ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 26, 2015

அகக்கண் தியானம்

குருவின் துணையால் துருவமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.

அகஸ்தியன் துருவனாகி,
அவன் வாழ்வில் திருமணமாகி,
இருமனமும் ஒன்றென இணைந்து ,
இரு உயிரும் ஒன்றென இணைந்து,
இரு உணர்வும் ஒன்றென இணைந்து,
பேரருள் பெற்று பேரொளி பெறும் சக்தியை,
அவர்களுக்குள் உருவாக்கிய அந்த துருவ மகரிஷிகளின் அரும்பெரும் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிருடன் ஒன்றி ஏங்குங்கள்

"துருவ மகரிஷி, அவர்கள் கணவரும் மனைவியும் பெற்ற அந்தப் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" என்று ஏங்கி தியானியுங்கள்.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உயிருடன் ஒன்றிய நினைவினை துருவ மகரிஷி வாழ்ந்த காலங்களுக்குச் செலுத்தி அவர்கள் கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றி, இரு உயிரும் ஒன்றி, அவர்களுள் விளைந்த பேரருளை நாமும் நுகர வேண்டுமென்று ஏங்கி தியானியுங்கள்.

அவர்கள் பெற்ற பேரருள் உங்களில் மனம் மகிழும் உணர்வு ஒளி வட்டமாக உங்கள் புருவ மத்தியில் அந்தப் பேரொளியின் உணர்வுகளை அகக்கண் கொண்டு காணலாம், உணரலாம்.

துருவ மகரிஷிகளின் பேரருள் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கி தியானியுங்கள்.

கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்ற உணர்ச்சியை ஊட்டுங்கள். உணர்வினை ஊட்டுங்கள்.

உங்கள் உடலிலுள்ள ஜீவணுக்கள், ஜீவான்மாக்கள் பெற வேண்டுமென்று கண்ணால் நீங்கள் ஊட்டிய உணர்வு, பேரருள் என்ற உணர்வின் மகிழ்ச்சியின் உணர்ச்சிகள் உங்கள் உடலிலே உருபெறும் சக்தியை நீங்கள் உணரலாம்.

"துருவ மகரிஷிகளின் பேரருள் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா" துருவ மகரிஷிகளின் பேரருளின் ஒளி உங்கள் புருவ மத்தியில் அதனின் உணர்வின் உணர்ச்சியின் ஒளியை நீங்கள் காணலாம்.

அகக்கண்ணாக உங்களில் இருக்கும் உயிரான ஈசனுடன் இணைந்து நீங்கள் நுகரும் உணர்வுகள் பேரருள் பேரொளி என்ற உணர்வினைப் பெறும் உணர்வினை உங்கள் புருவ மத்தியில் (அகக்கண் கொண்டு) காணலாம்.

ஆண்கள், துருவ மகரிஷிகளின் பேரருள் மனைவியின் உடல் முழுவதும் படர்ந்து மனைவியின் இரத்த நாளங்களில் கலந்து மனைவியின் உடலிலுள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று ஏங்கி தியானியுங்கள்.

அதே போன்று, பெண்கள் துருவ மகரிஷிகளின் பேரருள் கணவர் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து கணவர் உடலிலுள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்று ஏங்கி தியானியுங்கள்.

துருவ மகரிஷிகளின் அருள்சக்தியும் பேரருளும் குழந்தைகள், தங்கள் தாய் தந்தை பெற வேண்டும் என்றும் உடல் முழுவதும் படர்ந்து அவர்களது இரத்த நாளங்களில் கலந்து அவர் உடல்களில் உள்ள ஜீவான்மாக்கள், ஜீவணுக்கள அந்தப் பேரருளைப் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி தியானியுங்கள்.

அவர்கள் பெறும் அந்த அரும்பெரும் சக்தியை அவர் கருவிலே உருவான உங்கள் உடல், அவர்கள் பெற அவர்கள் உடலிலிருந்து வரும் உணர்வினை  நீங்களும் நுகர்ந்து உங்களுக்குள் அந்த அரும்பெரும் சக்தியை உருவாக்க இது உதவும்.

துருவ மகரிஷிகளின் பேரருள் உங்கள் உடலுக்குள் பரவுவதும்,
உங்கள் உடலிலுள்ள அணுக்கள் அது நுகர்வதும்,
அந்த அணுக்கள் மகிழ்ச்சியுறும் உணர்ச்சி
உங்கள் உடலிலே பேரானந்தத்தை ஊட்டும் பெரு மகிழ்ச்சியின் உணர்வாக
உங்கள் உடலில் நீங்கள் உணரலாம்.

உங்கள் உடலிலே முன்னிருக்கும் ஆன்மாவில் அப்பெரும்சக்தி சுழன்று கொண்டிருப்பதை நீங்கள் நுகரும்பொழுது அவ்வுணர்ச்சியின் தன்மையும் உங்களின் உடலில் அருள் வட்டம் சுழன்று கொண்டிருப்பதை உணரலாம்.