ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 27, 2016

சொந்த பந்தம் - உயிரே நமக்குச் சொந்தம், அருள் மகரிஷிகளே நமக்குப் பந்தம்

அடிக்கடி சொல்லியுள்ளேன். சாமியை நம்புகின்றீர்கள், சாமியாரை நம்புகின்றீர்கள், ஜோதிடத்தை நம்புகின்றீர்கள், மந்திரத்தையும், யந்திரத்தையும் நம்புகின்றீர்கள்.

ஆனால், அனைத்துச் சக்தியும் படைக்கக்கூடிய திறன் (மனிதனுக்குள்) உங்களுக்கு உண்டு.

அப்படிக் கண்டுணர்ந்தவர்கள் அந்த மகரிஷிகள் அந்த வழியைச் சொல்லியுள்ளார்கள். அதன் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறுவதற்கு அரும் பெரும் சக்திகளையும் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். உங்களுக்குள் பதிவு செய்வதை அடிக்கடி சொல்லியுள்ளேன்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல.
இந்த உலகம் நமக்குச் சொந்தமில்லை.

இந்த உலகம் நமக்குச் சொந்தம்தான்.
இந்த உடலை நமக்குச் சொந்தமாக்கி
இதனுடைய பந்தம் எப்படி இருக்க வேண்டும்?

என் கௌரவத்தைக் காக்கும் நிலையாக,
“என்னை இப்படிச் சொல்லிவிட்டான்...,
இருக்கட்டும்.., அவனை நான் பார்க்கின்றேன்”
என்று நான் சொல்கிறேன்.

இப்படி இந்த உடலின் பற்று வரப்படும் பொழுது அந்த பந்தமாகின்றது.

ஆனால், இந்த உடல் பற்று எப்படி வரவேண்டும்?

இந்த உடலில் இருக்கும் பொழுதே அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்திட வேண்டும். இருள் சூழா நிலைகள் நாங்கள் பெறவேண்டும் என்று இப்படிப் பற்றுக்கு வரவேண்டும். மகரிஷிகளின் பந்தத்தை வளர்த்திடல் வேண்டும்.

யாராவது நம்மை அவமதித்தாலும்
அந்த அவமதிக்கும் உணர்வை நமக்குள் வராதபடி
அதைத் தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால், நம்மை அவமதித்து விட்டார்கள் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நம்முடைய காரியங்கள் அனைத்தையும் நாமே தடைப்படுத்துகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அவருக்கும் நல்ல அறிவு வர வேண்டும். எங்களைப் பார்க்கும் பொழுது அவருக்கு நல்ல ஞானம் பெறவேண்டும் என்று இப்படி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

எப்பொழுது இங்கே தபோவனத்திற்கு வந்தாலும் சரி, பௌர்ணமி தினத்தன்று இங்கே வருகிறீர்கள் என்றால் அந்த நாள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் நாள் ஆகும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
தீமைகள் வராது அந்த சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்
என்ற இந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே, இது வளர்ந்து விட்டால் உங்களுக்குள் தீமையை நாடாது. அப்படித் தீமைகள் வந்தாலும் அதை அகற்றும் எண்ணம் உங்களுக்குள் வந்து அந்தத் தீமைகள் அகற்றி நல் வழியைக் காட்டும் நிலைகள் வளரும்.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளின் எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த உணர்வுகள் அடுத்து உங்களைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்யும்.
உங்களைத் துன்பமில்லா வாழ்க்கை வாழச் செய்யும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் சக்தியும் நீங்கள் பெறமுடியும்