ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 26, 2022

ஒலி கேட்டு உணர்ச்சி வசப்பட்டாலும்… “ஒளி கொண்டு” அதைத் தெளிதல் வேண்டும்

யானை நீர் மொள்ளும் ஓசையைக் கேட்டே அம்பெய்து சிரவணனைக் கொன்ற தசரதனின் செயலை வான்மீகியார் சுட்டிக் காட்டிய நிலைகளில் “சூட்சமப் பொருள் உள்ளது...!”

அது என்ன..?

பார்வை ஒளியற்ற பெற்றோரைச் சுமந்து செல்பவன் சிரவணன். ஒரு சமயம் அவனுடைய தாய் தந்தையர் தாகம் என்று தண்ணீர் கேட்டதும் அதற்காக நீரைத் தேடி அலைந்தான். ஆனாலும்
1.நீர் கிடைக்கும் வரை அவன் எடுத்த எண்ணம் என்ன...?
2.கடமை என்ற சொல்லும் உண்டு.
3.கடமையின் பால் உணர்வுதனை மாற்றிக் கொண்ட செயலும் உண்டு.

விலங்கினங்கள் நீர் அருந்தும் ஓசையைக் கொண்டே அந்த மிருகங்களைப் பார்க்காமலேயே மறைந்திருந்து குறி தவறாது அம்பெய்யும் ஆற்றல் பெற்றவன் தான் தசரதன்.
1.அதை வீரத்தில் சேர்ப்பதா...?
2.கற்ற வித்தையின் ஞானத்தில் சேர்ப்பதா...?
3.அல்லது உணர்வுகள் கூட்டிக் கொண்ட மோகம் அறிவுக் கண்ணை மறைத்ததாகச் சொல்வதா..?

ஏனென்றால் தசரதன் அவன் இளமையின் ஆற்றலால் கற்றுக் கொண்டதுதான் அந்தக் கலை. அவனுடைய செவிப் புலன் அறிவாக ஓசையைக் கொண்டு குறிப்பறியும் ஆற்றலைக் காட்டியது ஞானம் தான்.

ஆகவே வான்மீகியார் கூற வந்த தெளிந்த பொருள் என்ன...?

காமத்தின் விளைவால் மோகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் செயல்பாடு... சரீர உணர்வின் இயக்கத்தால்... “கருத்தறிய முடியாத அலட்சிய மனோபாவனையக் காட்டியது தான்...” தசரதனின் அந்தச் செயல்.

தண்ணீருக்காகத் தேடிய சிரவணன் அவன் எடுத்த சஞ்சல உணர்வலைகள் பாசத்தின் அடியாக பதைபதைப்பாக அவன் அறிவின் பொறி கலக்கமுற்றது.

அதனால் குறிப்பறியாத ஈர்க்கும் செயலில்... எதிர் மோதல் குணங்கள் உணர்வுகளின் உந்துதலால்... குறிப்பறியாச் செயலுக்கு அறிவின் மயக்கமே ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு... “வினைச் செயலின் விளையாட்டாக சிரவணன் நீர் மொள்ளும் சப்தம் அமைந்தது...!”

1.அப்படிப்பட்ட “சிரவணனின் அறிவின் மயக்கமும்”
2.ஒலி கொண்டு அறியும் ஆற்றலின் அலட்சியத்தால் விளைந்த “தசரதனின் அறிவின் மயக்கமும்”
3.சந்தர்ப்பத்த்கால் சந்தித்த சந்திப்பு... அம்பாகச் சிரவணன் உடலில் பட்டுத் தைத்து அவன் உயிரைக் குடிக்க முனைந்தது.

ஆனால் ஞான வழிச் செயல் ஆக்கத்திற்குத் தனித் தன்மையான பொருளும் உண்டு. எப்படி...?

செவிப்புலனால் ஒலி ஈர்க்கும் அறிவு செயல்பட்ட அந்தக் காலத்தில்
1.ஒளி கொண்ட ஒலி நாதத்தைத் தனக்குள் நிறைத்துக் கொண்டால்
2.புற உலகின்கண் எழும் சப்தங்களை உணர்ந்திட முடியாத செயலுக்கு
3.நமக்குள் சேக்கும் மெய் ஒலியின் அந்த ஓங்கார நாதமே அதிர்வுகளாக ஓசையைப் பெருக்கச் செய்து
4.அதே தொடரில் ஆத்ம வலுவைக் வலுக் கூட்டிக் கொள்ளும் உயிர் கலப்பால்
5.மெய்யை அறியும் உயர் ஞானமாக அது அமைந்து தெளிவான ஆக்கபூர்வமான செயல்களைச் செய்விக்கச் செய்யும்.

ஆகவே ஒலி கொண்டு புலன்களால் அறிந்தாலும் ஒளி கொண்டு ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும் மெய் ஞானம் பெற்றால் தான் நம் செயல்கள் என்றுமே வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் செயலாக நன்மை பயக்கும்.