ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2015

சிறு வயதிலிருந்தே எம்மைப் பின் தொடர்ந்து வந்த குரு - நடந்த நிகழ்ச்சி

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் ஒரு சித்தர் அல்லது மகரிஷி என்று யாரும் சிந்தித்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பித்தரைப் போன்றுதான் இருந்தார்.

பித்தரைப் போன்றுதான் பழனியம்பதியில் வாழ்ந்தார். யாம் (ஞானகுரு) வேலைக்குச் செல்லும்போது இடைவெளியில் வந்து எமது பாதையை மறித்தவாறு நிற்பார். எம்மைப் பார்த்து “வித்தைகளைக் கற்றுக் கொள்...! என்று கூறுவார்.

ஆனால் யாம் அவரிடம் எப்படி வித்தைகளைக் கற்றுக் கொள்வது...? பார்த்தால் ஒரு பித்தரைப் போன்று இருக்கின்றார். ஏனென்றால் பழனிக்கு ஏராளமான பித்தர்கள் வருவதுண்டு.

அந்தப் பித்தர்களைக் கண்டு யாம் ஒதுங்கிச் செல்வது போன்று குருநாதரையும் பித்தராக எண்ணி அவரை கண்டு ஒதுங்கிச் செல்வதுதான் எமது நிலை. குருநாதருடன் சேர்ந்து பழகினால் எமக்கும் பைத்தியம் பிடித்துக் கொள்ளுமோ...! என்ற பயமும் எமக்கு இருந்தது.

இதனால் குருநாதரை விட்டு யாம் விலகிச் சென்றோம். இருந்தாலும் குருநாதர் எம்மை விட்டபாடில்லை.

யாம் மில்லில் வேலையை முடித்துவிட்டுத் திரும்பி வரும்போது சண்முக நதிக்கு அருகே எமது பாதையில் வந்து குறுக்கிடுவார் குருநாதர். வேலைக்குப் போகும்பொழுதும் திரும்பி வரும்பொழுதும் குருநாதர் எம்மை வழி மறிப்பார்.

எம்மைப் பார்த்து... “டீ குடி... என்பார். டீ குடிக்க மறுத்தாலோ எம்மைத் துரத்திக் கொண்டு வருவார். அவர் வாங்கிக் கொடுக்கும் டீயைக் குடித்தால் எம்மை அங்கிருந்து போக விடுவார்.

இல்லை என்றால் எமக்கு இரண்டு திட்டு. அவர் திட்டுகிற பாஷையே வேறு விதமாக இருக்கும். ரொம்பக் கொச்சையாகப் பேசுவார். அடுத்தவர்கள் காதில் கேட்க முடியாது. அந்த அளவிற்குப் பேசுவார்.

இதற்குப் பயந்து கொண்டே குருநாதர் வாங்கிக் கொடுக்கும் டீயை யாம் சாப்பிடுவோம். சாமி, நான் டீ சாப்பிடுவதில்லை...! என்று கூறினால், சரி.. காபி குடி...! என்று கூறி காபி வாங்கித் தருவார்.

ஒரு சமயம் குருநாதர் எம்மை ஒரு வைத்தியரிடம் அழைத்துச் சென்று அவரைக் காண்பித்து இவருக்கு நான் தான் வைத்திய முறைகளைக் கற்றுக் கொடுத்தேன் என்று கூறி வைத்திய முறைகளை நீயும் கற்றுக் கொள் என்று எம்மிடம் கூறினார்.

அந்த வைத்தியரும் பல வைத்திய முறைகளை எமக்குக் கூறினார், குருநாதரிடம் நிறைய வித்தைகள் இருக்கின்றன...! என்றும் கூறினார்.

அவரிடம் நிறைய வித்தைகள் இருக்கின்றன சரி. ஆனால், அவருடைய நிலைமையைப் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கின்றது. நான் குடும்பஸ்தன். நான் பைத்தியம் போன்று சுற்ற முடியாது. அதனால் குருநாதரிடமிருந்து என்னை விடுவித்துவிடுங்கள். நான் போய்விடுகின்றேன் என்று யாம் வைத்தியரிடம் கூறினோம்.

நீ விட்டாலும்... நான் உன்னை விடமாட்டேன்...! என்று குருநாதர் எம்மைத் துரத்திக் கொண்டிருந்தார்.

ஒரு முறை குருநாதர் ஒரு பெஞ்சின் மீது உட்கார்ந்து கொண்டு... என்னைத் தூக்கு பார்க்கலாம்...! என்று எம்மைப் பார்த்துக் கூறினார்.

யாம் குருநாதரைத் தூக்கியபோது அவர் அமர்ந்திருந்த பெஞ்சும் அவருடன் ஒட்டிக் கொண்டு வந்தது. எம்மால் குருநாதரைத் தூக்க முடியவில்லை.

குருநாதர் எம்மைப் பார்த்து இவனுக்குச் சக்தியில்லை... என்னைத் தூக்க முடியவில்லை... என்று கூறினார். பிறகு “குருநாதர் மேலே கொஞ்சம் பார்த்துவிட்டு... இப்பொழுது உனக்குச் சக்தி வந்துவிட்டது... என்னைத் தூக்கு... என்று கூறினார்.

குருநாதர் சொன்னபடி யாம் அவரைத் தூக்கியபோது பெஞ்சு கீழே விழுந்தது. “பாருங்கள்... இவன் என்னமோ செய்கிறான்...! ஆனால் ஒன்றும் தெரியாது என்று கூறுகின்றான் என்று கூறினார்.

இது போன்று பல நிலைகளைச் செய்து காண்பித்தார் குருநாதர். ஒரு சந்தர்ப்பம் குருநாதர் எம்மைப் பழனிக்கு அருகிலுள்ள பெரிய ஆவுடையார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

எம்து சிறு வயதில் நடந்த சம்பவங்களைக் கதை போன்று எம்மிடம் சொன்னார். குருநாதர் எம்மைப் பார்த்து “நீ சிறு பிள்ளையாக இருந்த காலம் முதல் கொண்டு நான் உன்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றேன்...! என்று கூறினார்.

எமது மூன்றாவது வயதில் எமக்கு அம்மை வார்த்திருந்தது அது சமயம் சாமியம்மாவினுடைய சின்னம்மா அவர்களிடம் எனக்கு இட்லி வேண்டும் என்று கேட்டோம்.

எமது சிறு வயது பிராயத்தில் எமது ஊரில் பெரும்பகுதி வசதியானவர்களிடம் கூட இராகி கஞ்சி, சோள கஞ்சி போன்றவைகளைத்தான் தங்களுடைய உணவாக ஆக்கிக் கொண்டனர்.

விசேஷக் காலங்களில் தான் அர்சி போன்றவைகளைப் பயன்படுத்தி சில சிறப்பு உணவுகளைத் தயார் செய்வார்கள்.

சாமியம்மாவினுடைய சின்னம்மாவிடம் எனக்கு இட்லி தான் வேண்டும் என்று அடம் பிடித்ததால் அவர் பக்கத்து வீட்டிற்குச் சென்று அங்கிருந்து சாப்பாடும் சாம்பாரும் வாங்கி வந்து சாப்பாட்டை இட்லி மாதிரிச் செய்து எம்மைச் சாப்பிட வைக்க முனைந்தார்.

யாம் சாப்பிடட மறுத்து இட்லியை எடுத்து அவர்களை அடித்துவிட்டோம். எமது சிறு வயதில் நடந்த நிகழ்ச்சி.

இந்தச் சம்பவத்தை குருநாதர் அப்பொழுது சொன்னார். இது போன்று எமது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை குருநாதர் எம்மிடம் கூறினார்.

எமக்கு ஏழு வயது இருக்கும்பொழுது எமது தாயார் எமது தந்தையிடம் கோபித்துக் கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணி கிணற்றில் குதித்துவிட்டார்கள்.

எமது ஊரில் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே நீச்சல் கற்றுக் கொடுப்பார்கள். எமது அம்மா கிணற்றில் குதித்தபோது யாமும் கிணற்றில் குதித்து அம்மாவின் தலை முடியைப் பிடித்து மேலே தூக்கிக் கொண்டு வந்தோம்.

என் அம்மா... “விடுடா...! விடுடா...! என்று கத்தினார்கள்.

நீங்கள் மேலே வந்தால்தான் விடுவேன் என்று கூறி எமது தாயாரைக் கிணற்றிலிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்தோம்.

இது போன்று எமது சிறு வயதில் நடந்த சம்பவங்களையும் யாம் செய்த குறும்புத்தனங்களையும் பழனி பெரிய ஆவுடையார் கோவிலில் வைத்து குருநாதர் எம்மிடம் கூறினார்.