ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 8, 2015

நுகரும் ஆற்றலால் உண்டாகும் வெளிச்சம்

காடுகளில் உள்ள உயிரினங்கள் எப்படி வாழ்கின்றது? தான் எப்படி இரை தேடுகிறது? தன்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்கிறது? என்பதை அனுபவரீதியில் அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள் அறிந்து கொள்கின்றனர்.

காட்டு விலங்கினங்களோ இரண்டு மைல் தூரத்திற்கு தன் நுகரும் சக்தியால் அறிந்து, அங்கே தனக்கு உணவு இருக்கிறதென்று நுகர்ந்து அப்பாதையில் தன் உணவிற்காகச் செல்கின்றது.

ஆனால் அது இரவிலே தான் இரை தேடச் செல்கின்றது.

அனைத்து மிருக உயிரினங்களின் உடல்களும் விஷத்தன்மை கொண்டதுதான்.

தன் மூச்சால் நினைவாற்றலை வெகு தூரம் அனுப்பும் பொழுது, அதை நுகர்ந்து தன் அருகிலே வந்த பின் இதனுடைய மூச்சும் அதனுடைய மூச்சும் இரண்டும் மோதும் இடத்தில் வெளிச்சம் தெரிகின்றது.

ஆக, பாம்போ, தேளோ, யானையோ, நரியோ இவை அனைத்திற்கும் இரவிலும் கண்கள் தெரியும். நுகரும் தன்மை வரும் பொழுது இதன் அருகிலே அதற்கு ஒளியும் தெரிகின்றது; வெளிச்சம் தெரியும்.

அதை வைத்துத் தான் மேடு பள்ளம் இவைகளெல்லாம் அறிந்து தனக்குப் பாதுகாப்பாக வைத்து இரை தேடச் செல்கின்றது.

இதைப் போல ஒவ்வொரு உயிரினங்களும், தன் மணத்தால் நுகர்ந்து, வருவதை அறிந்து, அருகில் வந்துவிட்டால் உடனே பாதுகாப்பாக வங்குகளில் (பொந்துகளில்) ஒளிந்து கொள்கின்றது.

ஏனென்றால் இரவிலே உயிரினங்கள் எவ்வாறெல்லாம் வாழ்கின்றன என்பதை அறியச் செய்வதற்காக குருநாதர் இதையெல்லாம் காட்டுகின்றார்.

அதனதன் மணத்தின் அறிவு கொண்டு அறிந்து சென்றாலும், தனக்குள் இருக்கக்கூடிய உணர்வும், தான் எதிர்கொண்டு நுகரும் இவை இரண்டும் மோதும் இடத்தில் அனைத்து உயிரினங்களுக்கும் இந்த வெளிச்சம் வருகின்றது.

ஆனால் மனிதனுக்கோ இரவிலே இருளடைந்து விட்டால் கண் தெரிவதில்லை; நாம் விளக்கை ஏற்றித் தான் அதைப் பார்க்கமுடிகின்றது.

சில பச்சிலைகள் இருக்கும் பக்கம் மிருகங்களோ, விஷ ஜேந்துக்களோ செல்வதில்லை என்பதை அகஸ்தியனின் தாய் தந்தையர் உற்றுப் பார்க்கின்றனர்

இதைப் போன்ற நிலைகளைக் கண்டறிந்து தான் அவர்கள் காடுகளில் விளைந்த பச்சிலைகளை அல்லது விழுதுகளை அரைத்துத் தன் உடலிலே இரவிலே தூங்கச் செல்லும் பொழுது பூசிக் கொள்கின்றார்கள்.

அவர்கள் உடலிலிருந்து வெளிவரக்கூடிய வெப்பத்தால் பூசிக் கொண்ட அந்த மூலிகைகளின் மணம் வெளிப்படுகின்றது.

அப்பொழுது அதை நுகர்ந்தறிந்து வரும் மற்ற உயிரினங்கள், இவர்கள் இருக்கும் திசையை நோக்கி (இவர்கள் பூசிய மூலிகை மணத்தை) நுகர்ந்தால்
அந்த வெளிச்சம் வருவதில்லை.
அவைகளுக்கு இருண்ட நிலை வந்துவிடுகின்றது;

பின் அந்தப் பக்கம் நகர்ந்து செல்வதில்லை. வெளிச்சம் எந்தப் பக்கம் வருகின்றதோ அந்தத் திசை நோக்கி இரை தேடிச் செல்கின்றது.

இது இயற்கையில் செய்த நிலைகள்.

ஆனாலும், பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் தன் வாழ்க்கையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஆறாவது அறிவைப் பயன்படுத்தி எவ்வாறு வாழ்ந்தனர் என்பதை குருநாதர் எமக்கு உணர்த்தினார்.