ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 14, 2015

சாப அலைகளின் இயக்கங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது (ரோட்டின் ஓரமாக) வயல்களிலே ஒரு வயரை இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்குண்டான ஆயுதங்களையும் இயந்திரங்களையும் வைத்து மண்ணைத் தோண்டி உள்ளே அதைப் பதிக்கிறார்கள்.

சில இடங்களில் கடும்பாறைகள் வந்துவிடுகிறது. அதை வெடிக்க வைத்துத்தான் எடுக்க வேண்டும். பாறையாக இருக்கிறது என்று விட்டுவிடுகிறார்களா? விடுவதில்லை.

அதே மாதிரி புதிதாக ஒரு ரோடு போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு இடத்தில் சதுப்பு நிலமாக இருக்கின்றது. அதை அப்படியே விட்டுவிடுகிறார்களா? இல்லை.

அதற்கு வேண்டிய கருங்கல்களைப் போட்டு அந்தச் சதுப்பைத் தாங்கக்கூடிய அளவிற்கு ரோடு போடுகிறார்கள்.

இதைப் போலத்தான் நமக்குள் எத்தனையோ மேடு பள்ளங்கள் உண்டு.

காடுகளில் வாழும் மிருகங்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு ஒன்றை ஒன்று கொன்று புசிக்கின்றதோ அதைப் போல இத்தனை மிருகங்களாக இருந்து வந்தவர்கள்தான் நாம்.

ஒன்றை ஒன்று கொன்று புசித்து அதனின் நிலைகளில் வலு கொண்டு நாம் மனிதனாக இன்று வந்துள்ளோம். அதே மாதிரி நாம் பல கோடி தாவர இனச் சத்தை உணவாக உட்கொண்டுள்ளோம்.

அந்தத் தாவர இனச் சத்துக்கள் அனைத்தும் நமக்குள் பெரும் காடாக இருக்கிறது. அதிலே
புலியும் யானையும் பாம்பும் பூனையும் இருக்கிறது என்ற நிலையில்
அந்த குணங்கள் நமக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இவை அனைத்தும் நமக்குள் நின்றே தீமைகளை விளைவிக்கிறது. இதெல்லாம் கடும் சாபங்கள். இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் தப்பிக்க வேண்டும்.

நரி தன் இரையைப் பிடிக்கவேண்டும் என்றால் தந்திரமாக வேலை செய்யும். அதாவது தன் வாலை உள்ளே விட்டுவிடும்.
வங்கிற்குள் உள்ள நண்டு அதைக் கடித்தவுடன்
வெளியே எடுத்துப் போட்டு நரி அதைச் சாப்பிடும்.

அதே மாதிரி, நாம் எங்கிருந்தாலும் சாப அலைகள் நம்மை அறியாதபடி அந்தப் பழி தீர்க்கும் உணர்வாக இயங்கிக் கொண்டிருக்கும். இதைப் போன்ற நிலைகளைலிருந்து மீள்வதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

நான் தியானத்திற்கு வந்தேன். நாம் இதெல்லாம் செய்தேன், ஆனால், எனக்கு இப்படியெல்லாம் ஆகிறதே, இப்படியெல்லாம் போகிறதே என்று விட்டு விட்டீர்கள் என்றால் அது வலு கொண்டுவிடும்.

சாப அலையின் வலு கூடிவிட்டால் ஆத்ம சுத்தியைச் செய்யவிடாத நிலைகள் ஆகிவிடும். அப்படி ஆத்ம சுத்தி உங்களால் செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் கண்டிப்பான முறையில் கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ளவேண்டும்.

தியானம் செய்கின்ற நண்பர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் இதைச் சொல்லி எங்களை அறியாது இயக்கும் சாப அலைகள் நீங்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

உங்கள் உடலில் பதிந்த அந்த சாப அலைகளின் உணர்வுகள் வீட்டிலும் பதிந்திருக்கும். தியானமிருக்கும் நண்பர்களை வீட்டுக்குக் கூட்டி வந்து கூட்டுத் தியானமிருக்கச் செய்யுங்கள்.

இந்தக் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும். இந்த வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும். இங்கிருக்கும் சாப அலைகள் அனைத்தும் அகல வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும் என்று நீங்கள் செயல்படுத்திப் பாருங்கள்.

உதாரணமாக ஒரு கல்லை நாம் தூக்க முடியவில்லை என்றால் பலரும் சேர்ந்து அதைத் தூக்குகிறோம்.

அதைப் போன்று உங்களால் அந்தத் தீமைகளைத் தாங்க முடியாத நிலைகள் இருப்பினும் கூட்டமைப்பை உருவாக்கி கூட்டுத் தியானத்தின் மூலம் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கூட்டி உங்கள் வாழ்க்கையில் இடர்படும் எத்தகைய தீமைகளையும் அகற்றிக் கொள்ளுங்கள்.

இங்கிருந்து எங்கேயோ போய் யாகத்தைச் செய்வதற்கும் மந்திரத்தைச் செய்வதற்கும், எந்திரம் செய்வதற்கும் நீங்கள் பணத்தைச் செலவழிக்கிறீர்கள் அல்லவா.

இங்கே தியானவழியில் உள்ள உங்கள் நண்பர்களைக் கூட்டி
எங்கள் குடும்பத்தில் உள்ள சிரமங்கள் நீங்க வேண்டும்,
எங்கள் தொழில்கள் சிறக்க வேண்டும்
எங்கள் அறியாது சேரும் இருள்கள் நீங்கவேண்டும்
எங்கள் சாப அலைகள் நீங்கவேண்டும்
பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் நாங்கள் பெறவேண்டும்
எங்கள் குடும்பத்தில் ஒன்று சேர்ந்து நாங்கள் வாழவேண்டும்
கணவன் மனைவி ஒற்றுமையுடன் நாங்கள் வாழவேண்டும்
அதற்காக எங்கள் வீட்டிற்கு வந்து தியானமிருங்கள் என்று அழைக்க வேண்டும். இத்தகைய உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்க வேண்டும்.

இந்தச் சக்திகள் உங்களுக்குள் விளையும். உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். நீங்கள் விடும் மூச்சலைகளும் உங்கள் குடும்பத்தில் நன்மை செய்விக்கும் சக்தியாகப் பெருகுகிறது.

ஆகவே, சாப அலைகளிலிருந்து ஒவ்வொருவரும் விடுபட கூட்டுத் தியானம் செய்யுங்கள். தீமைகளை அகற்றும் அருள் சக்தியைப் பெறுங்கள். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து வாழுங்கள்.