ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 10, 2016

ஏட்டிலும் இல்லை, எந்தப் பாட்டிலும் இல்லை, உங்கள் கூட்டிலும் இல்லை

அன்று ஞானிகள் காவியமாகக் கொடுத்ததை அரசர்கள் காட்டிய நிலைகள் அந்தக் காவியங்களை எழுத்து வடிவுக்கு வரும் போது அது தான் உண்மை என்றும் அதிலே செய்யும் சாங்கியங்களையும் சாஸ்திரங்களையும் செய்து விட்டால் கடவுள் காப்பாற்றுவான் என்றுதான் இன்று இருக்கின்றோம் அல்லவா.

ஆனால், சாங்கியத்தினாலும் சாஸ்திரங்களாலும் “கடவுள் நம்மைக் காக்க மாட்டான்.., காண மாட்டோம்..,” என்ற நிலையை நமது குருநாதர் தெளிவாகக் காட்டியுள்ளார்.

இந்த உயிர் எவ்வாறு மனிதனாக உருவாக்கியதோ அவன் தன் உணர்வினை ஒளியாக மாற்றி இன்று துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான், உண்மையான சாஸ்திரம் இது.

அந்த அருளைப் பெறுவதற்குத்தான் ஆற்றங்கரையில் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள். உடல் அழுக்கைப் போக்கித் துணி அழுக்கைப் போக்கிக் கரையேறி வந்தபின் நம்மைக் கிழக்கே பார்க்கும் படி வானை நோக்கி ஏகி அந்தக் கதிரவனின் உணர்வின் ஆற்றலை அதைப் பெறவேண்டும் என்று ஏங்கச் செய்தனர்.

கண்களை மூடித் தன் உடலுக்குள் அதை வலுவேற்றிய பின் அந்தத் தத்துவ ஞானிகள் காட்டிய வழியில் இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று நம்மை ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம்
இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசா.., கணேசா.., என்று
நம் உயிரிடம் வேண்டும்படி வைத்தார்கள் ஞானிகள்.
ஏங்கியபின் தன்னைச் சிந்தித்துப் பார்க்கும் படி செய்தார்கள்.

எனது உயிர் தோன்றியதிலிருந்து புல்லைத் தின்று தழைத் தாம்புகளைத் தின்று கனி வர்க்கங்களைத் தின்று இன்று சுவை மிக்க நிலைகள் படைத்துச் சாப்பிடும் இந்த உடலைக் கொடுத்தது இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்த அந்த ஈசனை வணங்கும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

அந்த ஞானிகள் காட்டிய காவியத்தைத் தனக்குள் பதிவு செய்வதற்கு படிப்பறிவு இல்லாத அக்காலங்களில் சிலைகளை உருவமாக்கிக் கதைகளாகச் சொல்லியுள்ளார்கள்.

இந்த உயிர் உன்னை மனிதனாக எவ்வாறு உருவாக்கியது? என்று எழுத்தறிவு இல்லாத காலங்களில் சிலையை உருவாக்கி அந்தச் சிலையின் ரூபமாகக் காவியமாக கதைகளாகச் சொல்லி மனிதனின் வாழ்க்கையில் பதிவு செய்தான்.

இதைத்தான் எமது குருநாதரும் என்னிடம் சொன்னார். எனக்குள் பதிவு செய்தார்.

இது ஏட்டில் இல்லை.
யாம் சொல்லும் இந்த நிலைகள் பாட்டிலும் இல்லை.
ஆக, உங்கள் கூட்டிலும் இல்லை.

அந்த மகரிஷிகளின் உணர்வை நாம் நுகரவேண்டும். அந்த அருள் மகரிஷிகளின் அருள் உனர்வுகள் உங்கள் கூட்டிற்குள் பதியச் செய்யவேதான் இதை உபதேசிக்கின்றேன்.

நீங்கள் யார்? இந்தப் பிள்ளை யார்?
என்று கேள்விக் குறியின் நிலைகளில்
அந்த மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்யவே இதைச் செய்கின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் கூட்டிற்குள் வந்துவிட்டால் பின் ஏட்டிலே ஏறுவதற்கு உங்கள் சிந்தனைகளும் செயல்களும் இந்த அறிவின் ஞானம் பெற்ற நிலைகள் கல்வியின் ஞானம் பெற்றாலும் இதை
அனுபவத்தில் வரப்படும் போது எழுத்து வடிவிலும் கொண்டு வரலாம்.
பிறருக்குப் போதிக்கவும் செய்யலாம்.
பேருண்மைகளை உணர்த்தவும் செய்யலாம்.