ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 24, 2016

ஒரு அழுக்கு நீரில் நந்நீர் சேரச் சேர அழுக்கு நீர் மறையத்தான் செய்யும் – ஆன்மாவைத் தூய்மைப்படுத்துங்கள்

யாம் எவ்வளவோ உயர்ந்த உணர்வுகளை உபதேசித்தாலும் இங்கே என்னிடம் வருபவர்கள் குறைகளைப் பேசிக் கொண்டுதான் வருகின்றனர்.

அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும்.
எங்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
நாங்கள் மெய்ப்பொருள் காணும் சக்தி பெறவேண்டும்.
எங்கள் பார்வையில் இருளை அகற்றும் திறன் பெறவேண்டும்.
இருள் சூழா நிலைகள் நாங்கள் பெறவேண்டும் என்று
வேண்டிப் பெறுங்கள் என்று பல முறை சொல்லியும் பார்த்து விட்டேன்.

 இங்கே அணுகி வருகின்றனர். ஆனால், ஆசை இந்த உடலின் இச்சைக்கே வருகின்றது.

தீமைகளை அகற்றிடும் அருளாற்றல்களை நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ முறைகளைச் சொல்கின்றேன். என்னையும் இருள் சூழும் நிலைகளுக்கே வருவோரெல்லாம் குறைகளைச் சொல்லிக் கொண்டே வருகின்றார்கள்.

நிவர்த்தி செய்யவேண்டும் என்று கேட்போர் இல்லை.

ஏனென்றால் எல்லோரும் இருளிலிருந்து மீள வேண்டும் என்று கூறுகின்றோம். அந்த உணர்வின் சக்தியைப் பெறவேண்டும் என்ற அருள் ஒளியைப் பாய்ச்சுகின்றோம்.

ஏங்கிப் பெற்றாலும் தனக்குள் இருளை வைத்து அதை மறைத்துவிட்டு அதை வளராது செய்யும் நினைவாற்றலே உங்களுக்குள் பெருகுகின்றது. அதைப் பெருக்கிக் கொண்டேதான் இருக்கின்றீர்கள்.

அருள் சுடரை உங்களுக்குள் உருவாக்கும் ஆறாவது அறிவின் திறனைப் பயன்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் எத்தகைய நிலைகள் வந்தாலும் "இப்படி ஆகிவிட்டதே..,, இப்படி வருகின்றதே...," என்று எண்ணாதீர்கள்.

வரும் தீமைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள். அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும், அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உள்முகமாக உடலுக்குள் பாய்ச்சுங்கள்.

தீமையின் பால் நினைவினைச் செலுத்தாமல் புருவ மத்தியில் எண்ணி துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு தடுத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

ஏனென்றால், ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை விட்டால் அப்பொழுது அழுக்காகத் தான் தெரியும்.

நந்நீர் சேரச் சேரச் சேர அழுக்கு நீர் மறையத்தான் செய்யும்.

ஆகவே, இந்த உடலில் நமக்கு நன்மை ஏற்பட வேண்டுமென்றால் அருள் ஒளியை எடுத்தால் உடலில் மகிழ்ச்சி பெறும் தன்மை வரும். மகிழ்ந்திடும் தன்மை கொண்டு உணர்வின் தொடராக ஒளியின் சரீரமாக மாற்றிடும் வல்லமையும் பெறுகின்றீர்கள்.