ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2014

கஷ்டத்தையும், வேதனையையும், குறையையும் சொல்லக் கூடிய இடம் அல்ல கோவில்

1. கஷ்டத்தையும், வேதனையையும், குறையையும் சொல்லக் கூடிய இடம் அல்ல கோவில்
கோவிலில் நாம் எதை எண்ண வேண்டும் என்று, நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். தெய்வச்சிலையை அங்கு வைத்து,
இந்தத் தெய்வீக குணத்தைப் பெறவேண்டும்,
தெய்வீக சக்தி பெறவேண்டும்,
தங்கத்தைப் போன்ற மங்காத மனம் பெறவேண்டும்,
வைரத்தைப் போன்ற சொல் ஜொலிக்க வேண்டும்,
செயல் ஜொலிக்க வேண்டும், வார்த்தை ஜொலிக்க வேண்டும்,
மலரைப் போன்ற மணம் பெறவேண்டும்,
மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்.
இப்படி மக்கள் அனைவரும் எண்ணுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் கோவில்.

கோவிலில் பார்ப்பது “துவைதம்”.
நாம் எண்ணிப் பெறுவது “அத்வைதம்”.
அப்படி எண்ணும் பொழுது, அந்த
உணர்ச்சிகள் நம்மை இயக்குவது “விசிஷ்டாத்வைதம்”.
அந்த உணர்வின் தன்மை, தீமையை நீக்கும் சக்தியாக உடலாகின்றது” என்பதுதான் கோவிலின் தத்துவம். 

இதுவே ஞானிகள் காட்டிய நெறிகள்.

அந்த ஞானிகள் காட்டிய நெறிப்படி கோவில் என்பது, நம் உடலென்ற கோவிலைச் சுத்தப்படுத்த, புறத்தால் காட்டி, அகத்துக்குள் அருளைப் பெருக்கி, இருளை அகற்றும் ஞானக் கோவில்.

அது ஒவ்வொன்றும் நம்மை அறியாது சேரும் தீயவினகளை நீக்கும் அருள்ஞானக் கோவில். ஆகவே, கோவிலை நாம் மதித்து நடத்தல் வேண்டும். பிறருடைய கஷ்டத்தையோ, வேதனையையோ, சொல்லக் கூடிய இடமல்ல கோவில்.
2. மகரிஷிகள் பிறந்த நாடு - நமது நாடு
இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் ஒருங்கிணைத்து, உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றினான் அகஸ்தியன். அதைப் போல, மனிதனுக்குள் உணர்வின் இயக்கமாக வந்த நிலையை, மனிதரில் ஒளியாக மாற்றிய அருள் உணர்வை நாம் கலந்து, இதைத் தணித்து, உணர்வின் தன்மையை ஒன்றாக்கி, பிறவியில்லா நிலை அடையச் செய்யக் கூடிய ஆலயம் அது.

நமக்குள் அறியாது சேர்ந்த, தீய வினைகளால் ஏற்பட்ட நோய்களை நீக்கும் நிலையாக, ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள். உலகிலேயே இல்லாத நிலைகளை, நம் நாட்டில் அமைத்தார்கள்.
வானவியல், புவியியல், தாவரஇயல், உயிரியலில்
நாம் எப்படி வளரவேண்டுமென்ற தத்துவத்தைக் கூறிய நாடு,
மகரிஷிகள் பிறந்த நாடு.
தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று இருளை நீக்கி, ஒளி என்ற நிலைகள் பெற்று பகைமையில்லாத நிலைகளில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார், துருவ மகரிஷி.

அந்த நிலையைப் பெறுவதற்காகத்தான், ஆலயப்பண்புகளில் “ஏகாதசி விரதம்” என்று வைத்தார்கள். கடைசியாக வைகுண்ட ஏகாதசி என்று, எல்லா கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு என்று, வடக்கு வாயிலை வைத்திருப்பார்கள்.
அந்த அருளைப் பெற்று, ஏகாதசி அன்று ஒன்றுபட்டு இருந்தால், வடக்கு வாயில் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று, அந்த நிலை அடையலாம் என்று தெளிவாக ஆலயப் பண்புகளில் கூறியிருக்கின்றனர்.