ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2015

நாம் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்?

நாம் நுகர்ந்த உணர்வுகள்தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றது..

இதைத்தான், புராணங்களில் “ஓம் என்ற பிரணவத்தை சிவனுக்கே ஓதினான் முருகன்” என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது நாம் நுகரும் உணர்வு நம் உடலை இயக்குகிறது.
பிரணவம் எதுவோ அதற்குத்தக்க உடலும் இயங்குகின்றது.
நமது உடல் சிவம்.
நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலை இயக்குகின்றது நம் உயிர்.

முருகன் சிவனுக்கே ஓதினான் ஓம் என்ற பிரணவத்தை. அதாவது நமது ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் தீமைகளை நீக்கும் உணர்வைச் சுவாசித்தால் சுவாசித்த உணர்வு நம்மிடத்திலுள்ள தீமைகளை நீக்கும்.

ஆகவே, நாம் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்?

தீமைகளை நீக்கும் உணர்வை நாம் இச்சைப்பட்டால் நுகர்ந்த உணர்வுகள் நம் உயிரில் பட்டு கிரியையாகி தீமைகளை நீக்கும் ஞானங்கள் நம்மிலே விளைகிறது.

இதைத்தான் வலிமை மிக்க சக்தி “வள்ளி” (வல்லி) என்றனர் ஞானிகள்.

பல கோடி உடல்களைப் பெற்று, பெற்ற உடல்களில் தீமைகளை நீக்கும் உணர்வுகளைச் சேர்த்து இன்று ஆறாவது அறிவு கொண்ட மனிதனாகப் பிறந்துள்ளோம். தீமைகளை நீக்கக்கூடிய வலிமையான நிலை நம் ஆறாவது அறிவுக்குண்டு.

விஞ்ஞானிகள் தமது ஆறாவது அறிவின் துணை கொண்டு இன்றைக்கு எத்தனையோ புதுப் புது கருவிகளைச் செய்கின்றனர்.

நம்மால் ஒரு குறிப்பிட்ட கிலோ அளவுக்கு மேல் எடையுள்ள பொருள்களைத் தூக்க முடிவதில்லை. ஆனால், விஞ்ஞானிகள் டன் கணக்காக எடையுள்ள உள்ள பொருள்களை விண்வெளிக்கே தூக்கிச் செல்லும் இராக்கெட்டுகளைப் பறக்க விடுகின்றனர்.

இது மனிதர்களின் எண்ண வலுதானே.

விஞ்ஞானிகள் தங்கள் எண்ண வலுவைச் செலுத்தி பல டன் எடையுள்ள பொருள்களை வான்வெளிக்குத் தூக்கிச் செல்லக்கூடிய கருவிகளைச் செய்கின்றனர்.

அப்பொழுது அவர்களுடைய செயல்பாடுகள் வெற்றி பெறுவதற்கு அவர்களுடைய எண்ண வலுவே காரணமாக இருக்கின்றது. இது போன்று,
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எண்ணி
பேரருள் உணர்வுகளை நம்முள் வலிமையாக்கும் பொழுது
நாம் நமது வாழ்க்கையில்
எத்தகையை நிலை வந்தாலும் சமாளிக்க முடியும்.

இதற்குத்தான் உங்களை அடிக்கடி ஆத்மசுத்தி செய்யச் சொல்வது. ஆத்ம சுத்தி செய்வதை உங்களுடைய பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.