்தான் உபதேசித்தார்”. அதைத்தான் நான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.

இதனை நீங்கள் கருத்தில் கொண்டு வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பத்தால் வரும் நுகரும் தீமையான உணர்வுகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

இதைத் துடைப்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உங்களுக்குள் பதிவாக்கி அதனை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்
1 “இருந்த இடத்திலேயே.., தீமைகளை அகற்றலாம்”.
2. உணர்வின் சக்தியை நீங்கள் பெறலாம்
என்றுதான் சொல்கின்றேன்.

எப்பொழுதுமே.., “உங்களிடம் தான்.., நான் வரம் கேட்கின்றேன்”.

காரணம்.., “உயிரான ஈசன் வீற்றிருக்கும்.., அந்த இடத்தில்” அமைதி கொண்ட உணர்வுகள் நீங்கள் சுவாசித்தால்.., அந்த அருள் உணர்வுகள் வெளி வரும்போது.., அதைக் கண்டு நான் ஆனந்தப்படுகின்றேன்”.

அப்பொழுது என் உயிரான ஈசனுக்கும் அந்த அமுதைக் கொடுக்கின்றேன்.

அதனால் தான் தெளிவாகச் சொல்வது. குறைகள் அகற்றுங்கள். அருளைப் பெருக்குங்கள். இருளை அகற்றுங்கள்.

மெய்ப்பொருள் காணும் அந்த அருள் சக்தியைப் பெற ஒவ்வொரு மனிதனின் நிலையையும் கடவுள் என்ற நிலையில் மதித்துப் பழகுங்கள்.