ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2022

“அகஸ்தியனுடன் ஒன்றி” அவன் நுகர்ந்த உணர்வுகளை எடுக்கப் பழக வேண்டும்

நம் பூமியில் உருப்பெற்ற நிலைகளில் அகஸ்தியன் முதல் நிலைகளில் அணுவின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தான். உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சென்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவன் பெற்ற உண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் தொடர்ந்து பதிவாக்கிக் கொண்டே வருகின்றேன்.
1.”அவன் எப்படிப் பெற்றானோ...!" என்ற சந்தேக உணர்வு கொண்டு எண்ணாது
2.அவனுடன் ஒன்றி அவன் நுகர்ந்த உணர்வுகளை எடுக்கப் பழக வேண்டும்.

அகண்ட அண்டத்தை அறிந்துணர்ந்த அந்த அகஸ்தியனின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது... பதிந்த உணர்வுகளை நீங்கள் நினைவாக்கினால் உங்கள் வாழ்க்கையில் வரும் பேரிருளை மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றிட முடியும்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆயுள் கால மெம்பராக நீங்கள் இணைந்திட வேண்டும்.
1.அவன் பெற்ற அருள் சக்திகளை எல்லாம் நீங்கள் பெற வேண்டும்
2.உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவருக்கெல்லாம் அந்த வித்தினைப் பரப்ப வேண்டும்
3.நாம் பார்க்கும் நண்பர்களிடத்திலும் இந்த உணர்வுகளைப் பரப்புதல் வேண்டும்.

அப்படிப் பரவச் செய்யப்படும் பொழுது இருளை நீக்கிடும் சக்தியும் சிந்திக்கும் ஆற்றலையும் அவர்களும் பெறுகின்றார்கள். அவர்களிடத்தில் விளைந்து அந்த உணர்வுகள் வெளி வரப்படும் பொழுது இந்தப் பரமாத்மாவிலே அதிகமாகப் பெருகுகிறது.

அதன் மூலம் அந்த அருள் உணர்வின் தன்மையை அனைவரும் எளிதில் பெற்று இருளை நீக்கும் வலிமையும் பெறுகின்றோம்.

இதற்கு முன் யாம் (ஞானகுரு) உபதேசித்த நிலைகள் எல்லாம் வேறு. இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் எல்லாம் உங்களை நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைக்கச் செய்யும் நிலையே...!

ஆயுள் மெம்பராக இருக்கும் நீங்கள் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்தால் தான் அதைச் செயல்படுத்த முடியும்.

ஆனால் வெளியிலே சொன்னால் தவறின் உணர்வுகளுக்கே வரும்... மந்திரவாதிகளுக்கு உபயோகமாக இருக்கும். இந்தப் பேரைச் சொல்லி ஏமாற்றுவதற்கு உபயோகமாக... ஒரு கருவியாக மாறும்.
1.உண்மையின் உணர்வைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருவோர்கள் பலர் இருந்தாலும்
2.தவறு செய்வோரின்... அந்த தவறான உணர்வுகள் கலக்கப்படும் போது
3.உண்மையின் வழிகளில் செல்வோர் உணர்வுகளுக்குள் அவரின் விஷத் தன்மை படர்ந்து... சிந்தனை குறைந்து...
4.இப்படிச் செய்கின்றார்களே...! என்று உணர்வுகள் மாறப்படும் பொழுது போகும் பாதைகளுக்குத் தடையாக வருகிறது.

அப்படி ஆகாதபடி தடுக்க வேண்டுமல்லவா...!

இன்று “எலக்ட்ரிக்... எலக்ட்ரானிக்..” என்ற நிலைகள் கொண்டு எதனுடைய அழுத்தம் இருக்கின்றதோ அதனுடன் ஈர்க்கப்பட்டு இந்த உணர்வின் தன்மையை நமக்கு அறிவிக்கின்றது மனிதனால் உருவாக்கப்பட்ட எலெக்ட்ரானிக் கருவிகள்.

“நம் உயிரும் எலக்ட்ரிக் தான்...” நாம் நுகரும் உணர்வின் தன்மையை உயிர் எலக்ட்ரானிக்காக நமக்குள் இயக்கும் பொழுது
1.எதனுடைய அழுத்தத்தில்
2.எதனுடைய உணர்வின் தன்மை உள் செலுத்துகின்றமோ
3.அந்த உணர்வின் தன்மை... நம்மையும் அதன் வழிக்கே இயக்குகின்றது.

ஆக இயந்திரக் கருவிகள் போன்று தான் நமது உடலும் உணர்வுகளும் இயக்குகின்றது.

1.இந்த உபதேசத்தின் வாயிலாக யாம் உயர் அழுத்தத்தின் உணர்வுகளைக் கொண்டு வரும் பொழுது
2.உங்களுக்குள் இருக்கும் தீமை என்ற உணர்வுகளை அது அழுத்தி
3.அருள் உணர்வின் ஞானத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறது அல்லவா...!