ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 4, 2016

கடவுளின் பெயரால் தவறு செய்யாதே, “தெய்வீகச் செயலாக நீ செய்” என்பதே ஞானிகள் உரைத்தது

இன்று தவறான வழிகளில் பணத்தைச் சம்பாதிப்பர்வகள் என்ன செய்கிறார்கள்? அதிலே வரக்கூடிய சம்பாத்தியத்தை மற்ற ஏழைகளுக்குக் கொடுத்தால் இந்தப் பாவம் போய்விடும் என்று எண்ணுகின்றார்கள்.
அதே சமயத்தில் தவறு செய்யக் கூடாது என்றால் தவறான செயல்களைச் செய்து தவறால் வரும் பணத்தை வைத்து மற்ற தன் இன மக்களுக்குக் கொடுத்துவிடுவார்கள்.

அடமானமாக சொத்தையோ, வீட்டையோ, பொருளையோ வாங்கிக் கொள்வார்கள், பணத்தைக் கொடுப்பார்கள். இந்தச் சொத்துகளை அபகரித்துக் கொள்வதற்கு எதுவோ, அதையெல்லாம் செய்வார்கள்.

நாங்கள் கணக்கில் தப்ப மாட்டோம் என்பார்கள்.

காசைக் கொடுப்பார் இடையில் வாங்கிவிடுவார். ஆனால், ஒரு பைசா தள்ளிக் கொடுக்க மாட்டார்.

அதே சமயத்தில் இந்தப் பாவத்தையெல்லாம் போக்குவதற்காக பணத்தைத் தனித்து வைத்து அதற்காக வேண்டி கோவில்களில் அபிஷேகம் ஆராதனைகள் செய்வார்கள்.

பின், “உனக்காக வேண்டி நெய் அபிஷேகம் செய்கின்றேன்” என்ற நிலைகளில் உனக்குப் படைத்த படைப்புகள் என்று அதைக் கொடுப்பதற்காக சில சாமியார்களை அங்கங்கே கூட்டிக் கொண்டு போய் சாப்பாட்டைப் போட்டு “நீ வா... நீ வா... நீ வா... நீ வா...,” என்று அழைப்பார்கள்.

ஆனால், இவர்களிடம் வரவு செலவு செய்வோரிடம் அவனால் கொடுக்க முடியவில்லை, ஒரு ஒரு ரூபாய் குறைத்துக் கொள் என்றால் அது மட்டும் உதவாது.

இது சட்டத்திற்கு விரோதமானது. என் கணக்கிற்கு விரோதமானது என்று இப்படியும் பேசுவோரும் உண்டு. திருப்பிக் கொடுக்கவில்லையென்றால் அதிகாரிகளை வைத்துத் தட்டித் தீர்ப்பதும் உண்டு.

இதைப் போன்ற நிலைகளில் தான் நாம் கடவுளை வணங்கிக் கொண்டிருக்கின்றோம்.

எந்தத் தொழில் செய்தாலும் தனக்குள் வரும் பணத்தைக் கடவுளுக்காகக் கொடுப்பார்கள். உனக்குப் பங்கு உண்டு. ஆகவே, எனக்கு நீ உதவி செய் என்ற நிலையில் செய்வார்கள்.

ஆக, இவர்கள் எண்ணும் உணர்வை இவர்கள் உயிர் இயக்கி உணர்வின் நிலையாக அந்த உடலிலே இது உருவாக்கப்படுகின்றது என்ற நிலையை உணர்வதில்லை. இதைப் போன்ற நிலைகள் தான் நாம் மீண்டும் மீண்டும் சுழன்று நாம் இங்கே வந்து கொண்டிருக்கின்றோம்.

யாரையும் குறை கூறுகிறேன் என்று வைக்க வேண்டாம்.

தம்மையறியாது இயக்கும் இந்த நிலைகளை உணர்ந்து
மனிதனை மனிதனாக மதித்து
மனிதனின் உயிரைக் கடவுளாக மதித்து
மனிதனாகப் பெற்ற பெருமையை மகிழ்ந்து
தீமைகளிலிருந்து விடுபட்டு வாழ வேண்டும் என்பதே
நமது ஞானிகளால் வகுக்கப்பட்ட நிலைகள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனிதனுடைய நிலைகளும் தனக்கென்று இல்லாது ஒவ்வொரு மனிதனையும் பார்க்கும் போது மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திட வேண்டும் அவர்கள் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்று பேதமற்ற நிலைகளில் நாம் எண்ணி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்திடும் நிலைகளைத்தான் எல்லா ஞானிகளும் உணர்த்தியுள்ளார்கள்.

ஆகவே, நமக்குள் எந்தப் பெருமை இருக்க வேண்டும்?

உலகெங்கும் அன்று தோன்றிய எல்லா மகான்களும் சரி, வான்மீகியும் சரி, வியாசரும் சரி, இன்றைய நிலைகளில் இராமகிருஷ்ண பரமகம்சரும் சரி, கடவுளின் பெயரால் தவறுகள் செய்யாதீர்கள்..,” என்றுதான் மக்களுக்குப் போதித்தார்கள்

.கடவுளின் பெயரால் தெய்வ குணத்தை உனக்குள் வளர்த்து, விளையச் செய்து
"நீ கடவுளின் செயலாகச் செய்" என்றுதான்
அவர்கள் சொல்லியுள்ளார்கள்.