ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 27, 2022

“ஆயுள் மெம்பர்” என்பது நமது வாழ்நாள் முழுவதுமே துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ்வது தான்

யாராவது நமக்குத் தொந்தரவு கொடுத்தார்கள் என்றால் என்னை இப்படிப் பேசினான்... பேசினான்...! என்று அவர்களுடைய துயரமான ஈர்ப்பு வட்டத்தில் தான் நம் நினைவுகள் சென்றுவிடுகிறது.

அவருடைய உணர்வையே வளர்த்து நமக்குள் தொந்தரவுகளை உருவாக்கிப் பல பல கஷ்டங்களை உருவாக்கிக் கொள்கின்றோம்.

இதை மாற்றி அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நமது வலுவைக் கூட்டி
1.அவர்களுக்கு நல்ல வழிகள் கிடைக்க வேண்டும்
2.என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டோம் என்றால்
3.அவருடைய உணர்வுகளை இழுக்கும் சக்தி இங்கே குறைக்கப்படுகின்றது.

ஆனால் “என்னை இப்படிப் பேசினானே...” என்று எண்ணினால் அது உடனே இங்கே வந்துவிடும். ஒருவர் நம்மைத் திட்டி விட்டால் அல்லது அடுத்தவர்களைத் திட்டும்போது அது பதிவாகிவிட்டால் அதைத் திருப்பி எண்ணும் பொழுது நினைவுக்கு வருகின்றது. அது நமக்குள் வளர்ந்து விடுகின்றது.

அதைத் தடுப்பதற்கு ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர்கள் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தவர்கள் அனைவரும் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்து காட்ட வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் ஒரு சூரியக் குடும்பம் போன்று
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
2.ஒரே குடும்பமாக வாழ்ந்து பழக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பரப்பப்படும் பொழுது இனி வரக்கூடிய விஞ்ஞான அழிவுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆகையினால் பிறருடைய சங்கடங்களையோ வேதனைகளையோ அதிகமாகக் கேட்டுப் பழகாதீர்கள்... அதைப் பதிவாக்காதீர்கள். அப்படியே கேட்க நேர்ர்ந்தாலும் அதை உடனுக்குடன் மாற்றி பழகுதல் வேண்டும்.

ஆயுள் கால மெம்பர் என்பது...
1.நமது வாழ்நாள் முழுவதுமே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ்வது தான்
2.அந்த அருள் ஒளியை நமக்குள் பெருக்குவதற்குத் தான் அதிலே சேர்வது.

இதைச் சீராகப் பயன்படுத்தி இந்த வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை அகற்றி நாம் பிறவில்லா நிலை அடைதல் வேண்டும் ஆயுள் மெம்பர் என்றால் என்றும் பேரானந்த நிலை கொண்டு நாம் வாழ்ந்திட முடியும். அந்த வழிகளை நாம் கடைப்பிடித்துப் பழகுதல் வேண்டும்

இந்த உடலும் நம்முடன் வருவதில்லை... தேடிய செல்வமும் நம்முடன் வருவதில்லை. நாம் சேர்க்கும் அந்த அருள் சக்திகளே நம்முடன் இணைந்து வருகின்றது. அதன் வழி கொண்டு என்றுமே ஏகாந்த நிலை பெறுகின்றோம்.

எதுவுமே நமக்கு எதிர்ப்பு இல்லாத நிலையில் இருளை அகற்றும் அந்த அருள் சக்திகளைப் பெறுகின்றோம்

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றால் நமது உணர்வுகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தியாகப் பெருகும். அந்த நிலை பெறச் செய்வதற்கு தான் உங்களை ஆயுள் மெம்பராக அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைப்பது.
1.உங்களுக்கு அந்த அருள் சக்திகளைக் கொடுக்கின்றோம்.
2.அதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.