ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2015

இந்த உடலுக்குப் பின் என்ன? வழி காட்ட சரியான குருவின் துணை தேவை

வேதனையின் உணர்வுகளை வலுவாக்கினால் நம் உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் விஷம் கலந்துவிடுகிறது. இதன் தொடர் கொண்டு காற்றிலிருந்து விஷத்தை எடுத்து அடிக்கடி வேதனைப்படச் செய்கிறது.
உங்களிடத்தில் நோய்களை உருவாக்குகிறது.
வாழ்க்கையில் வெறுப்படையச் செய்கிறது.
மற்ற உயிரினங்களுக்கு விஷத்தை நீக்கத் தெரியாது.

நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று உங்களை அறியாது சேர்ந்த தீமைகளைத் துடைக்கவேண்டும், உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் விநாயகரை வைத்துள்ளார்கள்.
விநாயகர் சிலையை வடமேற்கே பார்க்கும்படி வைத்து
நம்மை வடகிழக்கு நோக்கி வணங்கும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

இவைகளை மனதில் வைத்து காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நீங்கள் வலுவாக்கும்போது தீமைகள் உங்களுக்குள் வராது தடைப்படுகிறது.

நமக்குள் உள்ள கெட்ட அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடுக்கப்பட்டு தீய உணர்வுகள் நம் ஈர்ப்பு வட்டத்தைவிட்டு அப்புறப்படுத்தப்படுகின்றது. இதன் தொடர் கொண்டு நமக்குள் கெட்ட அணுக்கள் வளராது தடைப்படுகின்றது.

குருநாதர் எமக்குள் பதிவு செய்த உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். எமக்குப் போதுமான சக்தி இருக்கின்றது. அதைப் போல நீங்களும் பக்குவப்பட்டு மெய்வழியில் செல்லும் ஆற்றலைப் பெறவேண்டும்.

நீங்கள் உங்கள் வேதனைகளைச் சொல்லும்போது அந்த உணர்வுகள் உங்களிடம் வருகின்றது. அந்த வேதனை உணர்வுகள் உங்களைத் தாக்காமல் பாதுகாக்க வேண்டும்.

எம்மை குருநாதர் பாதுகாத்து வருவதைப் போன்று உங்களைப் பாதுகாத்து வரவேண்டும். எத்தனை ஆயிரம் பேர் வருகின்றார்களோ அத்தனை ஆயிரம் பேருக்கும் பாதுகாப்பு கொடுத்தே ஆகவேண்டும்.

உங்களிடம் இரண்டு பேர் வந்து “எங்களுக்கு அந்தக் கஷ்டம், இந்தக் கஷ்டம் என்றும், அவர்கள் எங்களை இப்படிப் பேசுகின்றார்கள்” என்று கூறினால் அதை நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

அப்பொழுது அந்த விஷ உணர்வுகள் உங்களுக்குள் வராது பாதுகாக்க வேண்டும். நீங்கள் ஆத்ம சுத்தி செய்து தீமையின் உணர்வுகள் வராது தடைப்படுத்திவிடவேண்டும்.
உங்களிடம் தங்கள் வேதனைகளைக் கூறியவர்களையும்
ஆத்ம சுத்தி செய்யச் சொல்லி
தீமைகளைத் துடைத்துக் கொள்ளச் செய்யவேண்டும்.

இது போன்று அருள் உணர்வுகளை உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டீர்கள் என்றால் உங்களிடத்தில் தீமைகள் எதுவும் வராது.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதில் கலந்துள்ள செம்பும் பித்தளையும் ஆவியாகிவிடுகின்றது. இதுபோன்று அருள் உணர்வின் ஆற்றல் உங்களிடத்தில் அதிகமாகும்போது உங்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளையெல்லாம் மாற்றிவிடும்.

அது வரையிலும் குருவினுடைய உதவி உங்களுக்குத் தேவை. ஏனென்றால் உங்களைக் காக்கவேண்டிய பொறுப்பு எமக்கு அதிகமாக இருக்கின்றது.

எமக்கு எவ்வளவு நாள் குருநாதர் உதவியிருந்தாரோ அது போன்று குருவினுடைய தன்மை உங்களுக்குள் நீங்கள் வளர்க்க வளர்க்க அது உங்களைப் பாதுகாக்கும்.

எமது ஆசை என்ன?
ஒவ்வொரு உயிரும் கடவுள்.
ஒவ்வொரு உடலும் கோவில்.
மனிதராக உருவாக்கிய அரும்பெரும் சக்தி காக்கப்படவேண்டும்.
நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்
என்று எண்ணி யாம் செய்யும்போது
உங்களுக்குள் விளைவது எமக்கும் கிடைக்கின்றது, மற்றவர்களுக்கும் கிடைக்கின்றது.

நீங்கள் கவலைப்பட்டுச் சொல்லும்போது மற்றவர்களுக்கு வேதனையாகின்றது. நீங்கள் சந்தோஷமான சொல்களைச் சொல்லும்போது மற்றவர்களுக்குச் சந்தோஷமாகின்றது.

மற்றவர்கள் சொல்வது இந்த உடலுக்குத்தானே தவிர
இந்த உடலுக்குப் பின் என்ன?
என்று யாரும் சொல்லவில்லை.

நாம் இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளிச்சரீரம் பெறவேண்டும் என்பதைத்தான் விஜய தசமி என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

நீங்கள் அனைவரும் அந்த அழியா ஒளிச்சரீரம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் யாம் இத்தனை பாடுபடுகின்றோம்.