ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 2, 2014

பிள்ளை இல்லாதவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள் என்று சொல்வதன் பொருள் என்ன....?

1. தாய் தந்தையரை வணங்கிக் குழந்தைகளை ஆசி பெறச் செய்ய வேண்டும்
வாரத்தில் ஒருநாள் கூட்டுக்குடும்ப தியானமிருந்து, தியான முறைப்படி அனைவரும், வீட்டிலிருக்கக்கூடிய மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்கள் சப்தரிஷிமண்டலத்துடன் இணைய வேண்டும், அந்த உயிராத்மாக்கள் ஒளிச்சரீரம் பெற வேண்டும் என்று அந்த குடும்பத்திலுள்ளோர்கள் எண்ண வேண்டும்.

அப்படி எண்ணியபின், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளி, நாங்கள் பெற வேண்டும், என்று உங்கள் உடலுக்குள் நினைத்துவிட்டு,
நம் வீட்டில் அனைத்து இடங்களிலும்
அந்தச் சக்தி படர வேண்டுமென்று,
உங்கள் வீட்டின் பதிவிலே,
நீங்கள் எடுத்துக்கொண்ட அலைகளை,
நம் பூமியிலே ஈர்த்து படரச்செய்கின்றீர்கள்.

அப்படி படரச்செய்தபின், குழந்தைகளும் அம்மா, அப்பா அருளாசியால் "நலமும் வளமும் பெற வேண்டும்’’, ‘’கல்வியில் ஞானம் பெற வேண்டுமென்று" அம்மா, அப்பா அருளாசி பெற நாம் பழகிக் கொடுக்க வேண்டும்.

நம் குழந்தைகள், வெகுதூரத்தில் ஹாஸ்டலில் படித்தாலும், இப்படி எண்ணி விட்டுத்தான் செயல்பட வேண்டும். வாரத்தில் ஒருநாள் கூட்டுக்குடும்ப தியானமிருக்கிறோம் என்ற நினைவை, அவர்களுக்கு ஊட்டிப்பழக்க வேண்டும். இதைப்போல, குழந்தைகளுக்கு நாமும் அந்த அருளாசியைக் கொடுக்க வேண்டும்.

சூரியன், ஒரு குடும்பத்தினுடைய நிலைகளாக, மற்ற கோள்கள் எத்தனை உணர்வுகள் குணங்கள் கொண்டிருந்தாலும், ஒரே அமைப்புக்குள் ஒன்று சேர்ந்து பிரகாசிக்கின்றது.

அதைப்போல, ஒரு குடும்பத்திற்குள் பத்து குழந்தைகளின் எண்ணங்கள் மாறுபட்டிருந்தாலும், தாய் தந்தையை வணங்கும் நிலைகள் கொண்டு,
ஒரே இனமான எண்ணங்களுக்கு வரும் போது
தாயின் சொல்லைக் கேட்கும்.
அந்தக் குழந்தைகளுடைய உணர்வை மாற்றி,
நல்வழியில் இட்டுச் செல்லவும் இது உதவும்.
2. நம் குழந்தைகள்தான் நம்மை பிறவியில்லா நிலை அடையச் செய்ய முடியும்
ஆக, தாய் தந்தையரிடம் அந்தப் பாசங்கள் வளர்ந்தபின், நாம் இந்த உடலை விட்டுச்சென்ற பின், அந்தக் குழந்தைகள் யாம் இப்பொழுது காட்டிய வழிகொண்டு,
தாய் தந்தையருடைய உயிராத்மாக்களை,
சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யும் நிலையாக,
ஒளிசரீரம் பெற வேண்டும் என்று அவர்கள் ஏங்கி,
உடனடியாக விண் செலுத்த வேண்டும்.

எந்தச் சாமியாரும் விண் செலுத்த முடியாது
நம் குழந்தைகள்தான் விண்செலுத்த முடியும்
எந்த ஜோசியமும் நம்மை அனுப்பாது,
எந்த உடலின் சரீரமாக இருக்கிறார்களோ
அந்த குழந்தைகள்தான் விண்ணிலே செலுத்த வேண்டும்.

இன்று விஞ்ஞானிகள் எப்படி அலைவரிசைகளை வைத்திருக்கின்றனரோ, அதேபோன்று தாய் தந்தையரின் உணர்வின் அலைகள்தான், தசைகளாக இன்னும் இங்கு இயங்குகின்றது

அவர்கள் உணர்வின் சத்துக்கள் அணுக்களாக இருக்கும்போது, அந்த அணுவின் உணர்வுகளாகத்தான் இருக்கும். அதன் வழி கொண்டு, நாம் துடிப்பான இருக்கமான தொடர்புகொண்டு, சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின்  சத்துக்களை நாம் பெருக்கி, அவர்களுடன் இணைக்கச்செய்து உயிராத்மாவை விண் செலுத்த வேண்டும். 

அப்பொழுதுதான் அந்த ஒளிசரீரத்தைப் பெறமுடியும்.

இன்று கூட்டுக்குடும்ப தியானம் இருப்போர் அனைவருமே, பௌர்ணமி தியானத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று இணைக்கச்செய்ய வேண்டும்.

பௌர்ணமி தியானத்தன்று, சப்தரிஷி மண்டலம் நம் அருகிலே வருவதனாலே,
இந்தப் புலனறிவுக்குள்
அந்த அலைகளின் எண்ணங்களைச் சிக்கச்செய்து,
உங்கள் ஆற்றலை அதனுடன் இணைக்கச் செய்து,
அந்த ஒளியான எண்ணங்கள் உங்களுக்குள் தோற்றுவிப்பதனாலே,
அடிக்கடி நாம் அந்த எண்ணங்களை எடுக்கும் போது,
சப்தரிஷிகளின் அருள்சக்தியைப்பெற முடிகின்றது

அந்த ஆற்றல் இல்லாதபடி, நாம் எதையுமே அனுப்ப முடியாது அதைப்போன்று, ஒரே உணர்வுகொண்டு எண்ண அலைவரிசையில், ஒவ்வொருவரும் இந்த கூட்டுத்தியான நேரங்களில் எண்ணி, அந்த சப்தரிஷி மண்டலங்களின் அருள்சக்தி பெற வேண்டுமென்று எண்ணி ஏங்கிவிட்டு, இறந்தவர்களுடைய உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டுமென்று, அதை உந்தி அனுப்பவேண்டும்.

அப்பொழுதுதான், அந்த சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல்மிக்க சக்திகளை, நாம் அனைவரும் பெற முடியும்.