ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 12, 2016

மிக மிகத் திறமையுள்ளவர்களாக நாம் இருந்தாலும் வேதனை அதிகமானால் அந்தத் திறமை திறமையற்றதாகிவிடும்

சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒருவன் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்க்கப்படும் போது
அவன் படும் வேதனை நமக்குள் வந்தபின்
வேதனையின் உருவாக அது நம் உடலுக்குள் வலுப் பெறுகின்றது

ஒருவன் கோபமாகப் பேசும் நிலையில் கொடுரமான உணர்வின் தன்மை வருகின்றது. இது அதிகரித்து விட்டால் நமக்குள் வலுவான நிலைகளில் அது விளைந்து விடுகின்றது.

நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ அதே நிலைகள் சாரதியாக அது அமைந்து அவனை உதைக்கச் செல்கின்றோம். அந்த உணர்வுகள் அவனைத் தாக்கும் உணர்வுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.

இதுதான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

அவன் செய்யும் கோபமான உணர்வின் தன்மை நமக்குள் எடுக்கும் போது அதுவாக மாறி நாமும் கோபக்காரனாக மாறுகின்றோம்.

வேதனைப்பட்டவனின் உணர்வுகளை அதிகமாக நுகரும் போது வேதனைப்படுவரின் உணர்வைச் சுவாசித்துவிட்டால் மயக்கப்படுவோரும் உண்டு சில பேர் அடிப்பதைப் பார்த்தவுடன் அப்படியே மயங்கிக் கீழே விழுந்துவிடுவார்கள்.

சில பேர் கொடூரமாகத் தாக்குவதைப் பார்த்தால் அவனை விடக் கூடாது என்ற நிலையில் வேகமாகத் தாக்க வேண்டும் என்றும் எண்ணுவார்கள்.

விஷத் தன்மையை அதிகமாக நுகரப்படும் போது இத்தகைய நிலைகள் வந்துவிடுகின்றது. வேதனையைச் சுவாசிக்கப்படும் போது அது சாரதியாக அமைந்து அந்த உணர்வின் தன்மை அந்த மனிதனைக் கீழே வீழ்த்தச் செய்கின்றது.

நல்ல குணங்கள் அனைத்தும் இதற்குள் ஒடுங்கிவிடுகின்றது.

நாம் மிக மிகத் திறமையுள்ளவர்களாக இருப்பினும்
வேதனை உணர்வுகளை அதிகமாக நுகரப்படும் பொழுது
அந்தத் திறமை திறமையற்றதாக மாற்றிவிடும்.

நாம் எவ்வளவு வலு கொண்ட நிலைகளில் இருப்பினும் இந்த விஷத்தின் தன்மைகளை அதை நமக்குள் கவர்ந்துவிட்டால் நம்முடைய உயர்ந்த குணங்கள் அனைத்தையும் அது மடியச் செய்துவிடும்.

கராத்தே மாஸ்டர் என்று சினிமாக்களில் அன்று காட்டியிருப்பார்கள். கராத்தேயில் உலகிலேயே அவன் பெரிய சாம்பியன்.

அவன் எல்லாவற்றிலும் வெற்றி கொண்டு செல்கிறான் என்ற நிலையில் சூட்சமத்தில் அவன் உணவுடன் ஒரு துளி விஷத்தைக் கலந்துவிட்டான். அவன் செயல் அனைத்தும் போய்விட்டது.

உடலின் வலிமை அவனுக்குள் எவ்வளவு இருப்பினும் ஒரு துளி விஷம் அவனை அழித்து மரணமடையச் செய்துவிட்டது.

அவன் இந்த உடலில் விளைவித்த உணர்வுகள் அனைத்தும் சோர்வின் தன்மை அடைந்தபின் அவன் மீண்டும் மனிதனல்லாத நிலைகள் கொண்டுதான் செல்ல நேர்கின்றது.

எவ்வளவு வீரியத் தன்மைகளை அடைந்தானோ அந்த நிலையை அவன் சிந்தித்துப் பார்க்கும் போது அவனுக்குள் பழி தீர்க்கும் உணர்வுடன்
விஷத்தின் தன்மை கலந்த இவனின் ஆன்மா
எவன் அந்த விஷத்தை வைத்தானோ
எவன் சூழ்ச்சியின் நிலைகள் செய்தானோ
அவன் நினைவு அங்கே வந்து
அவன் உடலுக்குள் சென்று அவனை அழிக்கும்.

இவனை அழிக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். அவன் உணர்வு கொண்டு இந்த உடலை இந்த நஞ்சு அழித்தாலும் இவன் நினைவாற்றல் அவனை (விஷம் வைத்தவனை) அழிக்க வேண்டும் என்ற உணர்வு முன்னனியில் வந்துவிடுகின்றது.

அழித்திடும் உணர்வு முன்னனியில் வந்தபின் என்ன நடக்கின்றது?
  • ·         அவன் உடலுக்குள் சென்று அது பழி தீர்க்கும் உணர்வாக மாற்றிவிடும்.
  • ·         இந்த உடலின் வலிமை இழந்துவிடுகின்றது.
  • ·         நஞ்சின் வலிமை கூடிவிடுகின்றது.
  • ·         ஒரு உடலுக்குள் சென்றபின் அவனை அழித்துவிடுகின்றது.
  • ·         இவனையும் மனிதனற்ற நிலைகளுக்கு மாற்றிவிடுகின்றது.
இவை அனைத்தும் அந்தந்த உடலிலே விளையும் உயிரின் வேலைகள் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.