ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 20, 2015

உங்கள் தியானத்தின் ஆற்றலைக் கூட்டும் சந்தர்ப்பம் எது?

நாம் ஒரு குழந்தை மேல் பாசமாக இருக்கின்றோம். அந்தக் குழந்தைக்கு நோய் வந்துவிட்டால் வேதனைப்படுகின்றோம்.

அந்தக் குழந்தையை எண்ணி வேதனை உணர்வுகளை நமக்குள் அதிகமாக எடுத்து டாக்டர்களிடம் போய்ச் சொல்கிறோம். அப்பொழுது அந்த வேதனையாகச் சொல்லும் உணர்வுகள் டாக்டர் பால் பாய்ச்சப்படும்போது
நம்முடைய அந்த உணர்வுக்குத்தக்க
டாக்டர் குழந்தையைப் பார்க்கும் நிலை ஆகின்றது.

நாம் எந்தளவிற்குப் பதட்டமான உணர்வுகளை எடுத்து டாக்டரை அணுகுகின்றோமோ அந்த உணர்வுக்குத்தக்க தான் டாக்டரின் உணர்வின் செயலாக்கமும் இருக்கும்.

நீங்கள் டாக்டரிடம் சென்றாலும் சரி, மற்ற மருத்துவர்களிடம் சென்றாலும் சரி, அல்லது ஜோஸ்யரிடம் சென்றாலும் சரி இதே நிலைதான்.

அந்தக் குழந்தையின் தாய் தந்தையும், உறவினர்களும்
பாசத்தின் உணர்வு கொண்டு எண்ணி வேதனைப்படும் உணர்வுகள்
பாசத்தால் ஏங்கும் குழந்தையின் உள்ளத்தில் பாய்ந்து
அந்த குழந்தையிடத்தில் உள்ள சிறிய நோயை
பெரிய நோயாக மாற்றிவிடுகிறது.

குழந்தையின் மீது ஏக்கத்தைச் செலுத்தி வேதனைப்பட்டுக் குழந்தையைப் பார்ப்பதாலும் வேதனை உணர்வு கொண்டு குழந்தைக்கு உணவு கொடுப்பதாலும், குழந்தையினிடத்தில் நோயின் தன்மை அதிகரிக்கும் தன்மை வந்துவிடுகின்றது.

டாக்டர் ஒருவரைப் பார்த்து, உங்களைக் கடினமான நோய் தாக்கிவிட்டதுஎன்று கூறிவிட்டால் போதும், அந்த நோயாளியைப் பார்த்து அவர் உறவினர்களும் நண்பர்களும் நோயின் கடினத் தன்மையைப் பற்றிச் சொல்லத் தொடங்கி விடுகிறார்கள்.

“ஐயோ, உங்களுக்கு இது போன்று ஆகிவிட்டதே” என்று நோயாளியிடம் அவர்கள் சொன்னால் என்ன ஆகும்?

நோயாளியின் பலவீனமான உணர்வுகளில் உறவினர்களும் நண்பர்களும் சொன்ன உணர்வுகள் கலந்தவுடனே, நோயாளி அதையே எண்ண ஆரம்பித்துவிடுவார்.

“எனக்கு இப்படி ஆகிவிட்டதே” என்று திரும்பத் திரும்ப எண்ணத் தொடங்கிவிடுவார். இதுவும் தியானம்தான்.

நோயாளி தன்னிடத்தில் நோய் சிறிதளவாக இருக்கும்போது, எனக்கு இப்படி ஆகிவிட்டதே.., என்று மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது தன்னிடத்திலுள்ள நோய்க்குத் தானே உரம் கொடுத்து வளர்ப்பது போன்று ஆகிவிடுகிறது.

மனிதர்களான நமது வாழ்க்கையில் நம் உணர்வில் அசுத்தங்கள் வந்து மோதத்தான் செய்யும்.

ஆனால், நம் வாழ்க்கையில் நம் உணர்வுகளில் வந்து மோதும் அசுத்தங்களை உடனுக்குடன் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அன்று ஞானிகள் இயற்கையில் சந்தர்ப்பத்தால்
தங்களிடத்தில் வரும் தீமைகளை எப்படி நீக்கினார்களோ
தமக்குள் பேரருளை எப்படிப் பெற்றார்களோ
இதைப் போல அருள்ஞானிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் பெற 
உங்களுக்கு ஆத்ம சுத்தியை ஆயுதமாகக் கொடுத்துள்ளோம்.
உங்களுக்கு உயர்ந்த வாக்கையும் கொடுக்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ, உடலில் நோய் வருகின்றதோ அல்லது தீமைகள் வருகின்றதோ அதுசமயம், தியானத்தையும் ஆத்ம சுத்தியையும் நீங்கள் செய்தால் அனைத்துத் தீமைகளையும் நீக்கும் ஆற்றல் உங்களில் பெருகும். உங்கள்  தியானமும் ஆற்றல் கூடும்.