ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 28, 2016

தீமையான உணர்வுகளை வேக வைத்து அதிலுள்ள நஞ்சினை நீக்கி ஒளியின் உணர்வாக மாற்ற முடியும்

மனிதனின் உடலிலே நாம் எத்தகைய உணவை உட்கொண்டாலும் அதிலே சிறிதளவு நஞ்சு இருந்தாலும், அந்தச் சிறிதளவு நஞ்சினை நீக்கிடும் செயலாக நம் உடல் அமைகின்றது.

நாம் உணவாக உட்கொள்ளும் அந்த உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம்முடைய உடல் மலமாக மாற்றி விடுகின்றது. மலம் நாற்றமாகின்றது, நல்லதை உடலாக்குகின்றது.

நல்ல உணர்வினை நம் உடலாக்கி, அந்த உடலிலிருந்து வரக்கூடிய அந்த நல்ல எண்ணங்களைக் கொண்டுதான் அந்த வலுக் கொண்டு நம் உடலிலே சேர்க்கும் நஞ்சினைப் பிரித்திடும் அந்த எண்ணங்கள் நமக்குள் உருவாகின்றது.

அதனின் செயலாகச் செயலாக்கி நஞ்சைப் பிரித்து அதைச் சிறிதளவாகக் குறைத்து, அதை அடக்கி மனிதர்கள் நாம் உணவாக உட்கொள்கின்றோம்.

இவ்வாறு நாம் உணவை உட்கொள்கின்றோம். உடல் அதில் மறைந்துள்ள நஞ்சினைப் பிரிக்கின்றது.

ஆனால், அதே சமயத்தில் நஞ்சு கொண்ட மனிதர்கள் பேசும் உணர்வினை, பிறர் செய்யும் தீமையினுடைய நிலையினை நாம் நுகர்ந்து அறியபப்டும்போது, அந்த உணர்வின் தன்மை நமக்குள் நஞ்சாகக் கலந்துவிடுகின்றது. 

ஆனால் அதை நீக்கும் செயலற்றுவிட்டால் அவர்கள் பேசும் நஞ்சான உணர்வு நமக்குள் நல்ல குணங்களுக்குள் கலந்து நம் உடலுக்குள் நல்ல உணர்வுகள் அனைத்தும் வேதனைப்படும் செயலையே செயல்படுத்தும் நிலையாகிவிடும்.

அத்தகையை நஞ்சான உணர்வுகளைப் பிரிக்கின்றோமா..,? அதை நீக்கும் அறிவு நமக்குள் இருக்கின்றதா..,? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

நாம் காய்கறிக்குள் இருக்கும் நஞ்சினை, நம நமப்பினை அந்த விஷத்தின் தன்மைகளைக் கலைத்து விட்டு, காய்கறிகளைப் பக்குவமாக்கி நாம் சுவைமிக்கதாகப் படைக்கின்றோம்.

இந்த மனித வாழ்க்கையில் ஒருத்தர் வெறுப்புடன் பேசுவார், ஒருத்தர் சலிப்புடன் பேசுவார், ஒருத்தர் சங்கடத்துடன் பேசுவார். அவை அனைத்தும் நாம் நெருப்பைக் கொண்டு காய்கறிகளை வேகவைப்பது போல வேக வைத்துத் தீமைகளை நீக்கிட முடியும்.

எதை வைத்து?

அந்த மகரிஷிகள் இதையெல்லாம் வென்று அந்தத் தீய நிலைகளை எல்லாம் வேகவைத்தவர்கள். அந்த உணர்வின் தன்மை கொண்டு நஞ்சினை அடக்கி, உணர்வின் ஒளியாக மாற்றிச் சுவையான நிலையாக உருவாக்கியவர்கள்.

அவர்கள் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக முப்பத்து முக்கோடித் தேவர்கள் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் அழியாத நிலைகள் கொண்டு இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள், வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்த மகரிஷிகளால் வெளியிடப்பட்ட அந்த ஆற்றல்மிக்க உணர்வின் சத்து சூரியன் காந்த சக்தியால் கவர்ந்து நம் பூமியில் இன்று படர்ந்து கொண்டு இருக்கின்றது.

அதை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்த்தால் தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பையும் பித்தளையையும் நீக்குவது போல் நம் வாழ்க்கையில் நம்மை அறியாது சேர்ந்த தீமைகளையும் நீக்கிட முடியும், பிரிக்க முடியும், ஒளியாக்க முடியும்.

நம் உணர்வுகளும் ஒளியின் நிலை பெறும். ஒளியின் சரீரம் அடைய முடியும். மகரிஷிகள் சென்ற எல்லையை நாம் அடைவோம்.