ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 26, 2016

மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை - மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அனைவரும் பெறவேண்டும் என்று நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் உபதேசித்த அருள் நெறிகளின் படி யாம் (ஞானகுரு) இந்தத் திருச்சபையை அமைத்துள்ளோம்.

இந்தத் திருச்சபையில் நடைபெறும் கூட்டுத் தியானங்கள் மூலம் அன்பர்கள் அனைவரும் ஏங்கித் தியானித்து வெளிப்படுத்தியுள்ள உணர்வலைகள் இந்த மண்டபம் மட்டுமல்லாது தபோவனம் முழுவதிலும் பரவிப் படர்ந்துள்ளது.

ஆகையால் தபோவனம் வருவோர்கள் அவர்கள் குடும்பங்களில் சலிப்பு சஞ்சலம் சம்பந்தப்பட்ட எந்த நிலை இருந்தாலும் “அது நீங்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்தத் திருச்சபை மண்டபத்தில் அமர்ந்து தியானிக்க வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு நிமிடம் எண்ணி ஏங்கி அந்தச் சக்தி பெறவேண்டும், எங்களுக்குள் பதிய வேண்டும் என்ற எண்ண வலுவுடன் தியானியுங்கள்.

இவ்வாறு நாம் தியானிக்கும் சமயம் நம் வாழ்வில் கண்டுணர்ந்த  வேதனைகளோ சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ மற்றும் இது போன்ற தீமையை நமக்குள் விளைய வைக்கும் உணர்வுகள் தியானத்தைக் கலைக்குமானால் அவைகளை விலக்கித் தள்ள வேண்டும்.

அதை எண்ண வேண்டியதில்லை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற வலுவான எண்ணம் கொண்டு குறைந்தது 15 நிமிடமாவது அமைதியாக ஏக்கத்துடன் தியானத்தைத் தொடர வேண்டும்.

ஏனென்றால், நாம் தனித்திருந்து தியானத்தின் மூலம் கவர முடியாத துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை திருச்சபை மண்டபத்தில் அமர்ந்து தியானிப்பதன் மூலம் எளிதில் கவர முடியும், சுவாசிக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைச் சுவாசித்து நம்மையறியாது சேர்ந்த இருளான உணர்வுகளை நீக்கிட முடியும். துருவ நட்சத்திரத்தின் உணர்வால் ஒளி பெற்று  அதன் மூலம நமக்குள் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் நிலைகள் ஏற்படும்.

தெய்வங்களை நம்புகின்றோம். ஜோதிடங்களை நம்புகின்றோம், யாகங்களை நம்புகின்றோம், சாமியார்களை நம்புகின்றோம். நம்மை நம்புகின்றோமா..,?

நாம் நம்மை நம்புவதில்லை. ஆகவே, நாம் நம்மை நம்பிப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வின் ஒளி அலைகளை உங்களுக்குள் சேர்த்து உங்களையறியாது சேர்ந்த தீய உணர்வுகள மாய்த்து உங்கள் எண்ணம் சொல் செயல் புனிதம் பெற அருளாசிகள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்
புஞ்சை புளியம்பட்டி – 638 459
ஈரோடு மாவட்டம்