ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 21, 2015

பெரும் சொத்து, அழியா சொத்து என்றும் நிலையான சொத்து - நமக்கு எது?

கோடி பணம் இருந்தாலும் கோடி கோடி செல்வங்கள் இருந்தாலும் நமது வாழ்க்கையில் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் கடும் நோய்களாக நமக்குள் உருவாகிவிட்டால் இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை.

கோடிக்கணக்கில் செலவழித்து பங்களாவை அமைத்தாலும் இந்த உயிர் இந்த உடலை விட்டுச் சென்றபின் இந்த உடலிலே எதைச் சேர்த்துக் கொண்டதோ அதன்நிலை கொண்டு அடுத்த உடலுக்குள் தான் செல்கின்றது.
ஆக, இந்த சொத்து எதுவும் நமக்குப் பயன்படுவதில்லை.
நமது பிள்ளைகளும் அதை பெறப்போவதில்லை. 

அதற்காக இந்த சொத்திற்கும் மற்றவற்றிற்கும் போர்முறைகள் வைத்து வேதனை, வெறுப்பு இதைப் போன்ற நிலைகள் நம் உடலில் உருவாக்காதபடி அதைக் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே, நமக்கு பெரும் சொத்து, அழியா சொத்து, என்றும் நிலையான சொத்து எது?

நாம் காலை துருவ தியானத்தில் எடுக்கும் (துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழும்) பேரின்பப் பெருவாழ்வு என்று சொத்தும், பிறவியில்லா நிலைகள் அடையும் சொத்துமே ஆகும்.
மனிதனாகப் பிறந்த பின் நமது எல்லை,
இனி பிறவியில்லா நிலை.

ஆக பிறவியில்லா நிலைகள் அடைந்து அகண்ட அண்டத்தில் வருவதையும் தனக்குள் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டிருக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும்.

ஆறாவது அறிவு ஏழாவது நிலையாகத் தனக்குள் சிருஷ்டிக்கும் உணர்வின் வளர்ச்சியின் பாதையில் சென்று நாம் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து வாழ்வதே "கடைசி நிலை".

நமது சூரியக் குடும்பத்தில் நம் சூரியன் செயலிழக்கும் தருணம் வந்துவிட்டது. அதன் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் கோள்களும் மறைந்துவிடும்.

ஏனென்றால், சூரியனுக்கு உணவாக எடுத்துக் கொடுக்கும் 27 நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் நம் சூரியனைப் போன்றே அது ஒரு பிரபஞ்சமாக மாறி விலகிச் சென்று கொண்டிருக்கின்றது.

அதாவது, கார்த்திகை நட்சத்திரம், ரேவதி நட்சத்திரம் இப்படி சில சில நட்சத்திரங்கள் சூரியக் குடும்பம் போல மாறுவதனால் நமது சூரியக் குடும்பத்திற்கு வரும் சக்திகள் இழக்கப்படுகின்றன.

இப்பொழுது, மது வாழ்க்கையில் நமக்குக் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்கள் ஒரு தனிக் குடும்பமாக பிரிந்து செல்கின்றனர்,

அவர்கள் பிரிந்து செல்லப்படும்பொழுது நாம் பலவீனமடைகின்றோம். நாம் பலவீனமடையும் பொழுது நம் குழந்தைகளிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்க முடிவதில்லை.

இதைப்போன்றுதான் இந்த சூரியன் அழியலாம். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தில் உருவான உயிர், அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த உணர்வின் வழியில் நாம் செல்வோம் என்றால் "என்றும் வேகா நிலை".

இப்பொழுது நெருப்பில் இட்டால் நமது உயிர் வேகுவது இல்லை. நமது உணர்வின் அணுக்கள் வெந்துவிடுகின்றது. ஆகவே வேகா நிலை என்ற நிலையை நாம் உருவாக்கி, அகண்ட அண்டத்திலும் அழியா நிலை என்ற நிலையை நாம் பெறுதல் வேண்டும். இதுதான் பிறவியில்லா நிலை.

ஆகவே, இந்த உடலில் இப்பொழுது நாம் இதை உருவாக்கத் தவறினால் அடுத்த சந்தர்ப்பம் எப்பொழுதோ என்று நமக்குத் தெரியாது.

புழுவாக பூச்சியாக இருந்து மனிதனாக உருவாக்கிய உயிரை, உயிரைக் கடவுள் என்று அறிந்து கொண்டபின், உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிய அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நமக்குள் சேர்க்க வேண்டும்.

அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் நாம் சென்றோமென்றால், அதன் எல்லையில் நாம் என்றும் நிலையாக வாழலாம், பிறவில்லா நிலைகள் அடையலாம்.

இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும், பின் எதனின் சேர்க்கையில் இன்று இந்த துருவ நட்சத்திரம் இருக்கின்றதோ அதனின் ஈர்ப்பு வட்டத்தில்
அகண்ட அண்டத்தில் நாம் சுழன்று சென்று,
வரும் உணர்வுகளை உணவாக மாற்றி,
ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

ஆக அகண்ட அண்டத்தில் "என்றும் பதினாறு என்று சிறிதாகவே நாம் இருப்போம். என்றும் பதினாறு என்ற நிலையில் வளர்ச்சியின் பருவத்திலே பல கோடி ஆண்டுகள் வாழும் நிலைகள் வருகின்றது.

இந்த அண்டமே ஒளியின் சரீரமாக முழுமையாக அடையும் பொழுது, அது எத்தனையோ கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றது.

அகண்ட அண்டத்தில் எத்தனையோ கோடி சூரியன்கள் உண்டு.
எத்தனையோ கோடி கோள்கள் உண்டு.
இப்படி எண்ணிலடங்காத நிலைகள் இருக்கும் பொழுது, அதன் உணர்வுகளை என்றும் நாம் நுகர்ந்து, உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நாம் மாறுதல் வேண்டும்.

இப்படி நமக்குள் உருவாகும் உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது, அதைப் பல சூரியன்கள் எத்தனையோ கவர்கின்றன. அந்தச் சூரியக் குடும்பங்களை உருவாக்கும் மனித இனங்கள் உண்டு.
அவைகளுக்கு நம் உணர்வுகள் அதில் பயன்படும்.
அவர்கள் தீமைகளை வென்றிடவும் இது உதவும்.

ஆகவே, நாம் உலகைக் காத்திடும் கடவுள்களாக என்றும் நிலை கொண்டு வாழ முடியும்.

ஒன்றுக்குள் ஒன்று சென்று, இன்று நமக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நம் உடலுக்குள் சென்ற பின், நமக்குள் தீமையை வென்றிடும் அருள் சக்தியான கடவுளாக நமக்குள் விளையத் தொடங்கிவிடுகின்றது.

நாம் எண்ணியதை அந்த ஒளியின் சரீரமாக உருவாக்கும் ஈசனாக நமது உயிர் அமைகின்றது. நமது உயிர் அமைவது போல,
நுகர்ந்த உணர்வின் அணுக்கள்
அதன் வழிகளிலே என்றும் ஒளியின் சரீரமாக
நமக்குள் உருவாக்கும் கடவுளாக
ஈசனாக உருபெறச் செய்கின்றது.