ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 29, 2022

கணவன் மனைவி தியானத்தின் மூலம் கிடைக்கும் அபூர்வ சக்திகள்

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தன் குடும்பத்தைப் பொறுத்தவரையிலும் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போலக் கவர்ந்து கொண்ட சக்தியாக... அருள் உணர்வுகளை இணைத்து வாழ்தல் வேண்டும்.

நளாயினை போன்று மதித்து நடக்க வேண்டும் என்றால்
1.கணவனை மனைவி உயர்த்தி எண்ணுவதும்
2.கணவன் மனைவியை உயர்த்தி எண்ணுவதும் தான்.

இந்த ரெண்டு எண்ணங்களும் உயர்த்தி எண்ணும் போது உயர்ந்த உணர்வாக இரண்டு பேரும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஆனால் பெரும் பகுதி குறை சொல்லும் பழக்கத்தில் தான் இன்று வாழ்கின்றோம். நம் உடலிலே இது போன்ற எத்தனையோ உணர்வுகள் உண்டு இருந்தாலும் அதை மாற்றி அமைக்க மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று ஒவ்வொரு நொடியிலும் ஒன்றுபட்டு வாழும் நிலையாக உயர்ந்த நிலை பெறுதல் வேண்டும்.

கணவர் தொழில் செய்யும் இடங்களில் அனைத்தும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று மனைவியும்... அதே போன்று மனைவியின் செயல்கள் அனைத்தும் உயர்ந்து இருக்க வேண்டும்... மனைவி வெளிப்படுத்துவது உயர்ந்த சொல்களாக வர வேண்டும் என்று கணவன் எண்ணுவதும்... கணவன் மனைவி இருவருமே இப்படி எண்ணிப் பாருங்கள்.

நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது என்று இதைத் தான் சொல்வது.

நளாயினி முடமான தன் கணவனைக் கூடையில் அமர்த்தித் தூக்கிச் சென்றாள் என்று உருவ அமைப்பைக் கொடுத்து நமக்குக் காவியத்தைப் படைத்துக் காட்டி உள்ளார்கள்.

கணவன் சொல்லை சிரம் மீது ஏற்று அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இதைப் போன்று கணவன் மனைவியை உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.சக்தி தான் சிவமாகின்றது...
2.பெண்கள் எப்பொழுதுமே உயர்ந்த நிலையில் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் உடலாக மாறுகின்றது.
3.அதே மாதிரி கணவனும் எண்ணி எடுக்கும் பொழுது “அதே சக்தி நிலைகொண்டு”
4.உயிரில் அந்த உணர்வுகளை ஊட்ட உதவுகிறது.

அதுதான் நளாயினி என்று சொல்வது.

எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்றால் பிறரிடமிருந்து தீங்கான உணர்வுகள் வந்தாலும்... மனைவி அருள் உணர்வுகளைத் தனக்குள் பெற்றுக் கணவன் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் “எத்தகைய தீய நிலைகளோ சாப அலைகளோ இங்கே வந்து சாடாது...”

1.உங்களுக்கு முன்னாடி ஒரு துப்பாக்கியை வைத்துச் சுட்டாலும் கூட அந்த உணர்வுகள் திடீரென்று திசை மாறும்.
2.கணவனைக் காத்திடும் சக்தியாக செயல்படுத்த முடியும்
3.அங்கே சக்தி கொடுக்கப்படுகின்றது... துன்பத்திலிருந்து மாற்றப்படுகின்றது.

ஆகவே கணவன் மனைவி ஒவ்வொருவரும் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியையும் “ஒன்று சேர்த்து எடுத்து... ஒருவருக்கொருவர் இணைத்துப் பழகுதல் வேண்டும்...”

இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக இணையும் பொழுது இரண்டு உயிரும் வலுவாகி அடுத்துப் பிறவி இல்லா நிலையை அடைய உதவுகின்றது.