ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 21, 2015

விஷத்தின் செயலின் அறிவை அறிந்து, விஷத்தை நீக்கும் எண்ணத்தைத் தியானிப்பார் போகமாமகரிஷி

போகமாமகரிஷிகள் தாம் ஒரு பொருளைப் பார்த்து அதன் உண்மைத் தன்மையை அறிய விரும்பினால் “இதன் தன்மை என்ன” என்ற நிலையில் ஒவ்வொரு நிமிடமும் தன் உணர்வால் ஜெபிப்பார், தியானிப்பார்.

ஏனென்றால், போகமாமகரிஷிகளின் தாயார் விஷத்தால் தீண்டப்பட்டு இறந்தார். ஆகவே, போகமாமகரிஷிகள் விஷத்தை முறியடிக்க வேண்டும் என்ற ஏக்கம் கொண்டு பல இடங்களுக்குச் சென்றார்.

இதன் தொடர்ச்சியால் போகர் பல உணர்வுகளைத் தனக்குள் ஈர்க்கும் தன்மை பெற்று ஒவ்வொன்றையும் அறியும் தன்மை பெற்றார். போகர் தமக்குள் இருந்த ஒவ்வொரு உணர்வையும் தட்டியெழுப்பும் நிலை பெற்றார்.

இவ்வாறு எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு தாவர இனச் சத்திற்குள் இருக்கக்கூடிய நிலைகளை அறிந்துணர்ந்தார். இவைகளை போகமாமகரிஷி தன் சொந்த அனுபவமாகப் பெற்றார்.

இது போன்று அவர் ஒவ்வொரு நிலையும் தனக்குள் அறிந்து கொண்டபின் இந்தப் பூமிக்குள் இருக்கக்கூடிய சக்தி நமது உடலுக்குள்ளும் இருக்கிறது என்ற நிலையில் அந்தச் சக்தியை புவனேஸ்வரி என்று பூஜித்தார்.

ஒரு செடி இருக்கிறதென்றால் ஒரு நாள் முழுவதும் அந்தச் செடியின் ஆற்றலைத் தம்முள் இழுத்து அந்தச் சக்தியின் செயல் எவ்வாறு என்பதன் நிலையை முழுவதும் அறிந்து கொள்வார் போகர்.

ஒன்றைப் பற்றி முழுமையாக அறியும் வரையிலும் அதையே தியானம் செய்வார் போகர்.

அதைப் போன்று போகர் ஒரு விஷத்தின் தன்மையைத் தமக்குள் எடுத்துக் கொண்டபின்
அந்த விஷத்தின் ஆற்றலை நுகர்ந்து பார்த்து
நுகர்ந்த விஷத்தின் செயலின் அறிவை
தமக்குள் அனுபவமாக அறிந்து கொள்வார்.
பிறகு அந்த விஷத்தை நீக்கும் எண்ணத்தைத் தியானிப்பார்.
இதைத்தான் புவனத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சக்தியுடனும் போகர் செயல்பட்டார் என்று கூறுவார்கள்.

போகர் ஏழாயிரம், போகர் பன்னிரெண்டாயிரம் என்பதெல்லாம் பிற்காலத்தவர்கள் தங்கம் செய்யலாம், ரசமணி செய்யலாம் என்று பொய்ப் புரட்டுகளைச் சொல்லிச் செய்து அவரவர்களுக்குத் தகுந்த மாதிரி எழுதி வைத்துவிட்டார்கள்.

போகர் கஞ்சா குடித்தார். கஞ்சா குடித்து ஒரே சிந்தனையில் இருந்தார் என்றெல்லாம் எழுதியிருப்பார்கள். அன்று மெய்ஞானிகள் கூறிய உணர்வின் தன்மைகளை மாற்றியமைத்து லாகிரிவஸ்துவினுடைய நிலைகளை எழுதி வைத்துவிட்டார்கள்.

போகர் ஒவ்வொரு மூலிகையினுடைய தன்மைகளையும் விஷத்தின் தன்மைகளையும் அறிந்தார். அந்த விஷத்தின் தன்மைகளை நீக்குவதற்கு என்ன வழி, என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற உண்மைகளை அறிந்துணர்ந்தார்.

ஆனால், இன்று சித்தர் என்று சொல்லிக் கொள்பவர்கள் மனிதரின் மதியினை மயங்கச் செய்யும் பொருள்களை (போதைப் பொருள்களை) பயன்படுத்தி மதிமயங்கச் செய்கின்றனர்.

காரணம், தன் மனதை ஒரு நிலைப்படுத்துவதாகக் கூறுகின்றார்கள். இப்படிப் பலரும் எல்லாவற்றையும் தலை கீழ் பாடமாகச் செய்து கொண்டுள்ளார்கள்.

போகரின் தாயார் இறந்தபின் போகர் என்ன நிலைகளைச் செய்தார் என்றும் போகருடைய தாயின் சரித்திரத்தையும் யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். யாராவது அதைச் சொல்லி இருக்கின்றார்களா?

போகரும் காளிங்கநாதரும் சீனாவிலிருந்து வந்தவர்கள் என்று கூறுவார்கள். போகரைப் பற்றிய உண்மைகள் போகருடைய நாடிக்குள் உண்டு. ஆனால், போகருடைய நாடியை மற்றவர்களால் பிரித்துப் பார்த்து அறிய முடியாது.

பழனியில் நாடியினுடைய தத்துவத்தைப் பற்றிய உண்மைகளை எமக்குக் கொடுக்கும்போது போகருடைய தத்துவத்தைத்தான் குருநாதர் முதலில் கொடுத்தார்.

மெய்ஞானிகள் கொடுத்த பேருண்மையின் தன்மைகளை பிற்காலத்தவர் மாற்றியமைத்துவிட்டனர். அப்படி மாற்றியமைத்துக் கொடுத்த வழியில் இன்றுள்ள மக்கள் தங்களுக்குள் கடும் விஷத்தைத்தான் அடுக்கிக் கொண்டுள்ளார்கள்.

நமது குருநாதர் எமக்கு உணர்த்திய அந்தப் பேருண்மைகளை நீங்கள் எல்லாம் பெறவேண்டும் என்ற ஆசையில்தான் இதையெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றோம்.

ஆகவே, போகர் தனக்குள் விஷத்தை வென்ற அந்த ஆற்றல்மிக்க சக்திகள் இங்கே பரவிப் படர்ந்துள்ளது. அதை நீங்கள் நுகர்ந்து போகமாமகரிஷியின் அருளாற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்தெல்லாம் மீண்டிடும் ஆற்றலைப் பெற்று இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை எனும் அழியா ஒளிச் சரீரம் பெறுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழுங்கள்.