ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 11, 2016

இந்த உலகையே காக்கும் சக்தி உங்களிடம் இருக்கின்றது

உலகில் அன்னை தந்தையருக்கு இருக்கும் சிறப்பு யாருக்கும் இல்லை. அனைவருக்கும் அவர்வர் அன்னை தந்தையே முதல் தெய்வம்.

உலகம் வணங்கும் அகஸ்தியர், திருஞான சம்பந்தர், இயேசு, மகாத்மா காந்தி போன்றோர்களின் சிறப்புக்கு அவர்கள் அன்னை தந்தையே முதல் காரணம்.

ஏனெனில் கருவுற்ற பெண்கள் எண்ணும் எண்ணமும் எடுக்கும் உணர்வுகளும் அந்தத் தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கு பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றன.

தாயின் கருவிலிருக்கும் பொழுது பெற்றபூர்வ புண்ணியமே அகஸ்தியர், திருஞான சம்பந்தர் போன்றோரின் சிறப்புக்குக் காரணமாகும்.
அகஸ்தியர் பெற்ற பூர்வ புண்ணியம்
அகஸ்தியமாமகரிஷியின் தாய் தந்தையர் காட்டு விலங்குகளிடமிருந்தும் கொடிய நஞ்சு கொண்ட உயிரினங்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொள்ள பச்சிலை மூலிகைகளை அரைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் மணம் நஞ்சு கொண்ட உயிரினங்களை அவர்களிடமிருந்து விலகி ஓடச் செய்தது. விலங்குகளை அஞ்சி ஓடச் செய்த அந்த நஞ்சு கலந்த மணம் அந்தத் தாயின் வயிற்றில் கருவாக உருவாகிய அகஸ்தியமாமகரிஷிக்கு உணவாகப் போய்ச் சேர்ந்தது.

அந்த நஞ்சு அகஸ்தியரின் தாய் தந்தையரின் உடலை நலியச் செய்தது. அந்த மூலிகைள் முலாமின் உணர்வின் தன்மையால் அகஸ்தியருக்குக் கருவிலேயே நஞ்சினை வெல்லும் ஆற்றல் உருப் பெற்றது.

அகஸ்தியன் வாழ்ந்த அக்காலங்களில் (பல இலட்சம் ஆண்டுக்கு முன்) வாழ்ந்த மக்கள் சூரியனையே தெய்வமாக வணங்கி வந்தார்கள். ஏனெனில் இரவில் காட்டு விலங்குகள் மற்றும் நஞ்சு கொண்ட உயிரினங்களின் தொல்லை அதிகமாக இருக்கும்.

பகலில் பெரும்பாலும் விலங்குகள் பதுங்கிவிடுவதால் இவர்களுக்குத் தொல்லை குறைகின்றது. எனவே இவர்களைக் காப்பது அந்தச் சூரியனே என்று கருதி சூரியனையே வழிபடு வந்தனர்.

அகஸ்தியரின் தாய் தந்தையர் தங்கள் உடலில் பூசிய மூலிகை முலாம்களினால் உடல் நலிவடைந்து அகஸ்தியருக்கு ஐந்து வயது ஆகும் பொழுதே இறந்து விடுகின்றார்கள்.

தாய் தந்தையரை இழந்ததின் ஏக்கத்தின் காரணமாக காலையில் சுடர் வீசி வரும் சூரியனைப் பார்த்து என்னை ஈன்ற அன்னை தந்தையர் இறந்து விட்டார்கள்.

என் அன்னை தந்தையரின் அருளைப் பெறவேண்டும், அவர்களின் அரவணைப்பு எனக்கு வேண்டும் என்ற உணர்வை விண்ணை நோக்கி ஏங்கிக் கதிரவனை வணங்குகிறார்.

அப்பொழுது தன் தாயின் கருவிலே பெற்ற நஞ்சின் உணர்வின் தன்மையால் நஞ்சினைக் காணும் நிலையை அடைகின்றார்.

தாயின் கருவிலிருந்து அவரிடத்தில் நஞ்சு வளர்ந்த காரணத்தால் அந்த நஞ்சு அவரிடத்தில் வலுக் கொண்டதாக இருந்தது. அதனால் அவரிடத்தில் நஞ்சினை அடக்கி அதை இயக்கிடும் சக்தியாகப் பெற்றார்.

இவ்வாறு அவர் உடலில் விளைந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் பிரபஞ்சத்தின் இயக்கத்தைக் கண்டார்.

பிரபஞ்சத்தின் அணுவின் ஆற்றலும், அணுவின் ஆற்றலின் பெருக்கமும் அதனின் நிலைகள் கொண்டு கோள்கள் ஆனதும் கோள்கள் நட்சத்திரங்களானதும், நட்சத்திரங்கள் சூரியன்களானதும் என்ற நிலைகளைக் கண்டுணர்ந்தார்.

அகஸ்தியர் நம் பூமியிலிருந்து முதன் முதலில் சப்தரிஷி என்ற நிலை அடைந்து துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனார்.
திருஞானசம்பந்தர் பெற்ற பூர்வ புண்ணியம்
திருஞானசம்பந்தரின் தாய் குழந்தைப் பாக்கியம் இல்லாததால் தனக்குக் குழந்தைப் பாக்கியம் வேண்டும் என்று சீர்காழியில் இருக்கும் சிவன் கோவிலுக்குத் தினமும் செல்வார்.

மாதம் ஒரு முறை கதாகாலட்சேபம் நடைபெறும். அதில் கலந்து கொண்டு சிவனைப் பற்றிய அற்புதங்களைக் கேட்டறிவார். தினமும் அந்தக் கோவிலுக்குச் சென்று அந்தத் தெய்வத்திடம் வேண்டிக் கொள்வார்.

இவ்வாறு அந்தத் தாய் எண்ணிய உணர்வின் வேகம் தாயினிடத்தில் வினையாகச் சேர்ந்து கருவுறும் தன்மை பெறுகின்றாள். கருவுற்ற தாய் பல திருத்தலங்களுக்கு யாத்திரையாகச் செல்கின்றாள்.

அங்குள்ள பெருமைகளை அறிவதும் யாகங்கள் வேள்விகளைக் கண்ணுற்றுப் பார்ப்பதும் பல வித்தைகளைப் பார்த்து வியப்பதோடு மட்டுமல்லாதபடி இவை அனைத்தும் தன் கருவிலிருக்கும் குழந்தையும் பெறவேண்டும் என்று ஏங்கினாள்.

தாய் ஏங்கிய அந்த உணர்வுகள் அனைத்தும் திருஞானசம்பந்தருக்குஞானப்பாலாக அமைகின்றது. இதனால் தான் திருஞானசம்பந்தருக்குக் குழந்தைப் பருவத்திலேயே வயதிற்கு மீறிய அறிவும் பேச்சும் அமைகின்றது.

அவர் மகிழ்ச்சியுடன் யாரை உற்றுப் பார்க்கின்றாரோ அவருக்கு உள்ளத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் உருவாகின்றது.

தாய் தன்னிடத்தில் பதிவு செய்த கொண்டவைகள் அனைத்தும் கருவிலிருக்கும் சிருவிற்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து அது ஞானக் குழந்தையாக திருஞானசம்பந்தராக வளர்கின்றது.
இன்றைய உலகில் உருவாகும் குழந்தைகளின் பூர்வ புண்ணியம்
ஆனால், இன்று பெரும்பாலான கருவுற்ற பெண்கள் தங்கள் குடும்பங்களில் சிறு சிறு விஷயங்களுக்குச் சண்டைகள் உருவாவதைக் காண்கின்றனர். அல்லது அருகிலிருக்கும் வீடுகளில் சண்டை நடப்பதைக் காணுகின்றனர்.

இவர் என்ன பேசுகிறார்? அவர் என்ன பேசுகிறார்? என்று கூர்ந்து கவனித்து அவர்களுக்கிடையில் இருக்கும் வெறுப்புணர்வுகளை இந்தக் கர்ப்பமுற்றிருக்கும் தாய் தனக்குள் பதிய வைக்கும் பொழுது அந்த உணர்வுகள் கருவிலிருக்கும் சிசுவிற்குப் பூர்வ புண்ணியமாகச் சென்று சேர்கின்றது.

இதன் வழி கொண்டு பிறக்கும் குழந்தைகள் மற்றவர்கள் ஒருவரை ஒருவர் வெறுத்து எப்படிச் சண்டை போட்டுக் கொண்டார்களோ அது போன்றுஅடம்பிடித்து அழும் குழந்தையாக அமைந்துவிடுகிறது.

பொழுது போக்கிற்காக பல பத்திரிக்கைகளைப் படிக்கும் பொழுது பல தீமையான செய்திகளைப் படிக்க நேருகின்றது.

இங்கே திருடினான், அங்கே கொள்ளை அடித்தார்கள், அங்கே கொலை செய்தார்கள், விபத்தில் இத்தனை பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள், இனக் கலவரத்தில் குண்டு வைத்துக் கொன்றார்கள் என்ற செய்திகள் தினமும் வந்த வண்ணமாக உள்ளது.

ஆக, தான் வாழ வேண்டும், எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் நம் நாட்டைக் காக்கவேண்டும் என்ற நிலையில்லாமல் ஒருவருக்கொருவர் ஏசும் நிலையிலும் அழித்திடும் நிலைகள் தான் இன்றைய உலகில் நிறைந்துள்ளது.

அதே சமயத்தில் கதைப் புத்தகங்கள் மூலமாகவும், சினிமா, தொலைக்காட்சிகள் மூலமாகவும் பெண்கள் கஷ்டப்படுவதையும், பல கொடுமைகளுக்குள்ளாவதையும் பல தவறுகள் நடப்பதையும் தொடர்ந்து காட்டுகின்றார்கள்.

இவைகளைக் கூர்ந்து படிக்கும் பொழுதும் பார்க்கும் பொழுதும் அதில் காட்டப்பட்டுள்ள உணர்வுகளைக் கர்ப்பிணிப் பெண் சுவாசிக்க நேருகின்றது.

மனித வாழ்க்கைக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்க முடியுமோ அதையெல்லாம் தத்ரூபமாக நடப்பது போல் அப்படியே அதில் நடித்துக் காட்டுகின்றார்கள்.

இதைக் கர்ப்பமுற்றிருக்கும் கர்ப்பிணி உற்றுப் பார்த்தால் உற்றுக் கேட்டால் கருவிலிருக்கும் குழந்தைக்கு இதுதான் பூர்வ புண்ணியமாக அமையும்.

எந்தெந்தத் தீமையான கொடுமையானவற்றை உற்றுப் பதிவாக்கியதோ கர்ப்பிணிப் பெண்ணுக்குள் விளைந்து அது கருவிலிருக்கும் குழந்தைக்குத்தீமைகளை உருவாக்கும் வித்தாக குழந்தையின்கருவின் அணு செல்களில் பதிவாகிவிடுகின்றது”.

ஆக, கர்ப்பமாக உள்ள தாய் எத்தகைய உணர்வைத் தனக்குள் அதிகமாகச் சேர்க்கின்றதோ அதனின் நிலைகள் கொண்டே குழந்தையின் வளர்ச்சியும் தாழ்வும் அமைகின்றது.

இதையெல்லாம் நீங்கள் மிகத் தெளிவான நிலைகள் கொண்டு தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
உலகைக் காக்கும் அருள் ஞானிகளை உருவாக்குங்கள்
ஆகவே, கருவுற்ற பெண்கள் சங்கடங்களையும் வேதனைகளையும் வெறுப்பான உணர்வுகளையும் எடுக்காமல் மகரிஷிகள் அருளிய தத்துவங்களைப் படித்தும் அந்தத் தத்துவங்களைப் பற்றிய சிந்தனைகளை வளர்த்தும் வாருங்கள்.

இத்தகைய உணர்வின் ஆற்றல்களைத் தங்கள் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஞானப்பாலாகக் கொடுத்து வாருங்கள். மகாபாரதம், இராமாயணம், கீதாச்சாரம் இதைப் போன்ற காப்பியங்களையும் இவைகளை உணர்த்திய மகரிஷிகளையும் எண்ணுங்கள்.

அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த அனைத்துச் சக்தியும் என் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குக் கிடைக்க வேண்டும். உலகத்தையும் பேரண்டத்தையும் அறிந்திடும் ஆற்றல் பெறவேண்டும். அந்த அருள் மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகள் என் கருவிலிருக்கும் குழந்தை பெறவேண்டும் என்று அடிக்கடி எண்ணுங்கள்.

இரவில் தூங்கச் செல்லும் பொழுதும் காலையில் எழுந்திருக்கும் பொழுதும் வீட்டிலோ வெளியிலோ ஓய்வாக இருக்கும் நேரங்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருவிலிருக்கும் என் குழந்தை பெறவேண்டும் என்ற நினைவினை அதிகமாகச் செலுத்துங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் வெளியிடப்பட்டுள்ள அருள் ஞானத் தத்துவங்கள் அடங்கிய புத்தகங்களை வாங்கிப் படித்து கருவிலிருக்கும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அவைகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

அதன் மூலம் அருள் ஞானத் தத்துவங்கள் குழந்தையினிடத்தில் படர்ந்து அந்தக் குழந்தை தன் வாழ்க்கையில் ஒழுக்கத்துடனும், ஞானத்துடனும் செயல்படும்.

உலகத்திலுள்ள தீமைகளிலிருந்து தன்னைக் காத்து தன் குடும்பத்தையும் காத்திடும் தெய்வீகக் குழந்தையாக அது உருவாகும்.

உங்கள் வீடுகளில் முருகன், இலட்சுமி படங்கள் இருக்குமாயின் கர்ப்பிணிப் பெண்கள் அந்தப் படத்தைப் பார்த்துத் தன் குழந்தையும் அதிலுள்ளது போன்று அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

முருகனைப் போன்று அழகும் பொருளறிந்து செயல்படும் அறிவும்,  மகாலட்சுமியைப் போன்று எல்லாவற்றையும் அரவணைத்துச் செயல்படும் நிலை பெறவேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணங்களை வளர்த்து அதைக் குழந்தைக்கு ஞானப் பாலாகக் கொடுங்கள்.

அதே சமயம் உலகத்தை அறிந்து உலகுடன் ஒன்றி வாழும் நிலைகளையும் மத பேதம் இன பேதம், மொழி பேதம் அரசியல் பேதம் இவை அனைத்தையும் விலக்கிஅனைவரும் ஒன்று என்று ஒன்றுபட்டு வாழும் உணர்வுகளைத் தன் குழந்தை பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

இவ்வாறு எண்ணி வருவீர்கள் என்றால் இந்தச் சக்திகள் அனைத்தும் உங்கள் கருவிலிருக்கும் சிசுவிற்குக் கிடைக்கப் பெற்று  அந்தக் குழந்தை உலக ஞானத்துடன் வளரும். உலகைக் காத்திடும் அருள்ஞானியாக வளரும்.
மெய் உலகைப் (மகரிஷிகள் உலகை) படைக்கும் சக்தி உங்களுக்கு உண்டு
ஆகவே, கர்ப்பமான தாய் எதைப் பார்த்தாலும் கேட்டாலும் வேதனைப்படும் நிலைகளை அறிய நேர்ந்தாலும் அடுத்த கணம் ஒரு ஐம்பது முறையாவது கீழ்க்கண்ட முறையில் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிடுங்கள்.

அதன் பின்பு என் கருவிலிருக்கும் குழந்தை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று பல முறை எண்ணி இந்த அருள் உணர்வை வலுவேற்றுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் என் குழந்தை உலகைக் காக்கும் உணர்வுகள் பெறவேண்டும். என்றென்றும் குடும்பப் பாசத்துடன் குடும்பப் பற்றுடன் ஒற்றுமையான உணர்வுடன் வளர்ந்திட வேண்டும் என்று எண்ணி வலுக் கொண்டு தியானியுங்கள்.

இதிலே கூறியபடி செய்து வந்தால் இன்றைய சமுதாய நிலைகளில் உள்ள தீவிரவாதம் என்ற விஷமான நிலைகளை மாற்ற முடியும். மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று இப்படிப் பிறக்கும் குழந்தைகள் மெய் உலகை நிச்சயம் படைப்பார்கள்.

இது நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி, மெய் வழி. ஆகவே, மெய் உலகைப் படைக்கக்கூடிய சக்தியாக உருவெடுங்கள். எமது அருளாசிகள்.