ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 24, 2015

அகஸ்தியரோடு நீ ஐக்கியமாவதுதான் உன் வேலை என்றார் குருநாதர்

உயிரணு பூமிக்குள் வந்தபின் உடல்களைப் பெறுவதற்குண்டான காரணங்களையும் பன்றியின் சரீரத்திற்குப் பின் அடுத்து மனிட உடல் பெறும் நிலைகளையும் எமக்கு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தினார்.

மனிதனாகப் பிறந்தாய். இந்த மனித வாழ்க்கையில் உன்னிடத்திலுள்ள விஷ உணர்வுகளை நீக்கவிலை என்றால் மீண்டும் பிறவிச் சுழலுக்கே செல்வாய். இதே நிலைதான் ஒவ்வொரு மனிதருக்கும்.

ஆகவே, மனிதர்களிடத்திலுள்ள தீமைகளை விஷ உணர்வுகளை நீக்குவதற்கு என்ன வழி? என்று எம்மிடம் கேட்பார் குருநாதர்.

இது போலக் கேட்டுவிட்டு பதில் சொல்லாமல் இருந்தாலோ, தெரியாது என்று சொன்னாலோ, உடனே குருநாதர் வாயினால் சொல்லமுடியாத அசிங்கமான வார்த்தைகளால் எம்மைத் திட்டுவார்.

“தொம்.., தொம்..” என்று பலமாக எம்மை அடிப்பார். இதையெல்லாம் யாம் சகித்துக் கொண்டுதான் அவரிடம் இருக்கவேண்டும்.

எம்மை அவரிடமிருந்து விரட்டுவதற்கு என்ன வேலையோ அதைக் குருநாதர் செய்வார். “சரி.., அவரிடமிருந்து ஓடிவிடலாம்..,” என்று யாம் நினைப்போம்.

உடனே, குருநாதர் “நான் சொல்வதைச் செய்கிறேன்” என்று சொன்னாய் அல்லவா. ஆகவே நீ என்னிடமிருந்து தப்ப முடியாது என்பார்.

இது போன்று குருநாதர் போட்ட கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டு யாம் இந்தப் பக்கமும் போகவில்லை, அந்தப் பக்கமும் போகமுடியவில்லை.

இது எதற்குச் சிரமம்? அவரிடமிருந்து விலகிக்கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால், குரு அருளினுடைய உணர்வுகளிலிருந்து யாம் எங்கேயும் தப்ப முடியாது.
அதே சமயத்தில் தப்பு செய்யவும் முடியாது.
தப்பு செய்தால் அடுத்த நிமிடமே தண்டனை கிடைக்கும்.
அந்த அளவிற்குத்தான் எம்மை குருநாதர் கொண்டு வந்தார்.

இயற்கையின் உண்மையில் நீ தவறு செய்யவில்லை. சந்தர்ப்பம் உன்னைத் தவறு செய்ய வைக்கிறது என்பது போன்ற உண்மைகளை குருநாதர் எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்து உணர்த்தினார்.

அகஸ்தியர் தமது வாழ்க்கையில் தீமைகளை நீக்கி பேரொளி என்ற நிலையைப் பெற்று இன்று விண்ணிலே துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.

அகஸ்தியர் பெற்ற உணர்வை நீ பெறவேண்டும். அதில் நீ ஐக்கியமாவது தான் உன் வேலை என்று கூறினார் குருநாதர்.

ஆனால், குருநாதரிடம் பழகியவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? குருநாதர் எனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தால் கோவில் கட்டுவேன், அதைக் கட்டுவேன் என்று கூறுவார்கள். இதைப் போன்றவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள்.

எம்மிடமும் வந்து இதைச் செய்தால் நான் அதைக் கட்டித் தருவேன் என்று கூறுகின்றார்கள். யாம் யாரிடமும் பணம் கேட்டு தபோவனத்தை கட்டவில்லை.

குருநாதருடைய அருள் உணர்வுகள்தான் எம்மை நம்மை இயக்கிக் கொண்டு வருகின்றதே தவிர வேறு எதுவும் இல்லை. எல்லாம் அவரின் செயலாக்கங்கள் தான்.

அதற்காகத்தான் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்” என்று குருநாதரின் பெயரை வைத்துவிட்டோம். நீங்கள் எதை எண்ணினாலும் அது சமயம் தபோவனத்தை எண்ணுங்கள்.

தபோவனத்தில் குரு பீடத்தை அமைத்துள்ளோம். குரு பீடத்தை எண்ணும்போது உங்களுக்குத் தேவையான சக்தி கிடைக்கின்றது.

சாமி (ஞானகுரு) சொன்னார் என்று அருளுணர்வின் வழியில் அருள்சக்தியைப் பெறுவோம் என்று எண்ணினால் போதும்.

சாமி செய்வார் என்ற நிலைக்கு மாறாக ஞானகுரு காண்பித்த அருள்வழியில்
குரு பீடத்தின் அருளொளியை நாங்கள் பெறுவோம்
இருளை நாங்கள் நீக்குவோம் என்ற நிலையை
நீங்கள் ஒவ்வொருவரும் பெறவேண்டும்.

இதுபோன்ற நிலையை நீங்கள் பெற்றால் இனி உலகில் வரக்கூடிய விஷத்தன்மைகளிலிருந்து உங்களைக் காக்கக்கூடிய பாதுகாப்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

ஏனென்றால், நம் உடலுக்குள் இரத்தத்திலிருந்து உடல் உறுப்புக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வலு கூட்டக் கூட்ட நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்துவிடுகின்றோம்.

அருள் வழியில் உங்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கி, நீங்கள் ஒரு தெளிவான நிலைக்கு வரவேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவாக்குகின்றோம்.

திரும்பச் திரும்பச் சொல்கிறார் என்று எண்ணாதீர்கள், அர்த்தமாகவில்லை என்று எண்ணாதீர்கள்.

சாமி சொன்ன நிலைகளை நாங்கள் பெறவேண்டும். குரு அருளை நாங்கள் பெறவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும், இருளை நீக்கும் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்ற எண்ணம் மட்டும் உங்களிடம் இருந்தால் போதும்.

இந்த உணர்வுகள் காற்றிலிருந்து தன் இனச் சத்தை இழுத்துக் கொள்ளும். இதனைத் தொடர்ந்து நீங்கள் ஆகாரம் உட்கொள்ளச் செல்லும்போது உற்சாகமாக இருக்கும். சாப்பாடும் சுவையுள்ளதாக இருக்கும்.

உங்கள் உடலிலுள்ள அணுக்களும் உற்சாகம் அடைகின்றன. ஒவ்வொரு அணுவும் உற்சாகம் அடையும்போது உங்கள் உடலில் நல்ல இரத்தம் ஊறும். உயிரைப் போன்றே உணர்வின் அணுக்களும் வீரியம் அடைகின்றன.