ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 12, 2015

தர்மம் ஒருவருக்குச் செய்யும்போது அவரால் வரும் வேதனை உணர்வுகளைத் தடுக்க வேணடியது மிக முக்கியம்

நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்று நீங்கள் நல்லதே நினைக்கின்றீர்கள். சத்துள்ள எல்லாவிதப் பொருள்களையும் போட்டு ஒரு உணவுப் பொருளைத் தயாரித்து அதில் ஒரு துளி விஷத்தைக் கலந்தால் என்னவாகும்?

ஒரு துளி விஷம் கலந்தவுடனேயே உணவுப் பொருளில் உள்ள எல்லாவிதச் சத்தும் பாழாகிவிடுகின்றன.

நீங்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்துவிட்டு சந்தோஷமாக இருந்து கொண்டிருப்பீர்கள். அது சமயம் ஒருவர் “ஐயா பசிக்கின்றது.., சோறு போடுங்கள் என்று கேட்பார்.

அட.., சோறு தீர்ந்துவிட்டது கூறுவீர்கள்.

அத்தனை பேருக்குப் போட்டீர்கள், எனக்கு ஒரு ஆளுக்குப் போடக் கூடாதா? என்று கேட்பார் பிச்சைக்காரர்.

சரி என்று சட்டைப் பையிலிருந்து 2 ரூபாயை எடுத்துக் கொடுத்து வைத்துக் கொள் என்று கூறினால் காசை வாங்கிக் கொண்டு, “ஐயா சோறு போடுங்கய்யா.., என்று மறுபடியும் கேட்பார்.

இது போன்று பிச்சைக்காரரின் குரலை நான்கு முறை கேட்டால் கோபம்  வந்துவிடும். எல்லோருக்கும் சோறு போட்டு இவனுக்குச் சோறு இல்லையே என்று காசு போட்டால் இவன் மறுபடியும் மறுபடியும் கத்துகிறானே என்று கோபம் வரும்.

சரி இந்தா 5 ரூபாய் வைத்துக் கொள் என்று 5 ரூபாயைக் கொடுத்தால் அதையும் வாங்கிக் கொண்டு ஐயா சோறு போடுங்கள் என்று மறுபடியும் பிச்சைக்காரர் கேட்பார்,

பிச்சைக்காரர் மேலும் மேலும் காசு வாங்குவதில்தான் குறியாக இருப்பார். இதை குருநாதர் நேரடியாக நடத்திக் காண்பித்தார்.

தர்மம் தலை காக்கும் என்று கூறுகின்றார்கள். தர்மம் எப்படி உன் தலையை எப்படி ஓட்டும் என்ற நிலையைக் காண்பித்தார் குருநாதர்.

ஆயிரம் பேருக்கு நீங்கள் சாப்பாடு போட்டாலும், பிச்சைக்காரர் திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்கும்போது பிச்சைக்காரர் பெற்ற
தரித்திரம் கஷ்டம் போன்ற உணர்வுகள்
பிச்சைக்காரர் உங்களிடம் கேட்கக் கேட்க
இதன் உணர்வுகள் அழுத்தமாகி
பிச்சைக்காரரின் உணர்வுகள் உங்களிடம் ஏறிவிடும்.

தர்மம் செய்து என்ன பிரயோஜனம் இருக்கின்றது?
என்ன செய்து என்ன புண்ணியம்? என்ற உணர்வு உங்களிடம் உருவாகும்.

நீங்கள் ஆயிரம் பேருக்கு நன்மை செய்தாலும் பிச்சைக்காரர் ஒருவரால் வ்ந்த வேதனை உங்களிடம் உமிழ்நீராக மாறுகின்றது.

வேதனையின் உணர்வால் விளைந்த உமிழ்நீர் சிறுகுடல் பெருங்குடலுக்கு வந்தபின் ஜீரண உறுப்புக்கள் சரியாக இயங்காது. வயிற்றுப் பொருமல் ஏற்படும், வயிற்றுப் போக்கு ஏற்படும்.

இதை அனுபவித்துத் தெரிந்துகொள்ளலாம். உயர்ந்த குணங்கள் இருந்தாலும் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் எமது உடலில் எப்படி எப்படி இயங்குகிறது என்பதை அனுபவபூர்வமாகக் காண்பித்தார் குருநாதர்.

சந்தர்ப்பத்தால் தீய வலிமையான உணர்வுகள் உங்களில் வராமல் இருப்பதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம்.

தர்மம் செய்வது முக்கியமல்ல.
தர்மம் செய்யும்போது ஒருவரால் வரக்கூடிய வேதனை உணர்வுகள் உனக்குள் வராமல் தடுக்க வேண்டும்.

அந்த வேதனை உணர்வுகள் உனக்குள் வந்து இயக்காமல், வேதனை அணுக்கள் உன் உடலுக்குள் வளராமல் அருள் மகரிஷிகளின் உணர்வை உனக்குள் சேர்த்து அவைகளைத் தடுத்துப் பழகவேண்டும் என்று குருநாதர் கூறினார்.