ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2022

குரு இல்லாதபடி "எதையுமே" செயல்படுத்த முடியாது…!

நல்லதைச் செயல்படுத்தும் பொழுது சிலருக்குப் பாருங்கள். உணர்வின் இயக்கங்கள் மாறும்.

கணவர் பணத்தை மற்றவருக்குக் கொடுத்து உதவி செய்கிறார் என்றால் “இப்படியே செய்து கொண்டிருக்கின்றார்…” என்ற வெறுப்பின் தன்மை மனைவிக்கு வரும்.

யாருக்காவது அவர் காசு கொடுக்கப் போனால்… கொடுப்பதற்கு முன் அல்லது அவர்கள் உதவி கேட்டு வருவதற்கு முன் தடுத்து நிறுத்தும் நிலை வருகின்றது.

இல்லை என்றால் “இப்படியே இருக்கின்றது…” என்று வீட்டிற்குள் சண்டை வரும். அதனால் வெறுப்பின் தன்மை வரும்.
1.பிறருக்கு நன்மை செய்ய மாட்டோம்
2.அவர்களை வாடச் செய்து துன்புறுத்தும் தன்மை தான் வரும்… அதை ரசிக்கும் தன்மை வரும்.
3.வீட்டிலே செல்வம் இருக்கும்… கஷ்டம் என்று ஒருவர் வந்தாலும் அவருக்கு உதவி செய்வதைத் தடுக்கும் நிலை வரும்.
4.ஒரு நல்ல காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றாலும் அது விடாது.

இதைப் போன்ற உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்பதை அறிவதற்குத் தான் குணங்களைப் பற்றி ஞானிகள் காவியங்களாகப் படைத்து
1.உயிரின் இயக்கத்தையும்
2.உணர்வின் இயக்கத்தையும்
3.உடலின் செயல்களையும் பல நிலைகளிலும் உணர்த்தி உள்ளார்கள்.

ஏனென்றால் மனிதனாக வருவதற்கு முன் எத்தனையோ சரீரங்களில் பல விதமான தாவர இனங்களைப் உணவாக உட்கொண்டு பழகியது. அதனின் தன்மை உடலிலே அணுக்களாக உருவாகி… அந்த அணுக்களுக்குள் ஒன்றை ஒன்று கொன்று தின்று… மற்றதை வென்றிடும் உணர்வின் உணர்ச்சிகள் மாறி அதிலே வளர்ச்சி பெற்றவன் தான் மனிதன்.

இதைப் போன்ற இருள்களை நீக்கி அருளைப் பெறும் உணர்வு பெற்றவன் தான் அகஸ்தியன். தாய் கருவிலேயே அந்தச் சக்திகளை அவன் பெற்றான்.

அகஸ்தியன் வெளிப்படுத்திய நஞ்சை வென்றிடும் அத்தகைய சக்திகள் “இந்தக் காற்றிலே தான் இருக்கின்றது…” என்று குருநாதர் அதைத் தெரியும்படி செய்தார். அதை நான் பெற்றேன்.

அதன் வழியில் என்னைத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக அமைத்தார் அதே போன்று உங்களையும் அமைக்க வேண்டும் என்று தான் செயல்படுத்துகின்றோம்.

இன்ஜினியரிங்… சம்பந்தமான புத்தகத்தை எடுத்துப் படித்தாலும் ஒரு கருவியை உருவாக்க அதிலே எந்தெந்த உலோகத்தைச் சேர்க்க வேண்டும்…? என்ற உணர்வின் தன்மை தெரியவில்லை என்றால் என்ன ஆகும்…?
1.வாத்தியார் சொன்னால்தான் தெரியும்
2.புத்தகத்தைப் படித்து விட்டேன் என்றால் அதைத் தெரிந்து கொள்ள முடியுமா…?
3.தெரிந்து கொண்டாலும்… “அதை இணைக்கும் தன்மை பெற்றால் தான்…” அது செயல்படுத்த முடியும்.

சில பேர் கடைகளிலே சென்று இது போன்ற புத்தகங்களை வாங்கிப் படித்துக் கொள்வார்கள். இதனுடன் இதைச் சேர்த்தால் “சோப்பு செய்யலாம்… தைலம் செய்யலாம்…” என்று அதிலே போட்டிருக்கும்.

அதைப் படித்துவிட்டுக் காசைச் செலவழித்து எந்தப் பருவத்தில் எதை இணைக்க வேண்டும்…?” என்று தெரியாதபடி சோப்பு வரவில்லை… தைலம் வரவில்லை… எல்லாம் நஷ்டம் ஆகிவிட்டது…! என்று இருப்பார்கள்.

ஆக… நஷ்டமான பின் தான் அதைத் தெரிந்து கொள்ள முடியும். புத்தகத்தைப் பார்த்தேன்… படித்தேன்… இப்படி எல்லாம் சேர்த்தேன்… என்று செய்ய முற்பட்டாலும் சரக்குகளைக் கலக்கும் தன்மை வரும் போது “தடுமாற்றம் தான் வரும்…”

ஏனென்றால்…
1.குரு என்ற உணர்வு கொண்டு அதை இணைத்து
2.எந்தப் பருவத்தில் எதைச் சேர்த்தால் உருப்பெறும் என்ற உணர்வுகள் இல்லை என்றால்
3.அதைச் சீராகச் செயல்படுத்த முடியாது.

புத்தகங்களை வெளியிட்டிருப்பார்கள். அதைப் படித்துவிட்டு “நான் எல்லாம் தெரிந்து கொண்டேன்…” என்று அடுத்தவர்களுக்கு சொல்வார்கள். இவனுக்கும் செய்யத் தெரியாது. ஆனால் அடுத்தவனிடம் சொல்லி இவன் வார்த்தையை அவன் கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்…?

இப்படி நிறையப் பேர் பொருளையும் பணத்தையும் இழந்தவர்கள் உள்ளார்கள்.
1.குரு இல்லாதபடி… வாத்தியார் இல்லாதபடி… தெரியாதபடி செய்தவர்கள் எல்லாம்
2.இருக்கிற காசை எல்லாம் விட்டுவிட்டுத் திரிந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்

உதாரணமாக… இரசமணி செய்யலாம் என்று ஒருவன் சொன்னால் அதைக் கேட்ட பின் அதிலே இது இருக்கின்றது… அது இருக்கிறது… என்று சொத்தை எல்லாம் இழந்து ரோட்டில் பிச்சைக்காரர்களாக இருக்கிறார்கள்.

இரசமணி வைத்திருந்தால் அப்படிப் பேசும் இப்படிப் பேசும் இன்னன்ன நிலைகள் உண்டு என்று கதையைப் பேசிக் கொண்டிருப்பார்கள் ஆனால் முழுமையாகத் தெரியுமா…? என்றால் தெரியாது.

பல உணர்வுகள் சேர்த்து உணர்வின் தன்மை ஒன்றாகும் போது இரசமணி. அதாவது
உயிருடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை ரசமாக்கி
2.உயிர் எப்படி மின்னுகின்றதோ உணர்வின் தன்மைகளை ஒளியாக்குவது தான் இரசமணி.

ஆகவே மனிதனின் தன்மை உயர்ந்த நிலைகள் கொண்டு… இணைந்து வாழும் தன்மையாக இரசமணியாக மாற்றுதல் வேண்டும். ஞானிகள் இதைத் தான் சொல்லி உள்ளார்கள். குருநாதர் இதைத் தெளிவாகக் காட்டினார்.