ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 15, 2016

மரணமில்லாப் பெரு வாழ்வு

உபதேசத்தின் நிலைகளை முன்பு விரிவடைந்த நிலைகளில் கொண்டு வந்தேன் (ஞானகுரு). அவை அனைத்தும் சுருக்கி உங்களுக்குள் அந்த உயர்ந்த சக்திகளைப் பெருக்கச் செய்கின்றோம்.

“பெருத்த நிலைகள் கொண்டு சிறுத்த நிலைகளை உருவாக்கப்பட்டு.., சிறுத்த நிலைகளிலிருந்து நாம் பெருத்த நிலைகளைப் பெறும்” சக்தியைப் பெறுகின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் யாம் 25 வருட காலமாகப் பெற்று வந்த நிலையை உங்கள் மத்தியில் பரவச் செய்து அந்த உணர்வுகளை நீங்கள் ஏங்கிப் பெறும் தகுதியைப் பெறச் செய்கின்றோம்.

அதற்குகந்த சந்தர்ப்பம் நெருங்கி வரும் நேரத்தில் ஆற்றல்மிக்க சக்திகளை உங்களைப் பெறச் செய்யும் நேரத்தில் நீங்கள் இதை உங்களுக்குள் உருவாக்கத் தவறிவிட்டால் நாளை வரும் சிக்கலிலிருந்து தப்ப முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

ஆகவே, எந்த நிலை ஆனாலும் நாம் இனி ஒரு பிறவி இல்லா நிலை பெறவேண்டும் என்று அந்த அருள் ஒளியைப் பெறும் தகுதியைப் பெறவேண்டும்.

நம் உடலும் நமக்குச் சொந்தமில்லை. எந்தச் செல்வமும் நமக்குச் சொந்தமில்லை. எந்தச் செல்வமும் நம்முடன் வருவதில்லை. இந்தச் செல்வத்தைக் காத்திடும் திறன் எவருக்கும் இல்லை.

ஆகவே, என்றும் நமக்குள் அழியாச் செல்வத்தை அருள் சக்தியாக நமக்குள் உருவாக்கி விட்டால் இதை யாரும் தடுக்க முடியாது. அதை அழித்திடவும் முடியாது.

அருள் சக்தியாக நமக்குள் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்திடல் வேண்டும்.

விண்ணின் ஆற்றலைப் பெற்று என்றும் பதினாறு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட அந்த மரணமில்லாப் பெருவாழ்வை நாமும் பெற முடியும்.