ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 8, 2022

எல்லாவற்றையும் நான் வெட்ட வெளிச்சமாகச் (PUBLIC) சொல்ல முடியாது

இந்தப் பிரபஞ்சமே அழியும் தருணத்தில் இருக்கின்றது. ஆனால் உயிரணு எப்பொழுதும் அழிவதில்லை... அதாவது பிரபஞ்சத்தில் உயிரணுவாகத் தோன்றி விட்டால் அது என்றுமே அழிவதில்லை.

உயிரணுவாக உதித்த பின் புழுவிலிருந்து மனிதனாக வரும் பொழுது எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து தான் வந்திருக்கின்றோம். இருந்தாலும்...
1.இந்த உடலை விட்டுச் சென்றால் “கடைசி நிமிடத்தில்” எந்த வேதனை பெற்றதோ
2.உயிரிலே இந்த வேதனையின் துடிப்பு இருந்து கொண்டே இருக்கும்.
3.நரகலோகத்தை அனுபவிக்க வேண்டியதிருக்கும்.

உடலில் இருக்கும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதை மாற்றலாம். உடல் இல்லை என்றால் மாற்ற முடியாது. இதை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகையினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்வதற்கு
1.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நீ ஏங்கும் பொழுது
2.அந்தச் சக்தியை முதலில் நீ பெறுகின்றாய்.

இதைப் போல உன்னைச் சார்ந்திருக்கும்... குரு ஸ்தானத்தில் சேரக் கூடியவர்களும் இந்த உணர்வுகளைப் பெற்றார்கள் என்றால் அவர்களும் உன்னைப் போன்று வளர்ச்சி பெறும் தன்மை வருகின்றது.

ஆகையினால் ஆயுள் கால மெம்பராக அங்கம் வகிக்கும் அனைவரும் இதைப் பதிவாக்கி இதை நினைவாக்கிக் கொண்டு வருவது நல்லது.

உபதேசத்தின் உணர்வுகளை எத்தனையோ நூல்கள் மூலம் வெளியிட்டிருந்தாலும் அதிலே முழுமையாகக் கொடுக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த உயர்ந்த சக்தி ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கப்படுகின்றது. இந்தப் பதிவின் நினைவு கொண்டு உண்மைகளை நீங்கள் பிரித்து எடுத்து உங்கள் வாழ்க்கையில் நல் வாழ்க்கை வாழ்ந்திட உதவும்.

“எல்லாவற்றையும் நான் வெட்ட வெளிச்சமாகச் (PUBLIC) சொல்ல முடியாது...”
பார்க்கிறோம் அல்லவா. எத்தனையோ பேர் வருகிறார்கள். வந்து எத்தனையோ நிலைகளில் அவரவர்கள் சௌகரியத்திற்கு எடுத்துச் செல்கின்றார்கள்.

ஆகவே... உண்மையின் இயக்கத்தை உணர்ந்து
1.பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று வருபவர்களுக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தோம் என்றால்
2.அவர்களும் வாழ்வார்கள்... அவர்கள் உணர்வு அவர்கள் அருகில் உள்ளோருக்குப் பட்டு அவர்கள் இருளைப் போக்கவும் செய்வார்கள்.
3.அதனால் இந்த உலகிற்கும் ஒரு நல்ல பயன் உண்டு என்பதற்குத் தான் இதைத் தனித்து
4.தனிப்பட்ட முறையில் ஆயுள் கால மெம்பர்களுக்குப் பதிவாக்குகின்றேன்.

இந்த உலகமே இருள் சூழும் நேரத்தில்... பிரபஞ்சமே சிதறுண்டு போகும் தருணத்தில்... ஒவ்வொரு நொடியிலும் அகஸ்தியன் காட்டிய அருள் வழியில் நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் துடுப்பாக வைத்து அதைப் பிளந்து விட்டு நமது பயணம் பிறவில்லாப் பயணமாக அந்த சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.

அதற்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்...!